Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

தூரன் கவிதைகள்
(ம. ப. பெரியசாமித்தூரன் எழுதிய
கவிதைகளின் தொகுப்பு)
tUran kavitaikaL
by periyacAmit tUran
In tamil script, unicode/utf-8 format




    Acknowledgements:
    Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a PDF of this work.
    The e-text has been generated using Google OCR online tool.
    Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

    © Project Madurai, 1998-2019.
    to preparation
    of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
    are
    https://www.projectmadurai.org/

தூரன் கவிதைகள்
(ம. ப. பெரியசாமித்தூரன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு)


Source:
தூரன் கவிதைகள்
(பெ. தூரன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு)
விற்பனை உரிமை : பாரி நிலையம் 52 பிராட்வே. சென்னை
முதற் பதிப்பு : செப்டம்பர், 1962
விலை ரூ. 6-50
சுதந்திர நிலைய வெளியீடு -1
மாருதி பிரஸ், 83, பீட்டர்ஸ் ரோடு , சென்னை -14.
------------

முன்னுரை

இளமைப் பருவத்திலே காவிரித்தாய் எனக்குக் கவிதைப் பாலூட்டி வளர்த்தாள். எத்தனை எத்தனை நாட்கள் காவிரியின் கவிதை வனப்பிலே உள்ளம் திறை கொடுத்து அந்த நந்தா எழில் அரசியின் மருங்கிலே வெள்ளை மணல் மேடுகளிலும், ஓங்கி வளர்ந்த மரச் சோலைகளிலும், ஆடிப் பெருக்கிலே முழுகித் தேய்ந்து வழுவழுப் பெய்திய சிறுசிறு பாறைகளிலும் அமர்ந்தும், நின்றும் நினை விழந்து கழித்திருக்கிறேன்! தெளிந்து ஓடும் தண்ணீரின் அருகிலே விளையாடி ஈர மணலிலே கட்டிய கோட்டைகள் எத்தனை! கவிதை பொங்கக் கட்டிய மனக்கோட்டைகள் தாம் எத்தனை!

அன்று மலர்ந்த உள்ளம் இன்றும் கவிதையிலேயே பெருமகிழ்ச்சி யடைகிறது; என்றும் அது அப்படியே தான் இருக்கும். மாறினாலோ வாழ்வே முடிந்ததாகவே நான் கருதுவேன். கவிதையில்லாத ஒரு வாழ்வும் வாழ்வாகுமா?

கவிதையின் அன்பணைப்பிலே உயிர் தழைகின்றது; இளமையடைகிறது. அரவவனப்பாலும், சந்தத்தாலும், கற்பனையாலும், உணர்ச்சி வேகத்தாலும், தொனிப் பொருளாலும் உயர்ந்த கவிதை வெளித் தோற்றத்தை ஊடுருவிச் சென்று யாவற்றிற்கும் பொதுவாக நிற்கும் உள்ளுணர்வோடு கலக்கிறது. இந்த ஆன்ம ஒருமைப் பாட்டால் விளையும் அனுபவமே கவிதையின் ஒப்பற்ற சிறப் பாகும். இதை அனைவரும் உணர்ந்து துய்க்கும்படி செய்வதே கவிஞனின் சீரிய பணியென்று நான் கருதுகிறேன்.

சாதாரண வாழ்க்கை நிகழ்ச்சகமள ஒரு பொய் வயப புணர்ச்சியைத் தூண்டுபவையாக இருக்கின்றன. உள்ளத்திலே அலைமோதும் உணர்ச்சிப் பெருக்கும் எண்ணங்களும் இவ்வித வியப்புத் தன்மையைப் பெற் றுள்ளன. இவற்றை உணர்ந்து இவற்றால் கிடைக்கும் வேகத்தையும் சக்திக் கனலையும் சாந்தியென்ற அரணால் சூழ்ந்து அதன் பயனாகப் பெற்ற அமைதித் தெளிவில் உருவாக்கப்படும் கவிதை இப்பணியை வெற்றி யுடன் செய்கின்றது.

காவிரி தந்த உள்ளக் கிளர்ச்சியால் அன்று எழுதிய கவிதை முதல் இன்று எழுதிய கவிதை வரை எல்லா வற்றையும் ஒருங்கு சேர்த்துப் பார்ப்பதே ஒரு தனி இன்ப அனுபவம்.
இம் முயற்சியிலே, சென்று மறைந்த பல நிலைகளிலும் நான் நின்று அந்த நிலைகளை மீண்டும் சுவைக்கிறேன். ஒவ்வொரு கவிதையும் ஓர் இன்பக் காட்சியை, உணர்ச்சிக் கிளர்ச்சியை, கற்பனைக் குமுறலை நினைவின் முன் தெளிவாக நிறுத்துகின்றது. அதில் விளையும் இன்பம், எண்ணப் பெருக்கு, ஆழ்ந்த சிந்தனை, அமைதி இவைகள் தனிப் பட்டவைகள் : ஆன்ம அனுபவங்கள். இவற்றை நீங்கள் என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று ஆர்வத்தோடு அழைக்கிறேன்.
வணக்கம்.

பெ. தூரன்.
-------------------

உள்ளடக்கம் - கவிதைகள்

1. இளந்தமிழா 21. தோற்றம்
2. சேரி விளையாட்டு 22. பிரார்த்தனை
3. அழுங் குழந்தை 23. சத்தியம்
4. பச்சைக் குழந்தை 24. வாழ்க காந்தி
5. குயிற் குஞ்சு25. இருளும் ஒளியும்
6. பூக்காரி 26. அறிவாய் நீ
7. காவிரி 27.அன்னை கையின்
8. கண்ணீர் 28. ஜேய் ஹிந்த்
9. கருக்கரிவாள் 29. நாணம்
10. இளமை 30. மேலே பற
11. காதல் 31. சுதந்திரத் திருநாள்
12. எதிர்பார்த்தல் 32. விலையில்லா மாணிக்கம்
13. அதுவா வெகு தூரம் 33. செல்லடா!
14. மறைந்த ஜோதி 34. கார்த்திகைப் பிறை
15. கவிதைச் சொல் 35. நினைவு அலைகள்
16. கவிக்கனல் 36. சோதனை
17. பொங்கல் 37. அறிவு தெளிந்தேன்
18. அலைகள் 38. மனங்கசந்து போனதுவோ
19. சாந்தி 39. மானிடா எழுக
20. பதில் 40. கடிதம்
---------------
41 நீல மலர்க்கண் 61. பாரதி
42. காந்தி அடிகள் 62. ஆசை இளநங்கை
43. வீரன் வழிநடைப் பாட்டு 63. கண்ணுதல் போல
44. அடிமையின் வேண்டுகோள் 64. ஜயபாரதம்
45. யவனன் பாட்டு 65. அழகு நடனம்
46. யாரது66. கண்ணில்லாமலே
47. வாழ்க்கைப் பிரயாணம் 67. என்றும் பதினாறு
48. அழைப்பு 68. இருளில் மிதந்த நெஞ்சம்
49. அன்பு வழி 69. மாமரக் கன்னி
50. காதலி கடிதம் 70. காதல் நெருப்பு
51. காதல் ஏக்கம் 71. அழிந்த கூடு
52. அவலம் 72. குறை
53. விதி 73. உதிர்ந்த சருகு
54. பெலால் சென் 74. அவள்
55. தியாகம் 75. ஈசல்
56. வீரன் குமரன் 76. தருவாய்
57. கிழவியும் ராணாவும் 77. பதில்
58. பிருதிவிராஜ் - சம்யுக்தை 78. நம்பிக்கை
59. ராதை பாட்டு 79. மலையொன்று
60. எந்தவகை உணர்ந்தீர் 80. காந்தி அண்ணல்
------------
81. நாழியொன்று 101. வந்தனள் அன்னை
82. அமுதம் 102. சிம்ம நாதம் செய்யடா
83. அவள் பார்த்தாளோ? 103. விலங்கு நெறி
84. சுதந்திரத் திருநாள் 104. பெற்ற மனம்
85. ஆகாய விமானம் 105. புயல்
86. வருக அன்னாய் 106. நமது வழி
87. அந்தி வெள்ளி 107. உள்ளம் தளராதே
88. புத்த போதனை 108. சீதக்காதி
89. காதல் 109. பித்து
90. இன்றும் நேற்றாய் 110. இசைவாய்
91. நினைவு 111. மாலை
92. கை வளம் 112. மறந்து வாழ்க
93. கேட்டதும் கண்டதும் 113. மணியோசை
94. வேண்டும் 114. வழிமேல் விழி
95. பெற்ற தனம் 115. குயில்
96. இளமான் 116. வண்ணப் பதுமை
97. அந்தி 117. பாராசாரி
98. குதிரை வீரன் 118. தாரகை
99. அடியடா முரக்ம் 119. எங்கோ ஒரு குழந்தை
100. குறை குடம்120. அமரநற் கவிதை
----------------
121. ஏந்திய கை 147. மழை கண்ட மயில்
122. வானவில் ஊஞ்சல் 148. மகிழ்வேன்
123. நிலாப் பிஞ்சு 149. கெண்டை மீன்
124. கடிதம் 150. பாட்டு
125. காலவெளி 151. சோதியே சுடரே
126. பூவிழந்தபோது 152. சந்திப்பு
127. நான் மறவேன் 153. சத்தியம் ஒன்றே
128. மலர் 154. ஒளியைப் பார்
129. நிலா 155. வீர சுதந்திரம்
130. புத்தாண்டு 156. ஓ மீகாமா
131. காதலிக்கு மாலை 157. எழு கடலும்
132. நீ158. அழகும் அன்பும்
133. ஓங்குக சுடர் 159. காதல் அனல்
134. கணக்கறுமே 160. வேல்
135. அறிவிப்பு 161. ஓடக்காரன்
136. மண்ணாடும் பொன்னாடாம் 162. துரிய நிலை
137. எத்தனை இன்பமடா! 163. ஜய ஹிந்த்
138. பொட்டு நிலா 164. உன் குரல்
139. வேண்டும் 165. உறங்கிடலாமோ
140. தழை மறைவினில் தேவி 166. புது வாழ்வு
141. பராசக்தி அன்னை 167. உறக்கமே துறக்கம்
142. இளந்தாய் 168. கருணை
143. நீங்கா இருள் 169. தோற்றம்
144. வடிநீர்க் கண்கள் 170. இணையிலாக் காதலன்
145. பொன் வண்டு 171. வாழிய உலகம்
146. வாழிய
------------

பெ. தூரன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு
1. இளந்தமிழா


இளந்தமிழா எழுந்திரடா !
        இன்பமெலாம் கொணர்ந்திடுவாய்
வளம் பெருக்கித் தமிழ்நாட்டை
        வானாடாய்ச் செய்திடுவாய்.

காதல் அறம் வீரமெலாம்
        களித்திருந்த மண்ணிதிலே
பேதமையும் ஏழழையும்
        பிழைத்திருக்க விடலாமோ?

குறிஞ்சிமணம் பாரிகொடை
        தொல்புலியின் கொடிஇமயம்
பொறித்திடுமோர் தனிவீரம்
        போகவிட்டு வாழ்வாயோ?

வள்ளுவனும் கம்பனுமே
        வளர்த்தசுவைத் தீந்தமிழின்
தெள்ளமுதம் கொண்டவன் நீ
        சீர்குலையக் காரணமேன்?

கச்சைகட்டி மார்தட்டிக்
        கண்களிலே ஒளிவீசத்
துச்சமெனப் பயந்தள்ளித்
        துணிவுடனே புறப்படுவாய்.

வாழ்க்கையிலே சமத்துவமும்
        மனத்தினிலே உயர்நோக்கும்
மாட்சிமிகும் அறநெறியும்
        ஆட்சி செயப் போரிடுவாய்.

அனைவருக்கும் பொது உரிமை
        அனைவருக்கும் பொதுநீதி
அனைவருக்கும் பொது உடைமை
        ஆக்கிடவே தோள் புடைப்பாய்.

மக்களெலாம் ஓர்குலமாம்
        மாநிலமே ஒருவீடாம்
தக்கநெறி இதுகண்ட
        தமிழன் நீ மறவாதே.

இளந்தமிழா எழுந்திரடா!
        இன்பமெலாம் கொணர்ந்திடுவாய்
வளம் பெருக்கி வையகத்தை
        வானாடாய்ச் செய்திடுவாய்,
-----------
குறிஞ்சி மணம் - மலையும் மலை சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்திற்கு உரியதர்கக் கூறப்படும் காதல் மணம், பாரிகொடை - பாரி என்னும் வள்ளலின் கொடைத்திறமை புகழ்பெற்றது.
மக்களெலாம் ஓர் குலமாம் மாநிலமே ஒரு வீடாம் - யாதும் ஊரே, யாவரும் கேளிர்.
--------------

2. சேரி விளையாட்டு


உப்புப் பொரிந் துதிரும்
        உவர்மண் ணிடிந்த சுவர்
தப்பி நிமிர்ந் தெழுந்தால்
        தலையிடிக்கும் தாழ் கூரை

மக்கி யழிந்து வரும்
        வறுமை வளர் சிறுகுடிசைப்
பக்கத்தில் விளையாடும்
        பாலகனைப் பாரீரோ!

கந்தலொரு கௌபீனம்
        கண்டவுடல் ; மற்றும் அனல்
சிந்தும் வெயில் கடுங் குளிரே
        சிறுவனுக்கு மேற் போர்வை ;

சிரங்கு சொரியுங் கை ;
        செம்பட்டை யான தலை ;
உறங்கி விழுங் கண்கள் ;
        உலர்ந்த சிறு கன்னங்கள்

குந்தியவ னுட்கார்ந்து
        கூவிடவே ஓடியங்கு
வந்த சிறுமி யவள்
        வரிசைதனைக் கேளீரே ;

கந்தல் அவன் ஆடை,
        கன்னிக் கதுவு மில்லை;
இந்த உலகில் வந்த
        இயல்தோற்றம் கொண்டிருந்தாள்

அன்புடனே கூடி அவர்
        அரிதாக மண் சேர்த்துச்
சின்னச் சுவர் எழுப்பிச்
        சிற்றில்ல மாக்கி யதில்

பனங் கொட்டை யொருநான்கு,
        பாதையிலே கண்டெடுத்த
கனங் கெட்ட லாட மொன்று,
        கண்ணாடித் துண்டிரண்டு,

ஓடையிலே போயெடுத்த
        உருண்டைக்கல் லிருமூன்று,
ஓடொன்று கூழ் காய்ச்ச -
        ஒரு குடும்பம் செய்கின்றார்.

மண்ணிலே வீடெடுத்து,
        வாழ்க்கையையே விளையாடி,
என்னென்ன இன்பங்கள்
        இளங்குஞ்சு கண்டாரோ!

பச்சை மனங் கட்டிவைத்த
        பைஞ்சோலை சூழ்மாடம் ;
இச்சையெலாம் ஏவு முன்னர்
        இனிது செயும் ஏந்திழைகள் ;

சிந்தை கவர் ஓவியங்கள் ;
        செயல் மிக்க சிற்பங்கள் ;
கந்தங் கமழுகின்ற
        காமன்மகிழ் பள்ளியறை ;

நளபாகத் தறுசுவையில்
        நல்ல நல்ல உண்டிவகை ;
அளகா புரியது போல்
        அளவற்ற செல்வங்கள்;

காலுக்குச் சோடு; நல்ல
        காசி நகர்ப் பட்டுடைகள் ;
மேலுக்குப் பொன்னணிகள்;
        விதவிதமாய்ச் சுண்ணங்கள் ;

இவை யெல்லாம் கற்பனைசெய்
        தின்பமிகப் பெறுவாரோ?
இவை யனைத்தும் கற்பிக்க
        எவ்வா றறிந்திடுவார்?

கனவுலகிற் காண்பதற்கும்
        கருத்திலவை வேணுமன்றோ?
மனக் கோட்டை கட்டுதற்கும்
        வகையறியா ஏழ்மையினர்!

இடிந்த சுவர் விழுகூரை
        எறும்புவளை பழங் கஞ்சி
மடிந்த வால் பன்றியலால்
        மற்றென்ன கண்டுள்ளார்?

சேரி விளையாட்டு
        சிறுமியவள் அந்தச்
சிறு வீட்டின் உள்ளிருந்து
        உரைத்தாள் ஒரு வார்த்தை ;

"ஓடிவா , கஞ்சி குடி, மண் வெட்டப் போகணுமாம்
        பண்ணையார் ஏசுகிறார்."
இன்பமுள்ள விளையாட்டும்
        இதுதானோ, வேறிலையோ?

வாழ்க்கை தனிற் புகுந்து
        வல்லடிமை தான் செய்து
பாழ்த்த வயிற்றினுக்கே
        பசி தீர்த்து மாயுமுனர்

கள்ளமறி யாக்குழந்தைக்
        கற்பனையில் ஆண்டானாய்
உள்ளமதில் எண்ணியவர்
        உவகையுற லாகாதோ?

துபத்திலே தோன்றித்
        தொழும்பே வடிவானோர்க்
கின்ப விளையாட்டும்
        இல்லையோ இவ்வுலகில் ?
--------

3. அழுங்குழந்தை


(ஒருநாள் மாலையில் உலவப் போன போது வீதியில் தனியாக நின்று அழுதுகொண்டிருந்த குழந்தையைக் கண்டு பாடியது.)

ஆருடைய குழந்தை இது
        அழுதுகொண்டு நிற்கிறதே?
சீருடைய முகம் சிவக்கச்
        சிறுகையால் கண்பிசைந்து
விம்மிவிம்மித் தேம்பி
        விழிநீர் மிகப்பெருக்கி
அம்மம்மா என்று சொல்லி
        அங்குமிங்கும் பார்க்கிறதே!

ஆருடைய குழந்தையிது - அழுதுகொண்டு
        நிற்கிறதே மையிற் படர்ந்த
இருள் மாய்க்கவரும் ஞாயிறுபோல்
        வையத்திருள் வாழ்வை
வளரின்ப மாக்க வரும் தெய்வச்
        சுடர்க்குழந்தை சிரித்த முகம்
வாடிமிக நையக்கண் டால் உள்ளம்
        நடுங்குகின்ற தென்செய்வேன்?
(ஆருடைய குழந்தையிது
        அழுதுகொண்டு நிற்கிறதே !)

கன்னத்தில் முத்துதிரக்
        கவலையிருள் தான் படர
என்னத்துக் காக இந்த
        இளங்குருத்து வாடினதோ?
சின்னஞ் சிறுமொட்டு
        சிரித்து மகிழ்ந் தாடாமல்
கொன்னி இதழ் பிதுக்கிக்
        குலைகின்ற கார்ணம் என்?
(ஆருடைய குழந்தையிது
        அழுதுகொண்டு நிற்கிறதே !)

பூவுலகைப் பார்க்கவந்த
        பொன்னாட்டுத் தூதெனவே
மேவுமிளங் குழந்தையழ
        விடலாமோ? விண்ணோர்கள்
தாமிதனைச் சகிப்பாரோ?
        தடத்தருகே மைந்தனழத்
தேவியரன் தன்னோடும்
        தேடிவந்த தறியீரோ ?
(ஆருடைய குழந்தையிது
அழுதுகொண்டு நிற்கிறதே !)
---------

4. பச்சைக் குழந்தை


பச்சைக் குழந்தை என்றால் - எனக்கொரு
        பாசம் பிறக்குதம்மா - அதன்
கொச்சை மழலையிலே - உளந்தான்
        கொஞ்சிக் களிக்குதம்மா
சின்னஞ் சிறு சிரிப்பில் - கவலைகள்
        தேய்ந்து மடியுதம்மா - அதன்
மின்னும் உடல் வளைவில் - அமுதின்
        விண்சுவை ஏறுதம்மா

வண்ணச் சிறு விருந்தை அன்பில்லா
        வார்த்தைகள் சொல்லாதீர் -- அதன்
கண்ணில் கலக்கம் என்றால் - என்னுள்ளம்
        கன்றிக் கரையுமம்மா
தெய்வப் புது மலரை - என்றுமே
        சீறி விழிக்காதீர் - அதன்
மெய்யில் அடியும் பட்டால் - என்னுள்ளம்
        வெடித்துப் போகுமம்மா

ஆட்டமும் காட்டிடு வீர் - குழந்தையை
        அன்பில் வளர்த்திடு வீர் - அதன்
வாட்டமெலாங் களைந்தே இன்பத்தில்
        மரலச் செய்திடு வீர் அன்பில்

மலர்ந்து விட்டால் - இளம்பூ
        ஆனந்தத் தேன் சொரியும் - அதன்
இன்பப் பெரு வாழ்வே - நமக்கினி
        என்றும் இனிப்ப தம்மா

--------------

5. குயிற் குஞ்சு


(ஆண் குயில் இனிமையாகப் பாடுகிறது. பெண்குயில் அதைக் கேட்டு இன்பத்தில் மூழ்கியிருக்கிறது. பாடுவதற்கும், அதைக் கேட்டு மகிழ்வதற்கும் அவை கற்றுக்கொண்டிருக்கின்றனவே ஒழியக் கூடு கட்ட அவை கற்றுக்கொள்ளவில்லை. முட்டையிடு கின்ற பருவத்திலே பெண் குயில் தந்திரமாகக் காக்கையின் கூட்டிலே முட்டையைச் சேர்த்துவிடும். ஆண் குயிலும் அதற்குத் துணை புரிவதுண்டு. காக்கை அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும். அன்புடனே குஞ்சுகளைப் பேணி வளர்க்கும். ஆனால் அந்தக் குஞ்சுகள் தன்னுடையனவல்ல வென்று கொஞ்சம் சந்தேகம் வந்துவிட்டாலும் தாயாகவிருந்த அந்த மூடக் காக்கை பேயாக மாறி அவற்றைக் கொத்திக் கொன்றுவிடும். அவ்வாறு கொத்துண்டு குருதிதோய வேப்பமரத்தடியில் இறந்து கிடந்த குயிற் குஞ்சொன்றைப் பார்த்தபோது இந்தப் பாடல் உருவாயிற்று.)

கரும்பட்டுப் போன்றவுடல்
        கைவளராப் பூங்குஞ்சு
விரும்பிக் கவி மகிழும்
        விண்பாட்டின் மெல்லரும்பு

வாடிக் களையிழந்து
        வாய் திறந்து மாண்டிடவே
மூடச் சிறுகாக்கை
        மூர்க்கமுடன் கொத்திற்றோ?

கருவண்ண க் கருமூக்கி
        கருமனத்துக் கருங்குரலி
பெருமையாய் வளர்த்துப்பின்
        பிணமாகச் செய்ததென்னே?

மாமரத்தில் இசைக்குயிலன்
        வண்ணமொழி தான் கேட்டுத்
தேமதுரப் புதுக்குரலில்
        சிறுவீணை மீட்டினையோ?

கந்தருவப் பண்கேட்டுக்
        கண்ணொற்றைக் காகமது
சிந்துந்தே னிசை வடிவைச்
        சிதைத்திட்ட தையையோ!

கனவுலகம் தோற்றுவிக்கக்
        காமனார்
இனியிங்குத் தோன்றிடுநல்
        லிளவேனில் அழகடைய

ஓங்கு மூன்றன் பாட்டெல்லாம்
        உலகறியா தடங்கினவே
வேம்பின் கிளையொன்றில்
        வீடுசெயக் கண்டுவந்த

சோம்பற் சிறுகுயிலி
        சோரஞ்செய் திடுமுட்டை
தாங்கிய யடைகாத்துத்
        தன் மகவாய்ப் பேணிமிக்க

கறுத்த உடல் வளரக்
        கண்குளிர நோக்கிப்பின்
இனித்த குரல் கேட்டு
        இப்பெரிய கோபமும் ஏன்?

நடுங்கியுயிர் போமுன்னே
        நல்லிசையன் பட்டதுயர்
கொடுமூக்காய் எப்படித்தான்
        கூசாமற் பார்த்தனையோ

தேடி யிரைகொணர்ந்தாய்
        திசையெல்லாஞ் சென்றலைந்தாய்
வாடிப் பசித்திருந்தே
        வந்துணவு தான் தந்தாய்

தாயென் றுனைமதித்துத்
        தண்ணமுத வாயெடுக்கப்
பேயைப்போலானதுமேன்
        பெருந்தலைச்சி நீதானே?

அன்புதனை யல்லால்மற்
        றறியாத பைங்குழலும்
துன்பப் பெருமூக்கால்
        துளைபட்டுப் போயிற்றே!

வசந்தத்தின் தூதுவனை
        மாஞ்சோலை யின்னிசையைக்
கசந்த மனத்தாலே
        காக்கை கடித்த தந்தோ!

தன்னைப்போற் சிறப்பில்லாத்
        தன்மையரை நேசித்து
மன்னுந் திறம்படைத்த
        மாண்புடையார் மேலெரிச்சல்

கொள்ளும் உலகத்துக்
        கூட்டத்தில் காகமொன்றோ?
உள்ளம் புழுங்கியவர்
        ஓங்குதிறன் தான் நசுக்கும்

சின்னத் தனமெல்லாம்
        தெரிகின்ற திங்கேயும்
வண்ணப் பறவைகளின்
        வாழ்க்கையிலும் இதுதானோ?

என்றே உலகத்தில்
        எல்லோரும் ஒருமனதாய்
நன்றான சீர்த்திறனை
        நனியோங்கப் போற்றிடுவார்?
-----
கைவளரா- பறவைக்கு இறக்கைகளே கைகள். விண் பாட்டின் மெல்லரும்பு விண்ணிலிருந்து வரும்
கந்த ருவ கரனத்தின் மெல்லிய அரும்புபோன்றது அந்தக் குயிற் குஞ்சு.
------------

6. பூக்காரி


முல்லைப்பூ என்று சொல்லி
        முல்லை நகை தான் மலர
மெல்லியலாள் அன்னம் போல்
        வீதி வழி தானடந்தாள்.

சாயம் விட்ட பழஞ்சேலை
        தையல் மிகக் காணுகின்ற
தேயும் முகிற் கந்தையிலே
        சேர்ந்தசைந்த மின் போன்றாள்;

பூவுலகோர் பரவசமாய்ப்
        புகழ்ந்தோதும் அஜந்தாவின்
ஓவியமாம் பெண்ணொருத்தி
        உயிர்பெற்று வந்தது போல்

கக்கத்தில் சிறு கூடை
        கையொன்றில் தானிடுக்கிப்
பக்கத்தில் ஒரு கையைப்
        பாங்குடனே வீசி வந்தாள் ;

நெற்றியிலே செம் பொட்டு,
        நீள்விழியில் கவியமுதம் ;
கற்றையிலே சேர்குழலாம்
        காரிருளின் குடியிருப்பு;

மாமதுரைச் சிலையழகில்
        வடித்தெடுத்த நாசிமலர் ;
தேமதுரக் கிண்ணியெனச்
        சிரித்தவாய்; செவ்விதழ்கள் :

பொற்கலைஞர் கைத்தொழில்கள்
        புகுந்தறியா நற்செவிகள் ;
விற்புருவம் தான் வளைத்து
        விழியம்பு பாய்ச்சி வந்தாள்.

வானத்திலே தோன்றும்
        மணிவில்லும் கீழிறங்கி
மானிலத்து நடந்ததுவோ?
        வடிவுகொண்ட பேரெழிலோ?

சேரன் திருநாட்டுச்
        செல்வியரின் பொன்னிறத்தாள்
மாரனுக்கு வாய்த்த புது
        வாளியெனத் தானசைந்தாள்.

செந்தாழம் பூமேனி
        சேர்ந்த பெரும் பாக்கியத்தால்
கந்தைக்கும் ஓரழகு
        கன்னியவள் தான் கொடுத்தாள்.

முல்லைப்பூ என்ற சொல்லால்
        மோடி வித்தை உச்சரித்து
ஒல்லையிலென் னுளம்பற்றி
        ஓடி மறைந்து விட்டாள்.

பூவொன்றும் வாங்கவில்லை ;
        பூவையுடன் பேசிடவே
நாவொன்றும் எழவில்லை ;
        நடுகல்லாய் நின்றிருந்தேன்.

சென்றவளை மீண்டுமினித்
        தெருவழியே காண்பேனோ?
வென்றவளை வென்றுள்ளம்
        மீட்டிங்கு வாழ்வேனோ?

செப்புத் தகட்டிற்குத்
        தேன்மலரைத் தருவதுபோல்
ஒப்பித்தன் உளமென்றன்
        உளத்திற்கா யீவாளோ?
---------------

7. காவிரி


[குமரப் பருவத்திலே காவிரிக் கரையிலே நான் கழித்த நாட்கள் எத்தனையோ! ஒருநாள் மாலை வேளை யிலே அங்கு செல்லாது போனாலும் பெரியதோர் ஏமாற்றமாக இருந்தது அப்பொழுது தனித்தும் தோழர்களுடனும் சென்று ஏதேதோ இன்ப எண்ணக் கோட்டைகள் கட்டிக்கொண்டிருப்பது எனக்கு அள வில்லா மகிழ்ச்சியைத் தந்தது. பிற்காலத்தில் காவிரி யருகிலே யல்லாமல் வேறி டங்களிலே வாழ நேர்ந்ததால் இந்த வாய்ப்பு வெகு அரிதாகவே கிடைக்கும். பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் ஒருமுறை காவிரியருகில் தோழர்களின்றித் தனி யாக உலாவ நேர்ந்தபோது எழுந்த எண்ணங்கள் இக் கவிதையில் உருவாகியுள்ளன.]

இளமைக் கனவுத்தேன்
        என்னுளத்தே பாய்ச்சிவிட்ட
வளமை சுரந்துவரும்
        வளர்வனப்புக் காவிரியே!

வெள்ளை மணற் பரப்பினிலும்
        விரியு மலர் மருங்கினிலும்
துள்ளு புனற் பாட்டினிலும்
        தோழருடன் நான்கழித்த

கனலெழுப்பும் சீரிளமைக்
        காலத்தை எண்ணி எண்ணி
மனங் குழைந்து நிற்கின்றேன்
        மறதியென்றும் கொண்டதில்லை.

மணற்கோட்டை எத்தனையோ
        மனக்கோட்டை எத்தனையோ?
அணிற் பிள்ளை களைப்போல
        ஆடல்களும் எத்தனையோ?

கன்னிக் கவின் மாறாத
        காவிரிப் பூங் கவிப்பெண்ணே !
என்னென்ன நினைப்புகளோ
        என்னென்ன ஆசைகளோ

கொள்ளத் துணைபுரிந்தாய்;
        கூட்டின்பச் சுவையேறக் கள்ளமிலா
உள்ளங்கள்
        கலந்திடவே நடம்புரிந்தாய்.

பத்துடனோ ரைந்தாண்டு
        பறந்துவிட்ட பின்னரின்று
கத்து குயிற் குழலிசையின்
        களியோங்க நடக்கின்ற

உன்றனை நான் காணவந்தேன்:
        உணர்ச்சியெலாம் மீண்டனவே.
அன்று கண்ட குமரியடீ
        அதிலொன்றும் ஐயமில்லை,

நந்தா எழில் அரசீ
        நாணமுடன் உடல் வளைத்துச்
சிந்தா முறுவலுடன்
        செல்கின்றாய் காவிரியே!

எண்ணமெலாம் கொண்டுவந்தாய்;
        என்னிளமை கொண்டுவந்தாய்;
தண்ண முதம் தனக்கு ருசி
        தான் கொடுக்கும் தோழமையில்

கூடியவர் தமையெல்லாம்
        கொண்டுவந்தா லாகாதோ?
வாடியிங்கு நான் தனியாய்
        வருந்துவதைக் காணாயோ?

மூன்றுடலும் ஓருயிராய்
        முடிந்தபெரு நட்பினுக்குச்
சான்றுனைப்போல் யாருண்டு?
        சாய்பொழுதின் காலமெலாம்

முடிவில்லாப் பேச்சினிலும்
        மோன உளத் துடிப்பினிலும்
வடிகின்ற பேரன்பை
        வரையாது பார்த்தாயே!

உன்னழகு நீண்டதுபோல்
        உளத்துடிப்பும் நீண்டிருக்க
மன்னியவெம் பிரிவினில் நான்
        மயங்குகின்றேன் காவிரியே.
------------------

8. கண்ணீர்


முத்தெனவே பிதுங்கிவரும்
        மோகனத்துக் கண்ணீரே
முத்தினுக்குங் கண்டறியா
        எத்தனையோ மதிப்புடையாய்
பைங்கிளிச்சொல் மங்கையரின்
        பாசுபதம் நீயலவோ?
அங்குனைத்தான் எதிர்த்து வெல
        ஆற்றல் மிகும் படையுண்டோ ?
உள்ளத் துணர்ச்சிக்கோர்
        உருக்கொடுக்கும் நல்மணியே!
கள்ளவிழும் கோதையர்கள்
        கண்ணகத்தே வலிபெறுவாய்.
ஆடவர்கள் தங்கண்ணில்
        அனைவருக்கும் ஏளனம் நீ
வாடிநைந்த அடியாரின்
        வளர்பக்தி வெள்ளம் நீ
வஞ்சகத்தின் கண்களிலே
        மதிமயக்கும் நாடகம் நீ
பஞ்சையுளக் குழந்தையரை
        நெஞ்சணைக்கச் செய்வாய் நீ.
காதலியின் கண்களிலே
        கண்டுவிட்டால் உலகனைத்தும்

மோதிமிதித் தழித்திடுவேன்
        முத்து திரத் தான் சகியேன்
என்றுபல வீறுரைக்க
        இளைஞர்களைத் துண்டிடுவாய்
உன்றன் பெருமையெலாம்
        ஓதிடவே சொல்லுண்டோ ?
வீரன் விழிகளிலே
        வெட்கமிலாக் கோழைமை நீ
உறுதியெலாங் குலைத்திடுமோர்
        ஒப்பிலாப் பெண்படை நீ
உள்ளத் துயரமெலாம்
        ஒரு சேர்த்துத் தான் கரைத்து
மெள்ள வெளியேற்றும்
        வித்தையறி பனிச்சொட்டே!
துன்பத்தின் கேணியிலும்
        சுரந்திடுவாய்; அன்றிமிகும்
இன்பத்தின் உச்சியிலும்
        எங்கிருந்தோ தோன்றிடுவாய்;
மாயவித்தைக் கண்மணியே!
        வற்றியறி யாஊற்றே
பாயுமருட் கருணையெனும்
        பயிர்வளர்ப்பாய் வாழிய நீ!
----------------

9. கருக்கரிவாள்


கருக் கரிவாள் கைக் கொண்டே
        கழனி செலும் இள நங்காய்!
அறுத்து விட்டாய் என் உளத்தை
        அஞ்சனக் கண் வாளாலே ;

கபடமில்லா நேர் நோக்கால்
        கனல் பாய்ச்சும் பெண் மானே,
உபமானம் ஒன்றில்லா
        உயர்வதனப் பைங்கிளியே.

பூச் சூடிய கொண்டை
        புலன் ஐந்துந் தான் மயக்கப்
பாச்சான் கொடி இலைபோல்
        பசுமை கொண்ட சிற்றாடைக்

கற்றைக் கொசுவமது
        கலைந்தே சரிந்தாட,
ஒற்றை வடச் செம்பவளம்
        உவந்தேறி ஆடிவரும்

அங்கி தனைக் கண்டறியா
        அங்கலசம் சிறிதசையப்
பொங்கி வரும் இயல் அழகுப்
        புன்னகையாய் போகின்றாய்...

எட்டிக் களை பறிக்கும்
        இடமெல்லாம் நிற்கேனோ ?
கட்டி மண்ணை நீ உடைக்கக்
        கைத்தடியாய் ஆகேனோ?

ஏறுகின்ற வெயில் தணிக்க
        இன்னிழலாய்த் தழுவேனோ?
மீறுகின்ற காதலுடன்
        மெல்ல மொழி பேசாயோ?
---------
கருக்கரிவாள் - ரம்பம் போன்ற வாயை உடைய அரிவாள்; நெல் முதலிய பயிர்களை அறுக்க உதவுவது.
பாச்சான் கொடி - ஒருவகைச் சிறுமரம் - பசுமையான கொடி போன்று அதன் இலை இருக்கும்.
------------

10. இளமை


ஆடியெழும் நாகமதை அடிமிதிக்குங் காலம்
அளவில்லா உயர்எண்ணம் அனல் வீசுங் காலம்
தேடரிய கலையெல்லாம் நாடுகின்ற காலம்
தீஞ்சுவைசேர் கவிக்கனவில் சிறந்திருக்கும் காலம்

எண்ணவொணா இடையூற்றை எதிர்த்து நிற்குங் காலம்
எட்டாத கொம்பெனினும் ஏற எழுங் காலம்
கண்ணிமையில் மங்கைபணி காட்டுகின்ற போதே
காலனையும் நேர் நோக்கும் கட்டிளமைக் காலம்

வெற்றியெலாம் பற்றிக்கை வீசுகின்ற காலம்
விண்ணாடாய் உலகாக்க விரும்புகின்ற காலம்
பற்றவரும் தோல்விகளைப் பயமுறுத்துங் காலம்
பண்பெல்லாம் பொங்கிளமைத் திண்காலந்தானே

தாழ்வினையும் சூதினையும் தாங்கறியாக் காலம்
தலை நிமிர்ந்து தோள் புடைத்துச் சதுர்பேசுங்காலம்
வாழ்வினிலே கசப்பேறா வளரிளமைக் காலம்
வாழியவோ வாழியாதன் மாண்பெல்லாம் வாழி!
-------------

11. காதல்



கொன்றை அனல் பூத்துக் குயில் வாடுங் கார்காலம்
கன்றி உளம்நைந்து காதலர் தம் பிரிவஞ்சும்
இருளுக் கிருள் போர்த்த இறுதியிலா இரவொன்றில்
கருமை வளர்ந்துவரும் புரவி தனிலேறி
நான் போகும் வேகம் நளனாலு மாகாதே;
கான்யாறு தான் கடந்து காதலியின் வீடு சென்றேன்;
எல்லாரும் தூங்குகிறார். ஏதும் தடங்கலில்லை;
செல்லாமற் சென்றேன், தீங்குழலின் பேச்சுடைய
நங்கை உறங்கும் நல்லறைக்கு நேராக.
அங்கே எனக்காக அவள் காத்து நின்றிருந்தாள் ;
கண்டேன் களிதுள்ளக் கட்டித் தழுவிடவே
செண்டாகத் தாவினேன்; கண்துயின்ற கட்டில் விட்டு
மெய்யாக வீழ்ந்தேன்; விழித்திட்டேன் -
ஐயோ , கனவே! ஆசையெல்லாம் பொடித்தாயே.
---------
கொன்றை அனல் பூத்து - கொன்றை கார்காலத்திலே பூக்கிறது; அதன் பூ அனல்போல
விளங்குகிறது.
நளனாலுமாகாது - வேகமாகக் குதிரையைச் செலுத்து வதில் நளன் புகழ்பெற்றவன்.
--------------

12. எதிர்பார்த்தல்



[பல நாட்களாக நாயகனைப் பிரிந்திருக்கிறாள் ஒரு தலைவி. வேலையாக அவன் வெளியூர் சென்றிருக் கிறான். ஒருநாட் காலையிலே திரும்பி வருவதாக அவனிடமிருந்து சேதி கிடைக்கிறது. அந்த இன்ப நாளுக்கு முந்திய நாளிரவிலே தலைவிக்கு உறக்கம் கொள்ளவில்லை. முழு நிலா இரவெல்லாம் அவளை வருத்துகிறது. அந்நிலவையே நோக்கி நெட்டு யிர்த்து இரவைக் கழித்த தலைவி அதிகாலையிலே ஒளிகுன்றி மறையும் நிலவைப் பார்த்துக் கூறுவதாகக் கவிதை.]

மேனி வெளுத்து
        மறையும் நிலாவே ,
நாளை யார் நின்செலவு
        இரவெலாம் நோக்குவார்?
உலகம் குளிர்வித்து
        என்னுளம் சுட்டாய்
செல்லுதி!
பொற்கிரணங்கள்
        கீழ்த்திசைப் படர்ந்தன;
நற்பொழுதோடு
        நாயகன் வருவரால்.
-----------------

13. அதுவா வெகுதூரம்


"குங்மப் பொட்டணிந்து
        கூடைதலை மேல் வைத்தே
பொங்கும் நகைப் பால்காரி
        அங்கலசம் சிறிதசைய
எங்கோதான் செல்லுகின்றாய்
        எனக்கறியக் கூறாயோ?"
"அதுவா வெகு தூரம்
        இதுநாளும் போயறியேன்."
"வார்த்தை மிகப் பொழிந்து
        மன்பதையின் மனங்குழப்பிக்
கீர்த்திமலை ஏறிநிற்கும்
        கீழ்மேல் நாட் டரசியலின்
மூர்த்திகளே நீர் நவிலும்
        மோகன நா டெது சொல்வீர்."
"அதுவா எதுவென்றே
        அறிவதற்கு நேரமெங்கே ?"

"அண்டமுக டதன்மேலும்
        அணுக்கருவின் உள்ளேயும்
கண்டறிந்த சேதிகளைக்
        காட்டிவரும் விஞ்ஞானி
மண்டியவுன் வலிப்பெருக்கால்
        வகுத்தவின்ப நாடெதுவோ?"
"அதுவா வெகுதூரம்
        ஆராய்ச்சிக் கெட்டவில்லை."

“வண்ணம் பலகுழைத்து
        மனக்கனலைத் தீட்டியதில்
பண்ணும் பரதமுமாய்ப்
        பரந்த எழில் தான் கூட்டும்
எண்ணரிய ஓவியனே
        எவ்வுலகம் நாடுகின்றாய்?"
"அதுவா வெகுதூரம்
        இதுவரையும் காணேன் நான்."

"இன்பக் கனவையெல்லாம்
        எழுத்தால் வடித்தெடுத்துத்
துன்பமெனும் சொல்லொழியத்
        துணிந்து பெருங் கவிபுனையும்
அன்பனே நீநோக்கும்
        அவ்வுலகம் எது சொல்வாய்?"
"அதுவா வெகுதூரம்
        ஆர்வமுடன் தேடுகின்றேன்."

"வானவர்கள் தாமறியா
        வாழ்வதனை எட்டிவிட
ஊனுடலை மிகவாட்டி
        ஓங்குதவம் தான் புரிந்து
கானுறையும் முனியே நீ
        கானவிழை நாடெதுவோ?"
“அதுவா வெகு தூரம்
        நிதந்தேடி யலைகின்றேன்."

"அந்தமிலா தண்டங்கள்
        ஆக்கியழித் தமையாதாய்
எந்த நல்ல திருவுலகை
        எண்ணகத்தே கொண்டுள்ளாய்
முந்துமறைத் தனிமுதலே
        மொழிந்தருள்க நானறிய"
"அதுவா இதுகாறும்
        ஆகவில்லை என் படைப்பில்."
---------------

14. மறைந்த ஜோதி


[1948 ஜனவரி 30 ஆம் தேதி. பாரதத்தின் தனிச் சோதியாக விளங்கிய காந்தியடிகள் ஒரு வெறியனுடைய துப்பாக்கிக் குண்டால் வீழ்ந்தார். பாரதம் கலங்கித் துடித்தது. உலகமே கண்ணீர் வடித்தது. பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியான 'காலச் சக்கரம்' என்ற பத்திரிகை இதழில் இப்பாடல் வெளியாயிற்று. ]

சொல்லெங்கே சொல்லெங்கே
        சொல்லவொணாத் துயரத்தைச்
சொல்ல வந்தேன் சொல்லெங்கே?
        சொல்லடங்காத் துன்பமந்தோ !

தூயவனை உத்தமனைச்
        சுட்ட பெருங் கொடுமையினை
வாயுரைக்கத் தான்வருமோ?
        வார்த்தைகளும் நடுங்கினவே!

அந்தோ பேர் அநியாயம்
        அவனிக்கோர் தனிச்சோதி
மங்கி யவிந்ததுவோ
        மதியிழந்த பாதகனால்.

பாரதத்தின் தனிப்பெருமை
        பாருக்கோர் வழிகாட்டி ;
சீரிழந்த மக்களுக்குச்
        சிந்தையிலே நல்விளக்கு;

யாருக்கும் அன்புடமை
        யாருக்கும் நல்லுறவு -
மார்பினிலே குண்டேறி
        மாய்ந்திடவோ மாய்ந்திடவோ!

காந்தி மறைந்ததுவோ
        காசினியின் கண் போச்சோ?
ஏங்கித் தவித்திருந்த
        இந்தியரைக் கரை சேர்த்த

ஓங்குபுகழ் மாலுமிதான்
        ஓய்வெடுக்கச் சென்றானோ ?
பாங்கிழந்த பாரதத்தே
        பணியெல்லாம் தீர்ந்ததுவோ?

அன்பென்று பேசியங்கே
        அன்றொருவர் வந்திருந்தார் --
நெஞ்சினிலே ஆணியிட்டு
        நீசர் வதைத்திட்டார்.

அன்பென்று சொல்லியிங்கே
        அண்ணலிவன் இன்று வந்தான் -
நெஞ்சத்தில் ஈயமிட்டு
        நிலைகெட்டோன் கொன்றிட்டான்.

புத்தனைப் போல் அன்புருவாய்
        வாழ்ந்திருந்த புண்ணியனைச் -
சித்தனைப்போல் பற்றற்றுச்
        சேவை செய்த காந்தியினை

முத்தனைப் போல் ஆன்ம ஒளி
        மூண்டு நின்ற மோகனனைச்
சத்துருவொன் றறியாத
        சாதுவினை யிழந்தோமே!

புழுதியிலே தான்கிடந்து
        புரண்டழுத மக்களையே
விழித்தெழுந்து தலை நிமிர்ந்து
        மேன்மையுறச் செய்தவனைப்

பழியில்லா அறவழியால்
        பாரதத்தை மீட்டவனை
இழந்தாயே எந்நாடே
        இணையில்லாத் தந்தையினை!

பாருக்கு வழிகாட்டும்
        பாரதமென் றேவுனைத்தான்
ஆருரைப்பார் இனிமேலே
        அகலாத பழிகொண்டாய்.

வீரத்தின் விளக்கவிய
        வெறியிங்கே தோன்றியதே!
தீராத கறையுனக்குச்
        சேர்ந்ததுவே என் தாயே!

அன்பிற்கே உயிர் வாழ்ந்தான்
        அன்பிற்கே உயிரீந்தான்
அன்புப் புதுச் சுடராய்
        அகல் வானில் நின்றிடுவான் ;

என்றந்தக் குரல் கேட்போம்
        இளஞ்சிரிப்பில் மகிழ்ந்திடுவோம்?
கன்றியுளம் நைந்தோம்
        கதிகலங்கி வாடுகின்றோம் ;

என்றாலும் சோதரரே
        எண்ணம் துணிந்திடுவீர்
சிந்தை கலங்காதீர்
        செயலற்று நிற்காதீர்;

தந்தையவன் சாவானோ
        சாவுமவனைத் தொடுமோ?
என்று மவன் வாழ்ந்திடுவான்
        எம்மிடையே தங்கிடுவான்.

பொன்னுடல் தான் போயிடினும்
        புகழுடம்பில் வளர்ந்திடுவான்;
நூறாண்டு வாழ்ந்திடினும்
        நூற்றிருபத் தைந்தெனினும்

மாறாயியற்கை யிது
        மண்பாண்டம் வீழ்ந்திடுமால் -
நூறாண்டு சென்ற பின்னர்
        நூறு மடங் கோங்கியவன்

மாறா இளமையுடன்
        வாழ்ந்திருக்கக் காண்பீரே.
ஆதலினால் வாடாதீர்
        ஆறிமனம் தேறிடுவீர்

சோதரரே காந்தியினைத்
        தூய்மையுடன் நெஞ்சகத்தில்
வீற்றிருக்கச் செய்வீரே
        மேலோன் உபதேசம்

காற்றுத் திசையினிலே
        காதோடே போகாமல்
வாழ்க்கையிலே நல்லொளியாய்
        வழிகாட்ட முன்னடவீர் ;

ஏழ்மையிலும் தாழ்மையிலும்
        இன்பமிகுங் காலத்தும்
எக்காலும் கைக்கொள்வீர்
        எங்கும் பரப்பிடுவீர்.

அறிவால் வளர்ந்தோங்கி
        அணுவைப் படையாக்கும்
திறமாம் செருக்கினிலே
        அன்புள்ளம் சிறுத்திட்ட

அவனிதான் அழியாமல்
        அவன் வாக்கே காத்திடுமால்;
புவிமீதிற் சமத்துவ நற்
        புதுவாழ்வை நாட்டிடுமால் ;

எண்ணத்திற் காந்தி மகான்
        என்றும் மறையாமல்
திண்ணமாய்க் காத்திடவே
        சேர்ந்திடுவீர் சோதரரே.
--------
அன்பென்று பேசியங்கே அன்றொருவர் வந்திருந்தார் - அன்பு பேசி வந்தவர் இயேசு கிறிஸ்து. நூற்றிருபத்தைந்தெனினும் - காந்தியடிகள் தாம் நூற் றிருபத்தைந்து ஆண்டுகள் வாழப் போவதாகக் கூறிக்கொண் டிருந்தார். நூற்றைம்பது ஆண்டுகள் வாழ்வதாகவும் அவர் கூறிய துண்டு .
-------------

15. கவிதைச்சொல்


[உள்ளத்திலே பல சமயங்களில் எத்தனையோ உயர்ந்த எண்ணங்கள் தோன்றுகின்றன. மக்களுடைய இன்பத்திற்கும் மேம்பாட்டிற்கும் அவை உகந்தவை. எல்லோருடைய உள் எத்தையும் கவருமாறு அவற்றையெல்லாம் அழகான சொற் களாலான சிறந்த கவிதைகளாக வெளியிட முடியுமானால் எத்தனை நன்மை பயக்கும்!
உயர்ந்த எண்ணங்கள் உள்ளத்திலே எழுகின்றன - எப்படி ? உருவறியா ஓவியங்கள் போல ; பண்ணின் எழில் வீச்சுப்போல - கற்பனா சக்தி மிகுந்த இசைவாணன் ஒருவன் ஓர் இராகத்தை விரிவாக ஆலாபனம் செய்யும் போது அதன் சஞ்சாரத்தில் ஆங்காங்கே மின்னுகின்ற இராக பாவங்களைப் போல.
பைந்தருவின் நீழல் - பச்சைமரத்தின் அடியிலே நிழல். அந்த நிழலிலே ஒரு தண்மை இருக்கிறது. வெய்யிலில் வாடி வந்தவன் அது தருகின்ற இன்பத்தை உணருகிறான். ஆனால் அந்தத் தண்மை உருவில்லாது எங்கோ மறைந்து நிற்கிறது, அதுபோல.
எண்ணப் பெருங் குகையில் இருள் படிந்த மூலையிலே உயர்ந்த கருத்துக்கள் இப்படி உருவறியாது எழுகின்றன.

அஜந்தாக் குகை ஓவியங்கள் பல ஆண்டுகள் கண்ணிற் குப் புலப்படாது மறைந்திருந்தன. ஆனால் அவை இன்று உலகத்தையே கவருகின்றன. எண்ணங்கள் அவ்வாறு உருப் பெற்று வெளிப்பட்டுப் பலரையும் கவரவேண்டும். அவற்றிற் கேற்ற கவிதைச் சொல் வேண்டும். ]

பண்ணின் எழில் வீச்சில்
        பளிச்சிடுமின் தோற்றம் போல்
பைந்தருவின் நீழலிலே
        படிந்துள்ள தண்மையைப் போல்

எண்ணப் பெருங்குகையில்
        இருள் படிந்த மூலையிலே
எழுந்தாடும் உருவறியா
        ஓவியங்கள் எத்தனையோ!

வண்ணக் கருத்தும் உயர்
        வாய்மை நிறை லட்சியமும்
வடிவில்லா தேங்கினவே
        வாய்த்தசொலைக் காணாமல்

மண்ணிற் குரம் ஊட்டும்
        விண்ணமுதச் சொல்பெற்றால்
மனச்சுடரை வடித்தெடுத்து
        வைத்திடுவேன் கவிதையிலே

கண்ணிற் படா திருந்த
        கலைமணியாம் அஜந்தாவின்
எண்ணரிய சித்திரம் போல்
        எங்கும் ஒளி வீசிடுமே.
-------------

16. கவிக்கனல்


[அம்புக்கு வில் சிறை. வில் அம்பைக் கட்டுப் படுத்துகிறது. வில்லைவிட்டு வெளியேறிய போது தான் அம்புக்கு விடுதலை. எண்ணங்களுக்கும், உள்ளக் கிளர்ச்சிகளுக்கும் சொல்லே சிறை. சொல்லையுங் கடந்து உள்ளத்தோடு உள்ளம் பேசுகின்ற உணர்ச்சித் துடிப்பிலே கவி சொல்ல ஆசை. ]

வில்லெனும் சிறைக் கட்டினை - நீங்கி
        வேகங் கொண்டு பாய் அம்பு போல்
சொல்லையுங் கடந் தேகுமோர் - உள்ளத்
        துடிப்பிலே கவி சொல்லுவேன்

மின்னல் ஜோதிகைக் கொண்டவன் - வெறும்
        மேகக் குப்பையைத் தீண்டுமோ?
கன்னல் தேனினை உண்டவன் - அந்தக்
        கசட்டுச் சக்கையை நாடுமோ?

வானப் பூக்களைக் காட்டியே - நல்ல
        வையப் பூக்களை கூட்டியே
கானத் தீஞ்சுவை ஊட்டியே - வீசுங்
        காற்றின் மூச்சினை நாட்டியே

சீறு நாகத் திரையினில் - கடல்
        சேரும் நீலப் பரப்பினில்
ஆறு பாய்ந்திடும் ஓசையில் - மலையின்
        அசைவிலாதகம் பீரத்தில்

கானப் பைம்மரப் பேச்சினில் - இளங்
        கன்னிப் பேரெழில் வீச்சினில்
மோனப் பேரொலி தன்னிலே - நன்கு
        மூட்டுவேன் கவிக் கனலையே.
-------
வானப்பூக்கள் - வானிலே மின்னுகின்ற மீன்கள். சீறு நாகத் திரையினில் - நாகப்பாம்பு சீறிப் படமெடுத்து எழுகின்றது போல ஒலித்துச் சுருண்டு எழுகின்ற அலையில். மோனப் பேரொலி - பேச்சும், ஒலியும் சாதிக்க முடியாததைப் பல சமயங்களில் மௌனம் சாதித்துவிடும். ஆகவே அந்த மோனத்தின் குரல் பேரொலியைவிடச் சிறந்ததாகும்.
------------

17. பொங்கல்


பொங்கல் புதுநாள் வந்ததுபார் - எங்கும்
        பொங்குக அன்பறம் இன்பமுமே !
இங்கெமை வருத்திய துன்பமெல்லாம் - இன்றே
        ஏகிட இறைவனைத் தொழுதிடுவோம்

பொங்கொளி ஞாயிறும் எழுந்தனனே - அவன்
        பொலிவினில் மாய்ந்திடும் பனிபோல
தங்கிய குறைகளும் சிறுமைகளும்- தலை
        சாய்ந்தினி ஓடிடும் நிச்சயமே

செந்நெலும் கரும்பும் விளைந்தனவே- நல்ல
        தேன்பொழி மலர்களும் விரிந்தனவே
இன்னலும் பசியும் போயொழிக - தேசம்
        எழிலுடன் கூடியே நலமுறுக

பிரிவுகள் பேசியே பூசலிட்ட - பழம்
        பேதமை தனைத்தள்ளி அனைவோரும்
ஒருதனிக் குடும்பமாய் வாழ்ந்திடுவோம் - நம்முள்
        ஒற்றுமை ஓங்கிடச் செய்திடுவோம்

தமிழன் திருநாள் பொங்கலென்றால் - அதில்
        தமிழன் பண்புகள் பொங்குமன்றோ?
புவியெலாம் சேர்ந்தொரு வீடதிலே-யாரும்
        புறம்பிலை என்ற சொல் தமிழன்றோ ?

யாதும் ஊரெனச் சாற்றியதும் - மக்கள்
        யாவரும் கேளிர் என்றதுவும்
மேதினிக் குரைத்தவர் நம்முன்னோர்- இன்று
        வேற்றுமை நாமெண்ணல் சரியாமோ?

பொங்கல் திருநாள் வந்ததுபார்-இனிப்
        புன்மையும் பகையும் மாய்ந்தழிக
பொங்குக மங்களம் உலகெல்லாம் எங்கும்
        தங்குக அன்பும் அமைதியுமே.
--------------

18. அலைகள்


வெள்ளைக் குதிரையைப் போலே
        துள்ளிக் குதித்திடும் அலையே
வேடிக்கை எத்தனை விந்தைகள் செய்கிறாய்
        ஓடித் திரண்டு சுருண்டாய் - பின்
        ஓங்கி எழுந்து புரண்டாய் (வெள்ளைக்)

புள்ளிக் கருநாகம் போலே
        துள்ளிப் படமெடுக் கின்றாய்
போருக்குச் சென்றிடும் வீரப்படையென்னப்
        பாருக் கணியணியாக - முன்
        பாய்ந்து பயங்கரம் செய்தாய் (வெள்ளைக்)

நீலப் பெருங்கடல் வேந்தன்
        மேலுக் கெழுந்து கொதித்தே
நெற்றி சுருக்கவும் நீயுடன் தோன்றியே
        வெற்றி முரசொலி தருவாய் - சிறு
        மின்னல் அரவமும் புரிவாய் (வெள்ளைக்)

மல்லிகைப் பூவினைப் பறித்து
        முல்லை மலருடன் தொடுத்து
வண்ணமாய் உன்முடி வைத்து நடமிட்டுப்
        பண்ணும் குழைந்திட வந்தே - நிலப்
        பாவைக் குச்சூடுகின் றாயோ? (வெள்ளைக்)
-------------

19. சாந்தி


எங்கள் இமயச் சிகரத் துயர்வில்
        தங்கும் மோனத் தவமே சாந்தி
கங்கும் கரையும் அளவும் இல்லாக்
        ககனப் பெருநல் வெளியே சாந்தி
பொங்கும் கடலிற் புதையும் நீலப் .
        பொலிவில் வதியும் ஒளியே சாந்தி
மங்கும் பொழுதில் வையம் தனிலே
        வைகும் தனிமைத் தெளிவே சாந்தி
        சாந்தி சாந்தி சாந்தி

முனிவோர் ஞானச் செறிவால் உணரும்
        முடியா மறையின் முடிவே சாந்தி
பனிபோல் வாழ்வென் றரசும் தள்ளிப்
        பதுமத் துறைவோன் வடிவே சாந்தி
நனிபே தையரால் அறையும் சிலுவை
        தனிலே வளர்வோன் அருளே சாந்தி
கனிவால் முறுவல் தவழத் தூங்கும்
        கபடில் மதலைத் திரளே சாந்தி
        சாந்தி சாந்தி சாந்தி

விரிமென் மலரின் நிறைவே சாந்தி
        வினை சேர் கலையின் உயிரே சாந்தி
உருகும் அன்போடுயிர்கட் கென்றும்
        புரியும் பணியின் விளைவே சாந்தி
அரிதிற் பெறுநல் லிறைவன் புகழ்சேர்
        அடியின் கருணை நிழலே சாந்தி
திரையும் புனல் சூழ் உலகந் தனிலே
        பரவும் படியாய்ப் புரிவோம் சாந்தி
        சாந்தி சாந்தி சாந்தி
------
பதுமத் துறைவோன் - புத்தன்
-------------------

20. பதில்


வானில் தனித்திலங்கும் வண்ணப் பிறைபோல்
        வளரும் அழகுடைய மங்கை நல்லாளே
ஏனிந்தக் காதலென்மேல் என்று கேட்கிறாய்
        ஏதும் பதிலறியா தேங்குகின்றேன் நான்.

மாலை இளவெயிலில் சோலை தனிலே
        வந்ததும் கண்டதும் காதல் கொண்டதும்
மேலும் அது வளரும் காரணத்தையும்
        விளம்ப வகையுமுண்டோ மின்னற்கொடியே?

வீணை நரம்பினிற்கும் மெல்லிசைக்குமே
        விரியும் தொடர்பு சொல் வாசக முண்டோ ?
தேனை அகத்துள் வைத்த செவ்வி மலர்க்கும்
        தினகர னுக்கும் உள்ள காந்தம் என்னவோ?

சோர்விற் சுழலுகின்ற கண்கள் தமக்கும்
        தூக்கம் அதற்கு மென்ன சொந்தம் சொல்லு
ஆர்வமுடன் மகவின் கூவல் கேட்டதும் (வாய்?
        அம்மம் சுரக்கும் வகை யாரறிவாரோ?

ஓடும் புனல் தனக்கும் ஓங்கும் ஓதைக்கும்
        உற்ற பொருத்தமதை ஓதலாகுமோ?
நாடி உனை நினைந்தே வாடுகின்றேனே
        நல்ல மொழி எனக்குச் சொல்லிடு வாயே.
--------------

21. தோற்றம்


தேனிலா ஊறுகின்ற சேல்விழிகள் யான் கண்டேன்
வேனிலான் வில் போன்ற மென்புருவச் சீர்கண்டேன்
புன்சிரிப்புப் புதுரோஜாப் பூத்திருக்கும் எழில் கண்டேன்
கன்னக் குழிக்கவிதை கண்டு களிகொண்டேன்
மதனன் குடியிருக்கும் மார்புகண்டேன் சென்றணைக்க
அதிவிரைவிற் பாய்ந்தெழுந்தேன் அடாடா நான் கண் விழித்தேன்.
-----------

22. பிரார்த்தனை


கருணை வாரிதியே கறைமிடற் றண்ணலே
திருவருட் கென்றன் சிறுவிண் ணப்பம் : -
இப்பிறப் பதனிலோ எப்பிறப் பதனிலோ
தப்பிநா னிழைத்த தவறுகள் எல்லாம்
இன்றெனைச் சூழ்ந்துபே ரிடருற நகைத்து
நின்றன ; அதனால் நெஞ்சம் முறிந்தேன்,
மணமுடிந் தின்று தான் மாதம் ஏழாயின,
கணவருக் கென்மேல் கடுகத் தனையும்
அன்பிலை ; ஆனால் அவர்மே லிழுக்கிலை.
தத்தைதாய் செய்த தொந்தரவதனால் ....
பெற்றவர் மகிழவே பெண் எனைக் கொண்டனர்.
மற்றிதை யறிந்தும், மனம் அவர் கனிந்து
காலக் கழிவினில் காதலென் மேற்கொளச்
சாலவும் முயன்றேன் ; தளர்விலா தவர்க்கு
உகந்தன எல்லாம் ஓதுமுன் செய்தேன்;
அகமலர்ந் தவரும் அடிமையை நோக்கிட
அருளுவா யென்றுனை அனுதினந் தொழுதேன்;
பெருகுமென் வினையால் பேதமே விளைந்தது.
ஒருகணம் எனையவர் உற்றுநோக் கிடினும்,
மறுகணம் உயிர்த்து வெறுவெளி நோக்குவார்;
உளத்தினில் அழுந்தியே உருகிநின் றிடுவார்.
சுளித்தெனைப் பார்த்துச் சுடுசொல் கூறினும்,
கெஞ்சிய வார்த்தையால் நெஞ்சிற் படர்ந்த
விஞ்சிய வருத்தம் விலக்கிட முயலலாம் ;
மனப்பண் புடையாமல் வாய்விட் டுரையார்;
புனப்புழுப் புகுந்த போதினைப் போலவே

அகந்துயர் உண்டிட அவலமே ஆயினார்
திகழொளி வதனமும் சீர்குலைந் திட்டார்;
நெற்றியில் வந்ததே ஒற்றைக் கீறலும் ;
சுற்றியென் உளத்தினில் சுவைத்திடு நகையும்
இழந்தனர். அந்தோ ! இறைவனே இவற்றால்
உழந்து நானிருக்க உற்றதோர் பேரிடி -
சென்றதோர் இரவினில் சிறிதும் துயில் கொளாது
என்றனூழ் வினையினை எண்ணியே கிடந்தேன் ;
தூங்கினர் கணவர் சோர்வுடன் ; அறியாது
ஆங்கொரு மொழிதான் அவர்வாய்ப் பிறந்தது;
"இவளால் என்றன் இன்பந் துறந்தேன் ;
கமலா, உன்றன் காதலும் இழந்தேன் '
என்றனர் ஐயகோ இதயம் வெடித்திட.
பொன்றின உளத்துள் பொதிந்த என் கனவெலாம்
என்ன நான் செயினும் என்பால் அவர்க்கு
மன்னிய காதல் வரஇனி வழியிலை ;
வேற்றொரு மங்கையை விரும்பியே என்பதி
ஆற்றொணா ஏக்கத் தழுந்தினர் அறிந்தேன்.
நாதன் நல் லின்பமே நங்கையற் கின்பமாம்;
பேதை நான் அவர்க்குப் பீடையாய் வந்துளேன்.
இறந்தனன் எனினும் இரண்டாந் தாரமாய்
மறந்தறி யாத அம் மங்கையை மணப்பர்.
இனியெனக் குலகினில் என்னிருக்கின்றது?
பனிமதிச் சடையீர் பரிவுடன் ஏழையை
இணையடி மலர்களில் ஏற்றருள் வீரே;
கணவர் நற் சுகந்தனில் களித்திடச் செய்வீர்;
இன்னுமோர் பிறவி இருந்திடில்,
என்னுடை நாதனோ டினிதுறப் புரிகவே.
-------------

23. சத்தியம்


சத்தியம் செத்ததோ
        தர்மம் ஒளி மங்கிற்றோ
உத்தம னெம் காந்தி மகான்
        நெஞ்சத்தின் உதிரமது
இத்தரையில் பட்டவுடன்
        என்றும் நிலைத்திருக்கும்
சத்தியம் செத்ததோ
        தர்மம் ஒளி மங்கிற்றோ ?

சத்தியத்தின் சோதனையில்
        தர்மநெறி அன்பஹிம்சை
பக்தியுடன் காத்து நின்ற
        உத்தமனெம் காந்தி மகான்
நெஞ்சத்தே குண்டேறி
        நினைவிழந்த அக்கணத்தே
சாத்தியம் செத்ததோ
        தர்மம் ஒளி மங்கிற்றோ ?

கத்தியின்றி ரத்தமின்றி
        யுத்தமிட்டு பாரதத்தாய்
கைத்தளையைக் களைந்தெறிந்த
        அத்தனவன் திருமார்பில்
அறிவிழந்தான் சுட்டவுடன்
        ஆராமா எனும் போதே

சத்தி‌யம்‌ ‌செத்ததோ‌ ‌ ‌
        தர்மம்‌ ‌ஒளி‌ ‌ம‌ங்கிற்றோ‌ ?
சத்தி‌யத்தைக்‌ ‌கடைப்‌ ‌பிடி‌த்தா‌ர்‌ ‌ ‌
        காந்தியெனல்‌ ‌‌சரிய‌ல்ல‌ ‌‌
சத்தியமே‌ ‌காத்திமகான்‌ ‌ ‌
        சத்தியமே‌ ‌அவர்‌ ‌வாழ்க்கை‌ ‌‌
ச‌த்தியமே‌ ‌ அவ‌ர்‌ ‌‌வடிவம்‌ ‌ ‌
        தரணிக்கோ‌ர்‌ ‌‌புதுச்சோதி‌ ‌
பித்தனொரு‌ ‌பேதையினால்‌ ‌ ‌
        பிணமாக‌ச்‌ ‌சாய்ந்த‌வுடன்‌
‌சத்தியம்‌ ‌ செத்ததோ‌ ‌ ‌
        தர்மம்‌ ‌ஒளி‌ ‌மங்கிற்றோ‌ ?

எத்தனையோ‌ ‌து‌ன்பங்கள்‌ ‌ ‌
        எத்தனையோ‌ ‌சிறைக்கூடம்‌ ‌‌
இத்தேச‌ ‌ விடுதலைக்காய்‌ ‌ ‌
        எமத‌ண்ணல்‌ ‌தாம்‌ ‌சகித்தார்‌ ‌
தா‌ய்நாட்டி‌ன்‌ ‌பக்தியிலே‌ ‌ ‌
        தலைசி‌றந்தா‌ர்‌ ‌என்றாலும்‌ ‌‌
தாய்நா‌டோ‌ ‌சத்தியமோ‌ ‌ ‌
        ‌சத்தியமோ‌ ‌ ‌தாய்நா‌டோ‌
எதுவேண்டும் எனக்கேட்டால்
        இமைப்போதும் தயங்காமல்
சத்தியமே வேண்டு மென்பார்
        சாந்தமுனி காந்தி மகான்
வையத்தே அன்பாட்சி
        வளர்க்கவந்த மெய்ஞானி
மார்பகத்தே குருதி சிந்த
        மறைந்திட்டார் என்று சொன்னால்
சத்தியம் செத்ததோ
        தர்மம் ஒளி மங்கிற்றோ ?

இத்தரணி யென்னாளும்
        ஈடேறி உய்யாதோ?
சத்தியந்தான் வெல்லாதோ
        தர்மநெறி ஓங்காதோ?
என்று மனம் சோர்ந்தேன்
        இருள் கூடி நெஞ்சுடைந்தேன் -
அத்தப் பொழுதினிலே
        அகக் கண்ணின் முன்பாக
உன்னதமாம் லட்சியத்திற்
        குயிரீந்த மேலோரின்
மன்னுபுகழ் வடிவெல்லாம்
        வந்தனவே ஒளிமயமாய்;
எல்லோர்க்கும் நடுநிலையாய்
        இயே சுமுனி அன்புருவம்
கல்லும் கரைந்துருகும்
        கருணை ஒளி கண்டிட்டேன்;
அன்பென்று பேசி வந்த
        அவர் நெஞ்சில் ஆணியிட்டுத்
துன்மதியோர் கொன்றிட்டார்
        தூயமகான் மறைந்தாரோ
ஏசுமுனி மாய்ந்தாரோ
        இல்லை யில்லை நாமறிவோம்
வீசுபுகழ் பொங்கியெழ
        மேதினியில் ஓங்கிநின்றார்
புத்தனுக்குத் தம்பியவர்
        பொன்னடியைப் பின்பற்றி
மெத்தக் கருணையினால்
        மீண்டும் வந்த தம்பியிவர்
காந்தி மகான் சாவாரோ
        காலனவரைத் தொடுமோ?
சாந்தமுனி சாகவில்லை
        சத்தியமும் சாகாது ;
ஓருடலில் கட்டுண்டு
        உலவி வந்த மெய்ச்சுடர்தான்
சீருடனே மாந்தர்களின்
        சிந்தையெலாம் நிறைந்ததுவே.
காயமிது சத்தியமோ
        காந்தி யொன்றே சாத்தியமே.
காயமைந்து பூதத்தில்
        கலந்து மறைந்திடவும்
காந்தியெனும் சத்தியந்தான்
        காரீயக் குண்டேறிச்
சிந்துங் குருதியினால்
        சிரஞ்சீவி யாயிற்றே.
ஆண்டொருநூற் றைம்பதிந்த
        அவனியிலே வாழ்வனென்றார்
ஆண்டுக் கணக்குகளை
        அழித்துலகம் உள்ளவரை

வாழ வளர்ந்து விட்டார்
        வாழியவோ சத்தியமே.
ஆழ நினைந் தாலடிகள்
        அவனி உய்ய வந்தவராம்
பாரதத்தின் விலங்ககற்றும்
        பணியவற்குப் பெரிதல்ல ;
பாரினிலோர் புதுநெறியைப்
        பரப்பிடவே காந்தி வந்தார்.
அறிவுத் திறமோங்கி
        அழிவுக்கே படை செய்யும்
நெறியறியாப் பூமியிலே
        நேர்மையன்பு குன்றியதால்
மனிதப் பெருஞ்சாதி
        மாய்ந்தழிந்து போகாமல்
புனிதனிங்கு சத்தியத்தின்
        புன்னகையாம் அன்பஹிம்சை
மார்க்கத்தைக் காட்ட வந்த
        மகாத்மாவென் றறிவீரே.
ஓர்ந்துணர்ந்து வாழ்விலவன்
        உபதேசம் கொள்ளாமல்
அணுவைப் பிளந்திடுவோம்
        அழிப்போம் பகைவர்களை
எனப் பேசி இறுமாந்தால்
        இவ்வுலகம் நாசமுறும்;
மாற்றலரை மாய்க்கு முன்னர்
        மாநிலமே வீழ்ந்திடுமால்.

கூற்றுவனாம் அணுப்படையைக்
        கொண்டுகளிப் பெய்தாதீர்
மானிடப்பேர் துடைக்க வந்த
        மாயமெனத் தானறிவீர்
வீணாய் அழியாதீர்
        மேதினியீர் என்றன் பால்
எச்சரிக்கை செய்ய வந்தார்
        இன்பமுற நெறி சொன்னார்.
சத்தியத்தின் சோதியவர்
        தனிவழியைப் பின்பற்றி
இன்புற் றிருந்திடுவீர்
        இவ்வுலகம் ஓருவீடே ;
துன்பமில்லை போரில்லை
        சோதரரே அனைவோரும்;
விண்ணின்பம் பெற்றிடலாம்
        விரிந்த உளப் பான்மையுடன்
கண்விழித்து நோக்கிடுவீர்
        காந்தியுகம் தோன்றியதே.
---------------

24. வாழ்க காந்தி


[குறிப்பு: காந்திமகானின் பொன்னுடம்பு மறையுமுன்பு நடந்த காந்தி ஜயந்தி விழாவொன்றில் பாடியது. ]

அன்புடன் அறமும் ஆட்சி
        அவனியில் புரியுமாகில்
மன்பதை இன்ப மெய்தும்
        வானவர் வாழ்க்கை கூடும்
என்பதோர் உண்மை தன்னை
        இயம்பிய புத்தன் ஏசு
வன்பெரு மரபில் வந்த
        மகாத்மனாம் காந்தி வாழ்க!

சத்தியம் என்றும் ஓங்கும்
        தர்மமே முடிவில் வெல்லும்
கத்தியும் வாளுந்தள்ளிக்
        கருத்தினில் அஹிம்சைபூண்டு
அத்தனைப் பணிந்து வாழ்வீர்
        அல்லலிங் கில்லை என்று
தத்தளித் தமரில் நைந்த
        தாரணிக் குய்வு சொன்னாய்

சக்கரம் அன்னாட் கையில்
        சமர்செயக் கீதம் பாடும்
சக்கரம் இன்றுன் கையில்
        சாந்தியின் கீதம் பாடும்
தக்கதோர் நெறியை அன்பால்
        சமயத்திற் குகந்தவாறு
மக்க ளுக் களிக்கவந்த
        மகாத்மா நீ வாழ்க வாழ்க!

வெறுப்பினை அன்பால் வெல்லும்
        விதந்தனை வகுத்தாய் உள்ளச்
செருக்கினை அடக்கந் தன்னால்
        ஜெயித்திடும் வாழ்வு கொண்டாய்
நெருப்பினைக் கக்கும் வெஞ்சொல்
        நேரலார் பகைமை யெல்லாம்
சிரிப்பினால் மறையச் செய்யும்
        தீரனீ! காந்தி! வாழ்க!

அறிவினைப் பெற்று மாந்தர்
        அறவினை துறந்திந்நாளில்
மறவினை எண்ணி வையம்
        மாய்ந்திடப் படைகள் கண்டார்
வெறியினைப்போக்கி மேலாம்
        மெய்ந்நெறி காட்ட வந்த
பொறைதயை அஹிம்சை அன்பாம்
        பொன்மொழிக் காந்தி! வாழ்க!
------
கிருஷ்ணன் கையில் சுழன்ற சக்கரம் அன்று சமர் செய்ய ஒலித்தது. இன்று காந்தி மகான் கையில் சுற்றுகிற ராட்டைச் சக்கரம் சாந்தியின் கீதம் பாடுகிறது.
-----------------

25. இருளும் ஒளியும்


சூரியன் உலகிற் பாதியை ஆள்கின்றான்
இரவரசி மறு பாதியை ஆள்கின்றாள்
அவள் அவன் காதலி
வைகறையில் இரவரசி ஒளியிற் கலக்கின்றாள்
ஞாயிறு அன்புடன் நீட்டிய கைகளில் மறைகின்றாள்
மாலையில் ஒளியிலே இருள் காண்கிறது
காலையில் இருளில் ஒளி காண்கிறது
இரவரசி குளிர்ச்சி தருகின்றாள்
பரிதி வெப்பம் தருகின்றான்
இருவரும் உயிர்களைக் காக்கின்றனர்
இரவு கறுப்பு; தண்மையை உடையவள் பராசக்தி.
ஞாயிறு சிவப்பு; வெம்மையை உடையவன்; சிவன்.
பாரசக்தி பாதி, சிவன் பாதி -
ஒருவரில்லாவிட்டாலும் உலகம் அழியும்.
இரவு சலித்த உயிர்களின் சோகம் தவிர்க்கின்றாள்
உறங்க வைக்கின்றாள்
கரும் போர்வையை உலகின் மீது போர்த்துகின்றாள்
அவள் உலகத்தின் தாய் பராசக்தி.
சூரியன் உயிர் கொடுக்கின்றான்
ஒளி கொடுக்கின்றான்
காய்கின்றான் அவன் தந்தை சிவன்.

கதிரவனும் இருளரசியும்
எப்பொழுதும் பிரிவதே யில்லை
எப்பொழுதும் தோள் கோத்துக் கொண்டிருக் கிறார்கள்
எப்பொழுதும் முத்தமிட்டுக் கொண்டிக்கிறார்கள்
உலகத்தைச் சுற்றிப் பவனி வருகிறார்கள்
இரவுப் பக்கம் நின்றால் ஞாயிறு தெரிவதில்லை
ஞாயிற்றின் பக்கம் நின்றால் இரவைக் காணோம்
ஆனால் அவர்கள் தழுவிக்கொண்டே யிருக்கிறார்கள்
அவர்களை வாழ்த்துகிறேன்!

இருவரில் யார் முன்னே செல்லுகிறார்கள்?
விண் மீன்களை அணிந்து கொண்டு, பிறைப் பொட் டிட்டு
இரவு முன்னே செல்லுகின்றாளா?
பறவைகள் பாடவும், உயிர்கள் ஓடியாடித் திரியவும்
ஞாயிறு முன் செல்கின்றானா?
காலையில்
இரவு கதிரவனை எதிர்கொண்டழைக்கின்றாள்
கதிரவன் சிரித்து வருகின்றான்
மாலையில்
சிவந்த மேகப் பட்டாடை உடுத்து
இருள் கதிரவனைப் பின் தொடர்ந்து நடக்கின்றாள்
அவள் உடையில் பொற் சரிகைகள், பொற்கரைகள்
மின்னுகின்றன.
கதிரவன் சிரித்துக்கொண்டு முன்னால் போகிறான்
அவர்கள் பிரிந்தார்களா?
இல்லவே இல்லை
உலகந்தான் அப்படி எண்ணிய மயங்குகிறது
கதிரவன் வாழ்க
இரவரசி வாழ்க

அன்பே
நீ உனது அன்புக் கதிர்களை நீட்டினாய்
நான் உன்னுள் மறைந்து விட்டேன்
உன்னுள் நான் என்னுள் நீ
உலகம் இதைக் காணமுடியாது
உன்னை ஒருபுறத்திலும்
என்னை ஒரு புறத்திலுமே காண்கிறது
ஞாயிறும் இருளும் போல
நாம் ஒன்றாகவே இருக்கிறோம்
---------
குறிப்பு : காதலால் தூண்டப்பெற்ற உள்ளம் என்ன வெல்லாம் கற்பனை செய்து கொள்ளுகிறது! அதன் கற்பனைக் கும் குமுறலுக்கும் ஓய்வுண்டா? எல்லை தானுண்டா ? நவநவ மாய்க் கற்பனைகள் ! நவநவமாய்க் குமுறல்கள் !
பிரிவேற்படும் போது வாடித் துடிக்கிறார்கள் காதலர்கள். பிரிவால் அவர்களுக்கு உலகமே சூனியமாகி விடுகிறது. ஆனால் ஒவ்வொரு சமயத்திலே பிரிவிலும் தாங்கள் ஒன்றாக இருப்பதாகவே அவர்கள் உள்ளத்தில் கற்பனை எழுகின்றது இயற்கைக் காட்சிகள் அந்தக் கற்பனைக்குத் துணைபுரிகின்றன. பிரிவால் நலிந்த ஒரு காதலி காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் கதிரவனையும் இருளையும் கவனிக்கிறாள். காலை யிலே கதிரவனை வரவேற்று அவன் மேலே எழுந்து வரவரப் பின் வாங்குகிறாள் இருளரசி, மாலையிலே இருள் முன்னேறக் கதிரவன் மெதுவாக மறைகின்றான். ஒளியுள்ள போது இருளில்லை; இருளுள்ளபோது ஒளியில்லை என்று பொதுவாக உலகம் எண்ணினாலும், கதிரவனும் இருளரசியும் உலகைச் சுற்றிப் பவனி வரும்போது அவர்கள் ஒருவரையொருவர் பிரி யாது தழுவிக்கொண்டே இருப்பதாகத் தோன்றுகிறது. காலைக் காட்சியும் மாலைக் காட்சியும் இந்த எண்ணத்திற்கு வலிமை தருகின்றன. பிரிவால் வாடும் அவளுக்கு இந்த எண்ணம் மகிழ்ச்சியளிக்கிறது. அது காதலனுக்கு ஒரு கடிதமாக உருவெடுக்கிறது.
------

26. அறிவாய் நீ


காட்சி

மலர்ந்தது முழுநிலா
எங்கே ?
நீலக் கடலருகே நீண்டதொரு நிலாமுற்றம்
அங்கே .
சுருளும் அலைசெய்யும் அரவக் குழைவினிலே
இருவர் உயிர்கலந்த எல்லையிலாக் காதலிலே
இனித் தூறும் அன்புச்சொல் இன்னமுது பருகையிலே
முருகன் மறைந்து நின்று முடித்துவிட்ட நட்பினிலே
விரிந்ததந்த வானப்பூ.
நெஞ்சமொன்றாய் உயிர் ஒன்றாய்
நிலாமுற்றம் வீற்றிருந்து
தேன் பேச்சும் பேச்சில்லா மோனத் தெளிவுரையும்
கேட்டுவந்த முழுநிலவு மீட்டுமிங்கு பன்முறையும்
வந்துவந்து மறைந்திடவும் வாடி நின்றேன் -
இன்றுமிங்கு சிரித்தந்த வெண்ணிலவு
வந்து தழைத்ததுவே - அது என் வார்த்தைக் கிரங்காதோ?

வேண்டல்

வானத்துப் பொன் விளக்கே
(அன்று நீ என் )
வார்த்தையெலாங் கேட்டாயே
நெஞ்சிற் கிளுகிளுத்த நினைவெல்லாம் உணர்ந்தாயே
மொழியறியா ஆசையெலாம் முகச்சுளிவில் கண்டாயே
பேச்சுக்கும் எட்டாத பேரன்பைத் தெரிந்தாயே
கண்டதெலாம் இன்று கனிந்துரைக்க மாட்டாயோ?
நினைவெல்லாம் அங்கு சென்று நீ மொழியக் கூடாதோ?
ஏழையிந்தப் பேதை நெஞ்சம்
இன்றும் அன்று போலவேதான்
வெம்பித் துடிப்பதை நீ விளம்பிவிட்டா லாகாதோ?
இருளுக்கு எழில் கொடுக்க இன்பமுடன் வந்தாயே
பிரிவுத் துயர் களையப் பேசிவிட்டா லாகாதோ?
இளமைக் கொதிப்பெல்லாம் என்னைக் குலுக்குதிங்கே
நெஞ்சத்தினில் துடிப்பு நின்றிருக்கும் எல்லைவரை
கொஞ்சமுமே குறையாது கூடிப் பெருகிவரும்
என்னை யறிந்தோனொருவன் இருக்கின்றான் என்பதனால்
வாழ்கின்றேன் இந்த வாசகமும் பொய்யாமோ?
நீயிந்தப்பேச்செல்லாம் நிச்சயமாய்ச் சொல்லிடுவாய்
அன்று மிருந்தாய் நீ அறிவாய் நீ எல்லாமும்
உள்ளத் துணர்ச்சியெல்லாம் உள்ளபடி கூறிவிடு
அதன் பின்னர் எப்படியோ ஆனபடி ஆகட்டும்.
---------------

27. அன்னை கையின்


அன்னை கையின் விலங்ககன்ற
        அருமை நாளும் வந்தது :
ஆடிப்பாடி வாழ்க வென்று
        அண்ட மெட்ட ஓதுவோம்.
பொன்னின் மகுடம் இந்தியத்தாய்
        புனைந்த நாளும் வந்தது
போற்றிப் பாடி ஜெய் ஹிந் தென்று
        பூமி யதிர முழங்குவோம்.

பாரதத்தின் சிறுமை யெல்லாம்
        பஞ்சு போலப் பறந்ததே;
பாருக் கெல்லாம் கண்ணிதென்று
        பகரும் நாளும் வந்ததே.
வீர தீரம் அன்பு ஞானம்
        மிகுந் திருக்கும் மக்கள் யாம்
மெய்ம்மை நூல்கள் பலவுங் கண்ட
        மேலோர் வழியில் வந்தவர்.

அடிமை வாழ்வில் நொந்த போது
        ஆன சிறுமைக் குறையெலாம்
அகல வென்று திறமையோடு
        அற்புதங்கள் ஆற்றுவோம்.
மிடிமை கொன்று கொடுமை நீக்கி
        வேந்தர் போல வாழுவோம்;
விந்தை யென்றே உலகம் போற்ற
        மேன்மை யாவும் காணுவோம்;

மனிதர் யார்க்கும் பொது நல் நீதி
        வாழ்க்கை இன்பம் பொதுவிலே;
மனிதர் யார்க்கும் பொது நல் உடமை
        வழங்கி யன்பு கூட்டுவோம்;
கணித ஞானம் கலைகள் ஞானம்
        கவிதை ஞானம் ஓங்கவே
கடவுள் என்னும் உலகின் சக்தி
        காணும் ஞானம் ஓங்கவே

செயல் பெருக்கி மயல் கருக்கித்
        தீமை போக்கி வாழுவோம்;
சிந்தை விரிவில் தோன்றுங் கனவைச்
        செய்து காட்டி மகிழுவோம்;
புயல் வெடித்த காடு போலப்
        புன்மை வீழச் சாடுவோம்;
புனிதபார தத்தை யென்றும்
        போற்றி ஒன்றாய்க் கூடுவோம்.
------------

28. ஜேய் ஹிந்த்


பல்லவி
ஜேய் ஹிந்த் ஜேய் ஹிந்த்
ஜெய ஜெய ஜேய் ஹிந்த!

சரணம்
அடியடா முரசம்
ஆர்த்தெழுந் தாட்டா
அன்னை கை விலங்குகள்
அகன்றன காணாய் - ஜேய் ஹிந்த்

இன்னுயிர் தந்தவள்
ஏக்கமுந் தீர்ந்தே
புன்னகை புரிந்தாள்
பொன்முடி சூடினாள் - ஜேய் ஹிந்த்

சிறுமைகள் மாய்ந்தன சீரெலாம் பெருகிடும்
வறுமையில் வாடிய
மக்களும் ஓங்குவார் - ஜேய் ஹிந்த்

இன்பமும் அன்பும்
எங்குமே பொங்கிட
அன்னை யெம் பாரதி
அறம் வளர்த்த திடுவாள் - ஜேய்ஹிந்த்


அனைவரும் சோதரர்
அவனியோர் வீடாம்
எனும்நெறி காட்டுவாள்
யாவரும் வாழவே - ஜேய் ஹிந்த்

வாழியெம் மன்னை
வாழிய உலகம் வாழிய
அன்பறம் வாழிய வாழிய - ஜேய் ஹிந்த்
-
குறிப்பு: பாரதநாடு சுதந்திரம் பெற்ற நாளன்று பாடியது.
-------------

29. நாணம்


நேற்றும் தயங்கினேன் இற்றைநாள் திண்ணமாய்
உள்ளந் திறந்தென் அன்பெலா முரைப்பேன்
என்றே நாள்தொறும் நாளெலாம் எண்ணியும்
அந்தியிற் காதலர் வந்திடுந் தருணம்
மொழியறியாது மூங்கையாய்
குழல்வளை திருத்தி நிற்கிறேன் தோழி.
--------------

30. மேலே பற


மனமே,
கற்பனைச் சிறகுகளை விரித்து வானிலே பற!
மேமே மேலே பற!
இன்னும் மேலே பற!
விண்ணிலேயுள்ள அமுதத்தை மண்ணுக்குக் கொண்டுவா
வாழ்க்கையின் குறுகிய பாதையிலே உழன்று கீழ் நோக்கி நில்லாதே.
உனது கனவுக் கண்களின் பரந்த நோக்கமே உலகத்தின் உய்வு.
உனது பார்வை மேல் நோக்கியே விரியட்டும்.
நீல விசும்பிலே கழுகு பறக்கிறது ; ஆனால்
        அதன் பார்வையெல்லாம் நிலத்திலே தான்.
கழுகுப் பார்வை உனக்கு வேண்டா.
மேலே நிமிர்ந்து பார். கழுகாகிலும் வானிலே பறக்கிறது.
மண்ணுக்குக் கீழே சேற்றிலே நெளிகிறது புழு.
பார்வையெல்லாம் சேற்றிலே ;
வாழ்க்கையெல்லாம் சேற்றிலே
புழுவுக்குக் கழுகுமேல்.
நீ புழுவாகாதே ; கழுகும் ஆகாதே.
அப்பாலுக்கும் அப்பாலே உயர்ந்து செல்.
இன்பமெல்லாம் கொண்டுவா.
எனக்கு எனக்கு என்று பேசாதே.
எல்லாம் எல்லோருக்கும் --
இன்பமே எண்ணுவாய்; அன்பே எண்ணுவாய்.
மனமே, கற்பனைச் சிறகுகளை விரித்து உயர்ந்து பற.
மேலே மேலே உயர்ந்து பற.
---------------

31. சுதந்திரத் திருநாள்


சுதந்திரத் திருநாள் வந்ததடா - அடிமைத்
        துன்பம் மறைந்த நாள் வந்ததடா
அதிர முழக்கிமுர சார்த்திடுவோம் - நமது
        அன்னையை வாழ்த்தியே பாடிடுவோம்.

இத்தனை நாளடிமைப் பட்டதனால் - இங்கே
        எத்தனையோ சிறுமை தோன்றினவே ;
அத்தனையும் தொலையச் செய்திடுவோம் - தேசம்
        புத்துயிர் தாங்கவே பணிபுரிவோம்.

விடுதலை வந்ததும் இன்பமெலாம் - உடனே
        மேவிடும் என்பது வீண்கனவாம் ;
திடமுடன் ஆற்றிடும் செயல்களினால் - புன்மை
        தீர்ந்து நற் சுகமெலாம் சேர்த்திடுவோம்.

பஞ்சமும் நோய்களும் பேதமையும் இன்னும்
        பாரத நாட்டினில் இருந்திடவோ?
வஞ்சமும் சூதுபொய் மாண்டிடவும் - அறிவு
        வாய்ந்துநா மனைவரும் வாழ்ந்திடவும்

கலைமணம் எங்கணும் வீசிடவும் - உயர்
        காதல் வாழ் வன்பறம் கூடிடவும்
தலைநிமிர்ந் தனைவரும் நின்றிடவும் - நல்ல
        சமத்துவ வாழ்வினை நாட்டிடவும்

அரியதாம் செயல்பல முனைந்திடுவோம் - இதை
        அமரர்தம் லோகமாய் மாற்றிடுவோம்.
பெருமைகள் சேர்ப்பதே சுதந்திரம் நாம் - இன்று
        பெற்றதன் நோக்கமென் றுணர்ந்திடுவோம்.
--------------

32. விலையில்லா மாணிக்கம்


விலையில்லா மாணிக்கம் வேந்தர்களும் வாங்கரிதாம்
அலைகடலால் ஈன்றெடுக்கா அழகுவளர் ஆணிமுத்து
முகலாயப் பேரரசர் முடிதிகழாக் கோஹிநூர்
அகல்வானில் தோன்றாத அற்புத நற் புதுவெள்ளி
மன்பதையின் வறுமை தவிர் மாண்புடைய நல்வயிரம்
புன்முறுவல் தவழ்முகத்துப் போதுமென்ற நன்மனமே.
-------------------

33. செல்லடா!


செல்லடா!
முன்னெழுந்து செல்லடா!

சரணம்
முன்வைத்த காலைப்
பின்வைக்க லாகுமோ?
உன்னத லட்சியம்
உச்சியிலுள்ளது - செல்லடா!

உச்சியென்றாலும்
உள்ளம் மலைக்காதே
கச்சை வரிந்தே
கட்டிப் புறப்பட்டுச் - செல்லடா!

ஜோதியைப் போலே
தூரத்தில் காணுது
சீதக் கதிர்மணித்
தெய்வக் கிரீடம் - செல்லடா!

தாய்சிறப் பெய்தவே
சாவை எதிர்த்து நீ
பாய்புலி நாணிட
மார்பை நிமிர்த்தியே - செல்லடா!

ஆரடா அங்கே
அணியைக் குலைத்தவன்?
பாரடா முன்னால் பாரத னல்ல நீ? - செல்லடா!

அங்கம் தளர்ந்தாலும்
நெஞ்சம் தளராதே
பொங்கும் குருதியில்
புன்னகை செய்துநீ - செல்லடா!

நாற்பது கோடியும்
நல்லின்பந் துய்த்திட
ஆர்ப்பரித் தேயெழுந்
தைக்கிய மாகநீ - செல்லடா!
---------------

34. கார்த்திகைப் பிறை


கார்த்திகை மாதம் கருமேகம் வானத்தைப்
போர்த்துச் சளசளெனப் பூமழைதான் பெய்கிறது.
விடாத மழைதன்னில் வெம்மை தணியுமென்றோ
கெடாத கதிரோனும் கண்மறைந்து திரிகின்றான்!
ஊரெங்கும் தண்ணீர் ஊற்றெடுத்துப் போகிறது;
காடெங்கும் வித்திட்டுக் கரும்பச்சை தான் தரித்து,
ஓங்கிவந்த சோளம் உழவன் மனம் வாடச்
சோர்ந்து வெளுத்ததுவே; செங்கதிர்கள் தோன்ற வில்லை
எப்பொழுதும் மாலை இளவெயில் போ லேதோன்றும்
ஒப்பரிய காலமதில் ஒருமாலைப் போதினிலே
தென்னஞ் சிறுதோப்பைத் தேடியே சென்றங்கு
சின்னஞ் சிறுமழலைச் சிங்காரப் பேச்சுடைய
நாகணவாய்ப் புட்கள் நாவொடுங்கி வீற்றிருந்து
நாளும் நனையிறகை நடுங்கி யுலர்த்துகின்ற
தோற்றமதில் நெஞ்சம் தோய்ந்திடவே வீற்றிருந்தேன்.
ஆற்றப் பெரு அமைதி அரசு செலுத்திற்று;
ஓலை நுனியில் ஒளிர்முத்துப் பூத்ததுபோல்
ஆலும் துளிவிழுந்து அமைதி பெருக்கிற்று.
சோம்பி எருமைகள் போல் தூங்கியே ஊர்கின்ற
மேகத் திடையிருந்து மெல்ல விழுவது போல்
இருள்கூட லாயிற்று; இன்னும் பரவவில்லை.

ஒருமேகம் மேற்கில் உயரப் பறந்ததுபார்!
கண்டேன் கருந்திரைதான் கருணை புரிந்திடவே;
கண்டதொரு காட்சி கற்பனைக்கு மெட்டுமோதான் ?
நிலவின் இளங்கீற்று ! நான் கண்டேன் ! நான் கண்டேன்!
உலக மகள் நுதலில் உவமையில்லாப் பட்டமோ?
பைங்கொண்டற் பார்வதியைப் பாகத்தில் வைத் துப்பின்
சங்கரனார். தஞ்சடையில் தான் தரித்த தனிக்கலையோ?
மதனன் இளவேனில் வருநாளில் தானேந்தப்
புதிதாய் அமைந்ததொரு பேரழகுப் போர்வில்லோ?
கந்தருவச் சிறுமியர்கள் ககனப் பெருங்கடலில்
உந்திவிளை யாடும் ஓடத்தின் ஒளியுருவோ?
வானத் திடைத்தோன்றும் வடிவில்லாப் புன் சிரிப்போ ?
காணக் கிடைக்காத கார்த்திகை மூன் றாம்பிறையே;
கலையொன்று கொண்டே கவின் பெருக்கி நிற்கின்றாய்
அலையமுது தான் பெய்ய அன்று வந்த பொற்கிண்ணீ!
என்றெண்ணி நான் நிற்க இளஞ்சிறுமி மின்வளைவு
சென்று மறைந்திட்டாள் சிந்தை திறைகொண்டே!
-------------

35. நினைவு அலைகள்


[நெஞ்சிலே ஆயிரம் ஆயிரம் நினைப்புக்கள், எண் ணங்கள், ஆசைகள் எழுந்து சதா அலை மோதுகின்றன. ஆனால் இருபதாம் வயதிலே, இளமையிலே அவற்றின போக்கே வேறு; ஐம்பதாம் வயதிலே, முதுமை எய்துகின்ற காலத்திலே அவற்றின் போக்கே வேறு. எல்லோருக்கும் அல்ல - பெரும்பாலோருக்கு]

இருபதில் :
மண்ணிலே உயர் தேவநல் லின்பத்தை
        வளரச் செய்து நான் யார்க்கும் வழங்குவேன்!
விண்ணிலே அந்தத் தாரகைக் கூட்டத்தில்
        வீடமைத்துப் புதுஉல காக்குவேன்;
கண்ணிலே ஒளி காட்டும் அழகியர்
        காதல் என்றிடில் சாதலுக் கஞ்சிடேன்;
தண்ணென் மாமதி தன்னைப் பிழிந்துமே
        சாறெடுத்துமின் தங்கமும் பண்ணுவேன்.

மாந்த - யாவரும் ஓர் நிலை தன்னிலே
        வாழும் இன்பச் சமூகத்தை நாட்டுவேன்;
சாந்தி அன்பறம் எங்கும் தழைத்திடத்
        தளர்விலா துழைத் தேஜயங் கூட்டுவேன்;
கூந்தல் நீண்ட இளங்கொடி மேனியர்
        கூறிடிற்கட லேழும் சுருட்டுவேன்;
காந்த மின்பொறி ஞான மனைத்தையும்
        கண்டுழைப்புச் சலிப்பை வெருட்டுவேன்.

ஆண்டு நூறுக்கு மேலிங்கு யாவரும்
        அமரவாழ்வு பெறவழி காணுவேன்;
யாண்டும் பூவும் பொலிவும் கலைகளும்
        ஈண்டிஓங்கும் பலபணி பூணுவேன்;
மூண்டகாதல் மடந்தை முறுவலில்
        மோதும் உள்ளக் கருத்தும் முடிப்பன்யான்;
நீண்ட நல்லின்ப வீடிது தானென
        நீள் நிலத்தையும் மாற்றி அமைப்பனே.

ஐம்பதில் :
மண்ணிலே யெனக் குள்ள தெண் காணியே,
        மற்றோர் காணி பிடித்திடச் சூழுவேன் ;
வெண்ணெய் போலொளிர் சுண்ணநற் சாந்தினால்
        வீடுகட்டி நான் சொந்தமாய் வாழுவேன்;
பெண்ணிலே யொரு பேதையைக் கொள்வதால்
        பிறவி நோய்தனைப் பெற்றதைத் தேர்ந்துளேன்
பண்ணும் ஊழியர் தம்மைப் பிழிந்துமே
        பங்கயத் திருச் சேர்க்கவே நாடுவேன்.

மாந்தர் யாவரும் ஓர்நிலை யென்னுமோர்
        வாசகம் பொய்க் கதையெனக் கண்டுளேன் ;
காந்தி கொண்ட பொற் காசுகள் ஈட்டலே
        கருதுவேன் இனிக் கனவுகள் கண்டிடேன் ;
கூந்தலுக் கொரு வாசநெய் வேண்டுவார்
        கூறைச்சேலை நகையெனக் கூவுவார்
சாந்தியோ டிங்கு வாழவிடு வரோ?
        சற்றுமில்லை நான் முற்று மறிந்திட்டேன்.

மீண்டு மோர்முறை ஜாதகம் பார்ப்பதும்
        விரைவில் பெண்ணுக்கு மன்றல் முடிப்பதும்
தூண்டில் போட்டுச் சிபார்சு பிடித்துமே
        துரைத்தனப் பணி மகனுக்கு வாங்கலும்
மாண்டு போகுமுன் செய்திட வேலைகள்
        வரையிலாதன கையி லிருப்பன
நீண்டிருக்கும் பொதுப் பணி செய்யவே
        நேரமிங்கெனக் கேதுநீர் சொல்லுவீர்.
-------------

36. சோதனை


அன்பொரு வடிவுகொண் டமர்ந்தது போலப்
பொன்னொளிர் வதனப் புத்தனு மிருந்தான் -
வந்தனன் இடிக்குரல் வளையெயிற் றரக்கன்
வெந்தழல் பொங்கும் விழிதமைப் பிதுக்கி
வானமும் அதிர்ந்திட வையமும் துளங்கிட
மோனமும் கலைந்திட மொழிக்கனல் சொரிவான் ;
"அன்பர சுலகினில் அமைக்கவோ நினைத்தாய்?
அன்பினைப் பகைமை அழித்திடல் காண்பாய் :
உன்றனை விழுங்கிநான் ஒழித்திடுவே னிதோ"
என்றனன். சாந்தியின் இருப்பிட மன்னான்
கமலமென் கையினைக் கருணையால் மலர்த்தி
அகமதில் சினமோ அச்சமோ இலாமல்
செவ்விதழ் அரும்பிய சிறுநகை தவழ
இவ்வித முரைப்பான் ; " இன்னுயிர்த் தோழனாய்
உன்னையும் கொண்டனன் ; உகந்தது புரிவாய்"
என்னுமிம் மொழிகேட் டிருங்கக னத்திடை
ஓங்கினின் றுருமிய உரித்தவாய் அரக்கன்
ஆங்கொரு புறவின் வடிவினை அடைந்தான்.
”அன்பினைப் பகைமையால் அழிக்க வொண்ணாதே;
என்பும் பிறர்க்கென இருப்பவர் வெல்லுவார்.
நித்திய வாழ்வினில் நிலைபெற் றிருப்பார்,
சத்தியமிது" வெனச் சாற்றினன், பறந்தான்
ஐயனின் மனத்திடன் அறிந்திடப்
பொய்யுரு வெடுத்துப் போந்தவத் தேவனே.
----
வளையெயிற்று - வளைந்த பற்களையுடைய. துளங்கிட நடுங்கிட.
---------------

37. அறிவு தெளிந்தேன்


எண்ணம் வானில் எழுந்து பறந்திட
        எண்ணிலாமனக் கோட்டைகள் கட்டினும்,
கண்ணைத் தைத்துச் சிறகைத் துணித்திட்ட
        கருடன் போலச் செயலின்றி நின்றனன் ;
மண்ணோர் இன்பநல் வீடென மாறவும்,
        வாழ்க்கை இன்னிசைக் கீதமாய்ப் பாயவும்
பண்ண ஆவி துடிக்கின்ற தாயினும்
        பாதை காணத் திறனில்லை என் செய்வேன்.

என்று நானும் வருத்தி இருக்கையில்
        எங்கிருந்தோ அவன் வந்து முன் தோன்றினான் ;
நின்ற தோற்றமும் நீள்விழிப் பார்வையில்
        நிலவு சாந்தியின் பேரொளிக் கூட்டமும்,
மன்று ளாடிய மாதவன் வேடமும்,
        வாகை சூடிடும் வெற்றி முறுவலும்
நன்றென் உள்ளம் கவரப் பணிந்தென்றன்
        நலிவு கூறி அறிவுரை நாடினேன்.

உள்ளத் தேகனல் விட்டெழும் ஆர்வமும்
        உறுதி யும்மிகுந் தாலவை போதுமால்;
வெள்ளிமாமலை தன்னையும் தூக்கலாம்;
        விண்ணை இங்கு கொணரவும் செய்யலாம்;
தள்ளி இந்தக் கலக்கத்தை விட்டு நீ
        தளர்வி லாமல் உழைத்திடு வாயெனக்
கொள்ளை கொள்ளும் நகைதவழ் பேச்சினில்
        கூறினானந்த ஞானப் பொலிவினன்.

கூடி யாரும் உழைத்திட வந்திடார் :
        குறும்பு பேசித் தடைபல சூழுவார்;
தேடில் எங்கணும் வீண்பழிச் சொல்லலால்
        சிறிதும் இல்லை உதவியென் றோதினேன்.
கோடி இன்னல்கள் வந்திடும் என்று நீ
        குறுகி நின்று கணக்கிடு வாயெனில்
நாடி இன்னும் அநேகம் குவிந்திடும்
        நன்மை காணல் அரிதெனச் செப்புவான்;

அச்சம் நீங்கித் தயக்கமும் தள்ளிநீ
        ஆண்மை யோடுமு யன்றிடும் போதினில்
துச்ச மாகும் எதிர்ப்பும் பகைமையும்;
        தோழ ராகப் பலர்வந்து கூடுவார்;
மெச்சி யுன்றன் பணியினில் சேருவார்;
        வெற்றி காணலாம் நிச்சயம் ; ஆதலால்
கச்சை கட்டிப் புறப்படு வாயென்றான் -
        கலக்கம் நீங்கி அறிவு தெளிந்ததே.
-------------

38. மனங் கசந்து போனதுவோ


அன்பின் திறங்காட்டி
        அனைவருக்கும் சுகம் பெருக்க
இந்நிலத்திற் கேகவைத்தாய்
        எத்தனை பேர் என்னிறைவா!
ஆசியநற் சோதியென
        அன்று வந்தார் ஒரு புத்தர்;
ஏசுமுனி பின் வந்தார்
        எருசலத்தின் தவப் பயனாய்.

எம்மிடையே காந்தி வந்தார்
        இன்னருளின் குரல் கேட்டோம்.
மும்மதிகள் சூழ்ந்தொளிரும்
        முழுமணிகள் பல கண்டோம்.
ஐயனுரை பாரிலெங்கும்
        அசோகன் பரப்பிய பின்
மெய்யினிலே ஆணியிட்டார்
        வீணர் கிறிஸ்து நாதருக்கு.

இந்திய மண் மீததுபோல்
        என்றேனும் நிகழ்ந்திடுமோ
என்றுரைத்துப் பெருமை கொண்டோம்,
        இந்நாளில் தலைகுனியப்
பாரதத்தின் தந்தையவர்
        பைங்குழந்தை நெஞ்சினிலே
ஈரமிலா வெறிக்கிறுக்கால்
        ஈயமிட்டுப் பழிகொண்டோம்.
காந்திமகான் அன்புரையும்
        கன்னித்தாய் சேய்மொழியும்
சாந்திவளர் கௌதமனார்
        சாற்றியதும் மறைந்தனவே!
கருணைப் பெருங்கடலே
        கருதறிய நற்பொறையே
குருட்டுச் சுயநலத்தின்
        கொடுமையிலும், நீதந்த
அறிவை முறைப்படுத்தி
        ஆழ்ந்துணராச் சிறுமையிலும்
கறைபட்டுக் குறியிழந்த
        கண்திறவா மக்களிடம்
தந்தையுன்றன் உளத்தினிலே
        தயை ஓங்க வழியுண்டோ ?
இன்னுமுமக் கெங்களிடம்
        இரக்கம் பெருகிடுமோ?
மக்களினம் செய்கின்ற
        மதியீனம் பொறுப்பாயோ?
தக்கவரை மேன்மேலும்
        தரணிக்குப் போக்குவையோ?
மனங்கசந்து போனதினால்
        மன்பதையைத் தான் முடிக்க
அணுக்குண்டை அனுப்பினையோ
        அறிந்திலனே என்னிறைவா.
---------------

39. மானிடா எழுக


மாண்பு மிக்குடைய மானிடா எழுக
வையகந் தன்னை வானக மாக்குக
புன்மையும் சூதும் பொய்ம்மையும் செய்து
உன்பெருங் குலமே ஒழிந்திடப் புரியேல்.

இறைவன் படைப்பினில் இப்பூவுலகம்
ஒரு பிடி மண்ண தில் ஓரணு நீதான்!
ஆயினும் உலகோ டகிலாண் டங்களும்
சாயவும் துளங்கவும் தழைந்து மேலோங்கவும்
வலியுடை எண்ணம் மனத்தினிற் கொள்ளும்
அலகிலா ஆண்மையோ டமைந்தவன் நீயே;
மாண்பு மிக்குடைய மானிடா எழுக
வையகந் தன்னை வானக மாக்குக.

இறைவன் நினைக்கு முன் எழுந்திடும் உயிர்களில்
சிறுபுழு முதலாச் செறிந்தவை நாடில்
எண்ணிறந் தவையாம்; இவைகளுள் ஒருவன் நீ;
என்னினும் வரிப்புலி இடிக்குரற் சீயம்
மதம்படு கரியெலாம் வணங்கிட அடக்கும்
முதற்படுந் திறமையில் முதிர்ந்த வன் நீயே.
மாண்பு மிக்குடைய மானிடா எழுக
வையகந் தன்னை வானக மாக்குக.

ஞாலமீ துன்றன் நனிசிறு வாழ்க்கையும்
காலவெள்ளத்தினிற் கண்டதோர் திவலையாம்;
உண்மையி தாயினும் ஓதுமக் காலமும்
வண்மையாற் கடந்து வாழ்ந்திடும் செயல்கள்
விண்ணுளோர் கண்டு வியப்புறும் படியாய்ப்
பண்ணிடும் அருந்திறல் படைத்தவன் நீயே;
மாண்பு மிக்குடைய மானிடா எழுக
வையகந் தன்னை வானக மாக்குக.

அழிந்துபோ யொருநாள் அனலிடை மூழ்கி
ஒழிந்திடும் யாக்கையை உடையவன் ஆயினும்
செயற்கரும் பணியால், தீஞ்சுவைக் கலைகளால்,
உயிற்குளே நின்றிடும் ஒருவனை அறிவதால்
என்றும் புவிதனில் இருந்திடும் சிறப்பினை
நன்று நீ கொண்டனை; நலமெலாம் பெருகவே
மாண்பு மிக்குடைய மானிடா எழுக
வையகம் இன்றே வானக மாக்குக
-----------------

40. கடிதம்


'கறுப் பென்றுனைப் பழித்தார்
        கவலை நான் கொள்ளவில்லை ;
'விருப்புற்று நீ யுரைக்கும்
        வேல் விழிக ளெங்கென்றார்.
மதுவில் மயங்கிடுங் கார்
        வண்டு நிகர் நின் கண்கள்
வதியும் ஒளி யறிய
        மதியில்லார் என் நண்பர் ;
பார்த்திட்ட மங்கை யெலாம்
        பஞ்சத் தழ கென்பாய்,
சீர்த்தி மிகும் அஜந்தா வின்
        சித்திரம் போல் வேணு மென் பாய்
எங்கடா நீ புகழ்ந்த
        எழிலெல்லாம்? உன்மனதை
இங்கே பறி கொடுக்க
        என்ன தான் கண்டு விட்டாய்
என்றே பல பல வாய்
        ஏளனங்கள் பேசுகின்றார்;
குன்றா உயிர்க் காதல்
        கொழுந்திடச் செய்யுனை யறியார்
நகைப்பைக் கண் டொரு சிறிதும்
        நான் சோர வில்லை ; இன்று
முகங் கோணி வார்த்தை சொன்னாய்
        முடிவில்லை என் துயர்க்கே .
---------------

41. நீல மலர்க்கண்


நீல மலர்க்கண் ணிரண்டு - என்றன்
        நெஞ்சை மயக்கிடும் வண்டு
மாலை இருளென வளரும் - அவள் தன்
        மைக்குழ லில் உளம் தளரும்

கன்னக் குழிமதுத் தேக்கும் - அதுவென்
        காதலை மீறியுண் டாக்கும்
மின்னைப்போல் தோன்றும் சிரிப்பு - கொஞ்சம்
        வேறுபட் டாலெங்கும் நெருப்பு

கொஞ்சும் மொழிகுயி லோசை - அதிலே
        குமிழியிட் டோங்குமென் னாசை
கஞ்ச மலர்முகைக் கொங்கை - ஏந்துங்
        கவின் நிறை வாளந்த மங்கை

அமுதுடன் வந்தசெய் யாளோ- என்மேல்
        அன்பு சிறிதும் செய்யாளோ
எமனுக்கு நானின்று தத்தம் - மீட்கவே
        எண்ணிடு மோ அவள் சித்தம்?
----------------

42. காந்தி அடிகள்


சாந்தத்தின் நல்லுருவம்
        சத்தியத்தின் குடியிருப்பு
தர்மநெறி அன்பஹிம்சை
        தழைத்தோங்கும் தனிக்கோயில்

காந்தியெனும் பெயர் கொண்ட
        கருணை ஒளிச் சுடர்விளக்கு
கலியுகமாம் காரிருளைக்
        களைந்தோட்டும் அருட்சோதி

மாந்தருக்குள் ஒரு மஹாத்மா
        மதிமயங்கி அணுக்குண்டாம்
மரணவிளை யாட்டினிலே
        மகிழ்வெய்தும் வையகத்தே

போந்தற்கோர் எச்சரிக்கை
        புகன்று சென்ற மெய்ஞானி
பாரதத்தின் தனிப்பெருமை
        புத்தன் வழிதழைக்க வந்த புனிதனாமே.
--------------------

43. வீரன் வழிநடைப் பாட்டு


ஜேய் ஹிந்த் ஜேய் ஹிந்த்
        ஜெய ஜெய ஜெய ஜெய
ஜேய் ஹிந்த் ஜேய் ஹிந்த்
        ஜெய ஜெய ஜேய் ஹிந்த் - ஜெய்ஹிந்த்

பாரத வீரா!
        தோளினைப் புடைப்பாய்
பாரெலாம் அதிர்ந்திடக்
        கோஷமிட்டெழுவாய்!- ஜேய் ஹிந்த்

உன் திறல் காட்டிட
        உலகெலாம் நடுங்கிட
வந்தது பெரும்போர்
        வாழ்கெனப் பாடுவாய் - ஜேய் ஹிந்த்

சண்டையின் குமுறல்
        சிந்தையின் அமுதம்
அண்டம் பிளந்திட
        ஆர்ப்பரித் தோதுவாய் - ஜேய் ஹிந்த்

தாய் புகழ் ஓங்கிட
        வீறுகொண் டெழுவாய்
பாய் புலி போலே
        சீறிமுன் செல்வாய்!- ஜேய் ஹிந்த்

ஆயிரம் ஆயிரம்
        அளவிலா உயிர்கள்
தாய் பணிக் காகத்
        தந்திட வருவாய்!- ஜேய் ஹிந்த்

சீற்றம் பொங்கிடச்
        சிறுமைகள் நொறுங்கிடக்
கூற்றினை நகைத்தே
        கூவி அதிர்ப்பாய்!- ஜேய் ஹிந்த்

நாற்பது கோடியாம்
        நம்மனோர் வாழ்ந்திட
ஆற்றலும் ஆண்மையும்
        அவனியிற் காட்டுவாய்! - ஜேய் ஹிந்த்
--------------

44. அடிமையின் வேண்டுகோள்


என்மனைக் கேகிடும் இவ்வழி அறிவேன் -
மனைவியும் அங்கே வழிபார்த் திருப்பாள்;
இரவெலாம் என்றனைக் காணா தேங்கிக்
கவலையால் உள்ளம் கசிந்தழு திருப்பாள் ;
குழந்தைகள் இரண்டும் குலைகாய்ந் திருக்கும்;
கண்ணீ ர் வடித்துக் கதறியே துடிக்கும்.
ஆயினும் அவ்விடம் போயென் செய்வது?

கையினில் இருந்த காசெலாம் கடையிலே
கள்ளின் வெறியிலே கரைந்துபோய் விட்டது.
வாய்வழிந் தோடிய பேய்க்கள் நனைத்திடத்
தலைதனைப் பாதையில் சாய்த்து நான் இரவெலாம்
உருண்டு கிடந்தேன் உணர்வில் லாமல் :
இந்தமு கந்தினைக் கொண்டு நான் இல்லம்
எப்படிச் செல்வது? என்னைக் கண்டதும்
துயரெலாம் மறைத்துச் சிறுநகை காட்டி
வந்தழைத் தேகும் மனைவியின் முன்னே
வெறுங்கை நீட்டினால் பருக்கையும் வேகுமோ?
வாடிய வயிறுகள் மகிழ்ந்து நிறையுமோ?
அப்பா எனவரும் அருமைக் குஞ்சுகள்
உப்புக் கூழும் உண்டிட லாகுமோ?
சீச்சீ இந்தச் சிறுமையேன் செய்தேன்?

மதியிழந் தொவ்வொரு மாலையும் அந்தக்
கடையினை நோக்கியே காலிழுக்கின்றது;
காலையில் பிறக்கும் உறுதியும் கவலையும்
மாலையில் மறைந்திடும் மாயமென் தெரியேன்.
மறைந்து மறைந்து நான் வளர்த்த இப் பழக்கம்
இறுகப் பிடித்தெனை என்றும் அடிமையாய்ச்
செய்ததே அந்தோ! சீரெலாம் குலைந்தேன்.
வாட்டமே அறியா மனைவியும் வாடவும்;
வறுமையும் பிணியும் மனை தனில் புகவும்
சிறுமைநான் செய்தேன் ; தேனினும் இனிப்பினாள்
மறுகிட ஒருநாள் குடிவெறி மயக்கினால்
தடிகொண் டடித்தேன்; சத்தியம் தவறினேன்;
கடையிருந் தால் நான் கடைத்தேற லேது?

பிடியதி லிருந்து பிழைத்திட வேறொரு
வழியெனக் கில்லை ; மக்களின் சார்பாய்
அரசியல் நடாத்தும் அறிஞரும் இந்த
அரக்கனை இன்னும் அழித்திடா தேனோ
இங்கும் அங்குமாய்த் தடைவிதிக்கின்றார்!
அதனால் வரும்பணம் அடிமையென் போல்வார்
குழந்தைகள் வயிற்றினில் கொட்டிய நெருப்பிலும்
முதிர்நடை தளர்ந்த முதியோர் பதைப்பிலும்,
மதிநிகர் மனைவியின் வாடிடும் நெஞ்சினில்
பாய்ச்சிய தீயிலும் பண்ணிய தல்லவோ?

பணமிதைக் கண்ணினால் பார்க்கவும் தகுமோ?
வழியினிற் கடைவலை வைத்தெமைப் பிடிக்கும்
வழிப்பறிக் குதவியாய் வாழ்வதோ அரசு?
சிந்தையை மயக்கித் திருடிடும் பொருளால்
நாட்டினை ஆண்டிடும் நாகரிகத் தோரே!
நொந்திடும் ஏழையின் நிந்தையும் சாபமும்
கள்ளுப் பணத்தினில் கண்டறி யீரோ?
ஆதலால் மதுவாம் அரக்கனை இன்றே
மாய்த்திடுவீரே ! மதியிழந் துள்ளோர்
விலங்கினை உதறி விழிபெற்று
நலங்குலை யாமல் நாட்டினில் வாழவே.
---
குறிப்பு : அரசாங்கத்தார் சில மாவட்டங்களில் மட்டும் மதுவிலக்கை அமுலுக்குக் கொண்டுவந்து மற்ற இடங்களிலும் அதைக் கொண்டு வருவதா, கொண்டுவந்தால் வருவாய் குறையுமே என்று யோசனை செய்த காலத்தில் பாடியது.
-----------------

45. யவனன் பாட்டு


கிளையில்லை நிழலில்லை
பூவில்லை கனியில்லை
பொன் பசுமை கரும் பச்சை இல்லை
தழையில்லை தழைத்திடவும் இனியோர்
அரும்பில்லை மொக்கில்லை
வேரில்லை மேதினியில் பற்றில்லை
மென்காற்றின் தழுவலினால் விளையும்
சிலிர்ப்பில்லை கலகலப்பும் இல்லை
தேடிவந்து பாடி மகிழ் சிறு பறவை இல்லை
பாலைவனம் வீழ்ந்த இந்தப் பருமரத்தைப் போலே
ஆருமில்லாத் தனியானேன் ஆஹாஹா யுத்தம்!
----
இரண்டாவது உலக யுத்தத்தில் உயிர் தப்பித் தன்னந் தனியனாய் இந்தியாவில் தஞ்சம் புகுந்த
யவன தேசத்தான் ஒருவன் பாடுவதாகத் தழுவற் கவிதை. கிரேக்க நாடு போரிலே பெரிதும்
துன்புற்றது. மக்கள் ஆயிரக்கணக்கில் மாண்டனர், ஒரு கணத்தில் மனைவி மக்கள் உற்றார்,
உறவினர் அனைவரை யும் இழந்தவர் எத்தனையோ பேர் , அவ்வாறு துயருழந்த ஒரு வன்
எண்ணங்களை இது தெரிவிக்கிறது.
--------------

46. யாரது?


யாரோ என் கதவைத் தட்டுகிறார்கள்.
யாரது?
யார் என்று கேட்டால் பதில் வருவதில்லை.
நானோ கதவைத் திறந்து பார்ப்பதில்லை.
உண்டும்
குடித்தும்
ஆடியும்
பொழுதைக் கழிக்கிறேன்!
கதவை யாரோ இடையிடையே தட்டும் சப்தம்
மட்டும் ஓய்வதில்லை.
திடுக்கிட்டு ஒரு வினாடி நின்று பார்க்கிறேன்.
உள்ளத்திலே ஓர் ஒளி மின்னுகிறது.
யாரது என்று கேட்கிறேன்.
பதில் வருவதில்லை.
நானும் கதவைத் திறப்பதில்லை.
மறுபடியும் எனது கேளிக்கைகளில் முழுகிவிடுகிறேன்
இடையிடையே யாரோ பொறுமையாய்க் கதவைத் தட்டுகிறார்கள்.
ஆனால் என் களியாட்டங்களை விட்டுப்போய் கதவை
திறந்து பார்க்க எனக்கு விருப்பமோ எண்ணமோ இல்லை.
-----------------

47. வாழ்க்கைப் பிரயாணம்


ஓடக்காரா
என்னை நீ எங்கு தள்ளிச் செல்லுகின்றாய்?
கொந்தளித்துக் குமுறும் வெள்ளத்தில் அலையவைத் தாய்
பாறைகளில் மோதி வேடிக்கை பார்த்தாய்.
சேற்றிலே புதைந்து அலமரச் செய்தாய்.
பயணம் தொடங்கியது முதல் ஒரே கவலை; ஒரே கலக்கம்,
இன்பமென்று கண்டதெல்லாம் கனவாகிவிட்டதே!
சிறிதாவது அமைதி உண்டா ?
ஓய்வுண்டா ?
ஓடக்காரா, உனக்கு இரக்கமில்லையா?
மோதி அடிபட்டுச் சட்டகமும் கலகலத்துப் போய் விட்டதே?
அந்திப் பொழுதும் நெருங்கிவிட்டதே?
இனியாவது அமைதியான நீரில் செல்லலாகாதா?
இப் பயணம் எப்பொழுதுதான் முடியுமோ?
உறங்கிக்கிடப்பதும், விழித்துச் செல்வதுமாய்
எத்தனை காலந்தான் கழியுமோ?
எத்தனை உடைகள் மாற்றி மாற்றி அணிவதோ?

ஓடக்காரா
இன்னும் கருணை பிறக்கவில்லையா?
என்னைக் குறியிடம் கொண்டு சேர்க்கமாட்டாயா?
நான் உன்னைக் கெஞ்சுகின்றேனே?
வேறு நான் என்ன செய்ய முடியும்?
எல்லாம் உன்னால் தானே ஆக வேண்டும்?
நீ செலுத்தினால் நான் போகிறேன்,
நீ ஓடக்காரன்; நான் ஓடம்.
நீ உயிர்; நான் உடல்.
நீயின்றி நானென்ன செய்ய இயலும்? ஓடக்காரா.
இன்னும் அருள் சுரக்கவில்லையா?
என்னை நீ எங்கே தள்ளிச் செல்லுகின்றாய்?
--------------

48. அழைப்பு


இளைஞனே எழுந்து நில்
தளையெலாம் இன்றே தகர்த்திடு;
அரியவும் பெரியவும் புரியவந் தவன் நீ
இளைஞனே எழுந்து நில்.

அன்னையும் அழைத்தனள்
இன்னுமோ உறக்கம் எழுந்து நில்;
இன்ப மனைத்தும் கொணர்ந்திடத் துணிந்திடு;
இளைஞனே எழுந்து நில்.

சோம்பலும் சோர்வும்
போம்படி தோளினைப் புடைத்திடு;
வானையும் பிளந்திடும் வன்மைகொண் டவன் நீ
இளைஞனே எழுந்து நில்,

சண்டமாருதம்போல்
எண்டிசை தன்னிலும் ஏகிடு
புதுப்புதுக் கலைகளும் புதுப்புதுப் பொறிகளும்
புதுமையிற் புதுமை செய்.

பழமையின் உயர்வையும்
அழகையும் நன்றாய் அறிந்திடு;
உன்னருஞ் சாத்திரம் உயர்கலை உடையாய்
இளைஞனே எழுந்து நில்.

குமரியிற் குடைந்திடு
இமயவான் உச்சியில் ஏறிடு
தாய் தரும் இணையிலாத் தனமெலாம் அடைந் திடு
இளைஞனே எழுந்து நில்.

ஞாலமின் புறவே நன்மை செய்
காலம் வருமெனக் காத்திருப் பவன் செயான்
இன்றே செய்திட இன்னே செய்திட
இளைஞனே எழுந்து நில்.
------------

49. அன்பு வழி


மக்களெலாம் தேவர்களாய்
        மாறவொரு வழியுண்டு
மனம் படைத்த பெரும்பயனும்
        மனிதனுக்கு வாய்த்திடுமாம்;
தக்கபடி மனம் மலரத்
        தந்திரமும் நாமறிந்தால்
தாரணியை விண்ணாடாய்ச்
        சமைத்திடலாம் நிச்சயமாய்.
மனம் என்னும் பெருங்குரங்கு
        மாயத்தின் பெருஞ்சூழ்ச்சி
வாழ்வெல்லாம் தந்திடவும்
        தாழ்வெல்லாம் சூழ்ந்திடவும்
கணத்தினிலே சொர்க்கமதும்
        கணத்தினிலே பாழ்நரகும்
காட்டவல்ல மனக்குரங்கு
        கடவுளரின் பெருங்கொடையாம்.
மாயமனக் குகையினிலே
        மச்சுண்டு; மேல்மாடி
வாழ்ந்திருப்போர் தேவர்கணம்;
        மற்றந்தக் கீழ் நிலையில்
தாயறியா விலங்கினங்கள்
        தலையில்லாப் பெரும் பேய்கள்

தாழ்வளிக்கும் உணர்ச்சியெலாம்
        தங்கியுரை பெருநரகம்.
அன்பரசு வீற்றிருக்க
        அருளாட்சி மேல் நிலையில் ;
அவ்வாட்சி ஓங்கிவிட்டால்
        அனைத்துலகும் இன்பமன்றோ ?
அன்பு செய்தால் தேவநிலை;
        அதையழித்தால் விலங்காவோம்;
ஆதிமுதல் தொடர்ந்துவரும்
        பூதகணத் திரையாவோம்.
ஆற்றல் மிகும் மானிடனே,
        அறிவாலும் மனத்தாலும்
அற்புதமாம் கற்பனைகள்
        அவை செயலில் வெற்றிகண்டாய்;
காற்றினிலே பறந்துவிட்டாய்;
        கலைகள் பல தோற்றுவித்தாய்;
கனவாய் நினைத்தவெலாம்
        கைகூடச் செய்துவிட்டாய்;
அண்டம் அளந்துவிட்டாய்.
        அணுவைப் பிளந்துவிட்டாய்.
அளவில்லாச் சாதனைகள்
        ஆனாலும் உன்னகத்துள்
மண்டுமிருட் கொடுங்குகையை
        மடை மாற்றி ஒளியேற்ற
வகையறியாக் கீழ்நிலையில்
        வாய்த்த வெற்றி யென்னபயன்?

அறிவெதற்கு? மனம் எதற்கு?
        அனைத்தையுமே அழிப்பதற்கோ?
ஆக்குதிறன் எல்லாமுன்
        அழிவுக்கே வழிசெயவோ?
இறகுபெற்ற சிற்றெறும்பு
        எழுந்து பறந் தெரிதீயில்
விழுந்தழிந்து மாய்வது போல்
        வித்தையினால் மாய்ந்திடவோ?
விலங்குணர்ச்சி மாய்க்காமல்
        வெற்றிபல பேசியென்ன?
வெளியியற்கை வெற்றியெலாம்
        மெய்வெற்றி யாகாது.
உலகெல்லாம் ஒருசேர
        ஒழிக்கவல்ல படை கண்டோம்;
ஒழிந்திடவோ மக்களினம்
        உயரத்தான் செய்வோமோ?
நெருக்கடியிந் நிலையினிலே
        நீசமனப் புன்மையெலாம்
நீங்கிடவே நல்லறிவால்
        நிச்சயித்து மனம் விரிய
உருத்தெழுந்து நிற்போமோ?
        உடல் வளர்ச்சி யோர்நிலையில்
ஓய்ந்து மெல்ல நலிவதுபோல்
        உள்ளம் நலிந்திடுமோ?
புல்லாகி மரமாகிப்
        புழுபறவை விலங்காகிப்

புத்தி மனவாற்றல் மிகும்
        மனிதனாய் வந்ததுடன்
நில்லாமற் பரிணாமம்
        நாம் வளர்க்க மாட்டேமோ?
மனமிதற்கு வலியிலையோ?
        வளரத்தான் மாட்டாதோ?
வாய்த்த மனம் குறுகியதோ?
        வானுயர விரிந்திடுமோர்
வல்லமையும் இதற்கிலையோ?
        மற்றவுயிரன்றி மனிதனுக்குள் ளேதானும்
மக்கள் மனை உற வென்றும்
        மாவட்டம் தேசமென்றும்
கற்பனையில் எல்லைகட்டிக்
        காசினியைப் பிரித்தழிக்கும்
இச்சிறுமை தாண்டிடவும்
        இம்மனத்தால் ஆகாதோ?
எல்லையுற்ற குட்டையிதோ?
        எழுந்து பொங்கி எங்கணுமே
அன்பு வெள்ள மாய்ப் பெருகும்
        ஆற்றலிலாச் சிறுமையிதோ?
அனைத்துயிரும் உயிரில்லா
        அனைத்துமே ஒன்றென்னும்
பரந்துணரும் அன்புடனே
        பரிணமிக்கும் வன்மையிந்த
மனத்திற்கே இல்லையெனில்
        மனிதனிதைத் தன்னறிவால்

மாற்றிடவும் ஆகாதோ?
        மரணந்தான் இதன் முடிவோ?
மானிடனே, இல்லை இல்லை,
        இக்கருத்தை நான் ஏற்கேன்;
புத்தனென்றும் இயேசு வென்றும்
        புனிதமுனி காந்தி யென்றும்
வாடுமிளம் பயிர்கண்டு
        வாடுமருள் வள்ளலென்றும்
இத்தரையில் வந்தவர்கள்
        இம்மனமும் அன்பினிலே
எவ்வுயிரும் தன்னுயிராய்
        எண்ணும்வகை காட்டுவித்தார்;
வன்மையுண்டு மனத்திற்கும்
        மலர்ந்ததுவும் ஓங்கிவிடும்;
எழுந்திரடா புறவெற்றி போதும்;
        இனி அகவெற்றி நாடிடுவாய்;
மென்மை உணர்ச்சி யெலாம்
        மேலோங்கச் செய்திடுவாய்;
விண்ணொளியால் குகையிருட்டை
        விழுங்கிடவே செய்திடுவாய்;
அன்பினிலே மனம் மலர
        அமரனைப்போல் வாழ்ந்திடுவாய்;
இன்பம் பெருகி யெங்கும்
        எவ்வுயிரும் மகிழ்ந்திடவே
அன்புவழி அன்புநிலை
        அன்புச் சிவமாவாய்
அன்புவழி யோங்கிவிட்டால்
        அமரநிலை வந்திடுமே.
---------------

50. காதலி கடிதம்


ஓர் இள நங்கை
அழகுக்கு அழகு செயும் அழகி
மதனனே மயங்கிவிழும் வனப்புடையாள்
சிற்றோடை யொன்றில்
        சேலை துவைத்திருந்தாள்
கட்டழகன் காளை
        காவலனும் கண்ணுற்றான்; காதலித்தான்

‘மங்கையே உன்னை
        மணக்க மிக விழைகின்றேன்;
சங்கையுற வேண்டா
        தரணிக்கு நாயகன் நான்.
மேற்கொண்டு நான் செல்லும்
        வினைமுடித்துக் கூப்பிடுவேன்,
வரவேணும்' என்றிரந்தான் :
        பாவை உடன் பட்டாள் -
சென்றுவிட்டான் இளவேந்தன்
        காத்திருந்தாள் பெண்ணமுது காதலினால் ;-

மங்கைப் பருவம் போய்
        வயோதிகமும் வந்ததன்றே;
மேனி சுருங்கிற்று:
        முகமதியம் கலைமாறிச்
சாகும் பருவத்தைச்
        சார்ந்துவிட்டாள் கற்பரசி.

'அண்ணலை நான் மற்றொருகால்
        காண்பேனோ?
கண்டாலே பாக்கியமே'
        என்றே அரசுறையும்
எழில் நகரம் தான் வந்தாள் :
        மன்னவனைக் கண்டாள் ;
மற்றவன் தன் வார்த்தை சொன்னாள்;
'ஐயகோ அரசுப் பெரும்பாரம் உள்ளத்தில் மலையாகி
        உன் நினைவைத் தான் புதைத்து
அறவே மறந்துவிட ஆக்கினதே !
மற்றோர் இளமாதை
        மணம் புரிந்த காலத்தும்
உன்னை மறந்தேனே, ஐயையோ!
பெண்மை அணிவிளக்கைப்
        பெருந்துயரில் வைத்தேனே'
என்னத் துயர் உழந்தான்;
கன்னியும் சோர்ந்தாள் ;
காதற் கடவுளுக்குக் காணிக்கையாய்ச் சேர்ந்தாள்.

உதயச் சுடர்நாட்டில்
        உற்ற அவலமிது:-
காதல் மறதியினால்
        கன்னி உயிர் வாடுவதை
இக்கதையிற் கண்டோம்
        என் கதையும் இதுதானோ?
----------------

51. காதல் ஏக்கம்


பட்டிக் காட்டில் வளர்ந்த பசப்பறியா இளமங்கை ;
வெட்டி யலங்கரித்து வளர்க்காத காட்டுப்பூ ;
சுண்ண மறியாத சோதி முக முடையாள் ;
கண்ணுக்கு மையில்லை; கடைக்கண்ணிற் குறும்பில்லை;
செயற்கைக் குழல் சேர்த்துச் சிங்காரஞ் செய்யாத
இயற்கைவனப்புடனே என் முன்னர்த்தோன்றி
நின்ற மங்கைதனைக்கண்டு மனது பறிகொடுத்தேன்.
எங்கும் அவள் தோற்றம் என்னைப் பரவசிக்கப்
பெண் கொடுக்க வேண்டுமெனப் பெற்றோரைக்
கேட்டிடவே சொந்தக் காரர்சிலரைத் தூதாகப் போக விட்டேன் ;
"பத்தாவது தானும் படித்திருந்தால் பத்தாது,
சொத்து சுகமென்ன?" வென்றார் ; சோர்ந்துமே நான் விழுந்தேன்.
காதல் தன முண்டு ; காணி தனம் குறைவே.
ஆதலினால் பெண் கொடுக்க அவர் மறுத்து விட்டாரே.
"உடல் வலிமையுண்டு; ஊக்கமுடனே யுழைப்பேன் ;
கடலைக் கடந்தேனும் காதலியைக் காத்திடுவேன்?
காசு பெரிதோ? காதல் பெரிதெ"ன்றேன் :

கூசாது நான் சொல்லக் கலியுகத்தின் விந்தை யென்று
பெற்றோர் சிரித்தார், பேச்செடுக்க வேண்டா மென்றார்
உற்றாரும் உள்ளுக்குள் ஊறுஞ் சிரிப்புடனே
கைவிட்டு விட்டார்கள்; கண்ணே நான் செய்வதென்னே?
நொய்பட்டு வாடுகின்றேன் நிவர்த்தி யொன்றுங் காணேனே!
உன் கண்ணிற் காதல் உயர்ந்தோங்க நான் கண்டேன்
பின்னுன்றன் உள்ளம் பெற்றோர் அறிவாரோ?
மேல் வீட்டுச் சின்னப்பன் மெத்தப் பணக்காரன் ;
கால் நடைகள் கணக்கில்லை கழனிகளும் தோப்புகளும்,
அவனுக் குனைக் கொடுக்க ஆசையுட னிசைந்து விட்டார்.
"தவணை யொன்றுமில்லை சடுதியிலே செய்திடலாம்
கண்ணாலம்" என்றார்; கருத்ததனைத் தானறியப்
பெண்ணை யுளங் கேட்கும் பேதமையை யார் செய்வார்
ஆடுகளை விற்பது போல் அடுக்களையில் வைத்துப்பின்
கூடி மணம் பேசிக் கூசாமல் தள்ளிடுவார்;
பஞ்சாங்கம் பார்ப்பவரைப் பத்துத்தரம் கேட்பார்;
கொஞ்சும் மதலைகளைக் கனவிலுமே கேட்டறியார்;
பணப் பொருத்தங் கேட்பார், பல சீர்கள் கேட்டிடுவார் :
மணப் பொருத்தங் கேட்பார், மனப் பொருத்தங் கேளாரே!

கண்ணின் மணியே , கனிரசமே, கற்கண்டே!
பெண்ணரசே யுன்றன் பிரியமதை நானறிவேன் ;
உள்ளமதை நீயுரையாய், உன் தாயுங்கேட்டறியாள்
தெள்ளு தமிழ் நாட்டில் தலைக்காதல் முன்னாளில் ;
கற்றறிந்தார் போற்றும் கலித்தொகையும் அகநூலும்
கற்றுக் களித்திடலாம் கண்டதுண்டோ இந்நாளில்!
“இங்கிலீஷ் படிக்கப் போய் இவனுமே கெட்டுவிட்டான்;
எங்கும் இவனைப்போல் யாரையுமே கண்டதில்லை"
என்றெந்தன் பந்துக்கள் ஏசி யிகழ்கின்றார்.
கன்றி மனம் வெந்து குலைகின்றேன் கண்மணியே.
அரைக் காணி நிலமுண்டு அதையுழவும் எண்ண மில்லை ;
புரையுண்ட புண்போலப் பொங்குகின்ற தென்நெஞ்சம்.
காதல் தனியேரால் காமனதை யுழுகின்றான்;
சாதல் எனக்குத்தான் தண்ணமுத மாகுமின்றே.
என் நோய் பெரிதில்லை; எப்படியோ சாகின்றேன்;
உன் நோய் தனைத்தீர்க்க ஒருவழியங் காணேனே!
வாழ்நாள் முழுவதுமே வருந்தி யுளத்த ழுந்தி
ஊழ் வினையை நொந்து உயிர்த்திடுவாய் ஐயையோ!
கண்ணீர் தனையுகுத்துக் கரந்திருந்து விம்மிடுவாய்;
எண்ணதன வெண்ணி ஏங்கிடுவாய் என் செய்கேன்?
பண்டைத் தமிழ் நாடு பாரினிலே வாராதோ?
கெண்டை நிகர் கண்ணார் கனவருத்தந் தீராதோ?
-------------

52. அவலம்


அவலமெனும் பேயரக்கன் அன்றொரு நாள் வந்தான் -
அவனுருவம் கண்டவர்கள் அஞ்சுதலும் வியப்போ ?
குழிந்த கன்னம் குழிந்த விழி கூரீட்டி போலே,
இழிந்து பல திசைகளிலும் ஏகும்முடி தாடியுடன்
வானகத்தே ஓங்கிவளர் மரக்கூட்டம் நிறைந்த
கானகத்துக் குகைதோன்றும் கரடியென நின்றான்.
மேனியெல்லாம் அவன் தரித்த விருதுகள் தாம் என்னே !
மேனியிலான் வாளியினால் வீழ்ந்த பல உள்ளம்,
காடுசென்று தவங் கிடந்து கதிகாணான் கலக்கம்,
கோடிபல சேர்ந்த பின்னும் குறையாத பேராசை -
இப்படியாய் எண்ணிலவாம்: 'இவையெல்லாம் என்றன்
செப்பறிய திறல் காட்டும் சில பதக்கம்' என்றான்:
"செத்தவரை எண்ணியழும் கண்ணீரில் தினமும்
மெத்த மகிழ்ந் தாடிடுவேன்; நத்தியவர் உயிரைத்
தின்றிடுவேன் ; உன்னையும் நான் சேர்ந்திருக்க வந்தேன்" -
என்று சொல்லித் தான் நகைத்தான், இடி முழக்கம் கேட்டேன்;
"என்னிடத்தே வந்தனையோ? இருப்பாய் நீ நன்றே;
பரிகாசம் பகடி செய்து நகையாட எனக்கே
அருகேயோர் அசடுவழி ஆளொருவன் உனைப்போல்
வாய்க்காது வா" வென்றேன்; வந்தவழி பார்த்துப்
பாய்ந்தானோ பறந்தானோ பதில் சொல்லக் காணேனே.
--------------

53. விதி


தேன் சுவை விரும்பிச் செயற்கரும் இறாலை
நான் தொடச் சினந்து நஞ்சினைப் பாய்ச்சிக்
கொட்டிய தேனீக் கொடுக்கினை யிழந்து
பட்டு மடிந்து பாரினில் வீழ்ந்தது;
பிறர் பொருள் வவ்விப் பீழையான் உற்றேன்;
பொறை தவிர்ந் தமையால் பொன்றிய ததுவுமே.
--------------

54. பெலால் சென்


[பெலால் சென் என்பவன் சரித்திர சம்பந்தமான வடநாட்டு வீரர்களில் ஒருவன். நெஞ்சத் துணிவும் நிகரில்லாப் போர்த் திறனும் வாய்ந்தவன். பல போர்களிலே வெற்றி கண்டவன். அவன் ஒரு இளமங்கையைக் காதலிக்கிறான்; அவளும் அவ னைக் காதலிக்கிறாள். திருமணம் நடக்கிறது. பின்பு அவன் தன்னுடைய கோட்டையை விட்டுப் புதியதோர் போருக்குப் புறப்பட நேர்கிறது. காதலியின் நெஞ்சங் கலங்குகிறது; பாட்டு இங்கே தொடங்குகிறது. ]

“நெஞ்சுகலங் காதேயடி பெண்ணே - கண
        நேரமதில் வென்று மீள்வேன் கண்ணே
வெஞ்சமர மிதுபோ லநேகம் - நான்
        வென்றதை நீ கண்டபின்னேன் சோகம்?"

“சென்றபின்பு நாளுமென்றன் நாதா - அமர்ச்
        சேதியிங் கனுப்பமுடியாதா?"
என்றுமயில் நைந்துருக வேதான் - எண்ணி
        ஏதுரைப்பான் பெலால் சென், “நீதான்

கண்டறிய வகையொன்று செய்வேன் - நானும்
        கையிலென் புறாவெடுத்துச் செல்வேன்;
மண்டமரில் நான் மடிந்தால் மானே - உனை
        வந்தடையும் அந்தப்புறாத் தானே."

தந்துசொலிக் கந்துகத்தில் தான் - அது
        தாண்டியது மங்கைமனம் நோவ.
முந்திவந்த பகைவரை வேலால் - பெலால்
        மோதியுயி ருண்டுவரு வானால்.

செத்தவர்கள் கணக்கில்லை யன்று-வளர்
        தீரனவன் களங்கொண்டான் வென்று.
கத்து குயில் மொழியாளைக் காண - அவன்
        கடுகிவந்தான் காற்றுவேகம் நாண.

சூரியனும் மேற்றிசையில் வந்து - எங்கும்
        சூழுமிருள் கண்டனன் சிவந்து;
ஆரியனும் மல்லகதி பறந்தான் - களிப்பில்
        அங்கையிற் புறாவின் பிடி மறந்தான்.

விண்ணிலது படபடத்து நேரே - ஒரே
        வேகமதாய்ச் சென்றதவன் ஊரே.
வண்ணப்பரி தட்டிவிட்டான் உள்ளம் - சால
        வதவதக்கத் தாண்டும் மேடும் பள்ளம்.

கோட்டைதனில் நுழைகின்ற போதே - அங்குக்
        கொழுந்துவிட்ட தீகண்டான் தீதே;
மீட்டுவந்த வெண்புறவு கண்டு - அந்தோ
        வீழ்ந்துவிட்டான் நாதனெனக் கொண்டு

தீக்குளித்தாள் கற்பரசி நொந்தே - அந்தத்
        தீரனும் துடித்தான் உளம் வெந்தே.
தேக்கெறியும் எரியிடையே சென்றான் -'என்ற ன்
        தேனேவந்தேன் உன்னுடன் நான்" என்றான்.
----------------

55. தியாகம்


[பல ஆண்டுகளாக நாட்டிலே மழை பெய்யவில்லை. குடிக்கக் கூடத் தண்ணீர் அற்றுப்போய் விட்டது. மக்களெல்லாம் வாடி னர். அவர்களுடைய துன்பங்கண்டு அரசன் உள்ளம் பதைத் தான். குடிதண்ணீருக்காகவது வகை செய்ய வேண்டுமென்று பெரிய கிணறொன்று வெட்டினான். எவ்வளவு ஆழம் வெட்டியும் கிணற்றில் ஊற்றே வரவில்லை. அரசனுடைய வருத்தம் கரை கடந்துவிட்டது, அந்த நிலையிலே பாட்டுத் தொடங்குகிறது. இப்பாடல் அஸ்ஸாமியக் கதை யொன்றைத் தழுவி உருவாகி யுள்ளது ]

'மாரி பொழிய வில்லை - வெட்டும்
மாபெருங் கேணியிலும்
நீரினைக் காணே னந்தோ - என்றன் நெஞ்சங் குமுறு கின்றேன்.

நீதி தவறினனோ - அன்றி
நேர்மை குலைந்தேனோ?
ஏது பிழை யறியேன்- மக்கள்
இடரில் அழுந்தினரே.'

என்றெண்ணி மன்னவனும் - துயர்
ஏறி உறங்கிடுங் கால்
கண்ட கொடுங் கனவை - அவன்
காதலிக்கே யுரைப் பான்;

'நாகினி தேவிக்குனை - பலி
நல்கிடின் நீர் பெருகி
வேகமாய் ஊறிடுமாம் - இது
விண்ண வர் தம் முடிவாம்."

அம்மொழி கேட்டவுடன் - முகம்
அன்றலர் தாமரையாய்ச்
செம்மொழி கூறுகின்றாள் - அன்பின் தெய்வ மேயன்ன மங்கை.

'குடிதுயர் தான் களைதல் - உயர்
கொற்றவன் தன் கடனாம்.
கடிமணம் செய்தவர்க் காய் - வாழ்தல்
கன்னியர் தங் கடனாம்.

ஆதலின் என் பதியே - என்னை
அர்ப்பணம் செய்திடுவீர்.
காதற் கணவனுக்கும் - மக்கள்
கண்ணீர் துடைப்பதற்கும்

சாகக் கொடுத்து வைத்தேன் - இதிற்
சாலச் சிறந்த தில்லை;
தேக மெடுத்த பயன் - இன்று
தெய்வங் கொடுத்த' தென்றாள்.

மன்னன் மனங் குழம்ப - மறுநாள்
மக்கள் உளந் துடிக்க
மின்னெனக் கேணியுளே - நங்கை
வேகமாய்ச் சென்றடைந்தாள்.

ஆழக் கிணற்றினுள்ளே - மறைந்த
அன்புருக் காணாமலே
தாழுங் குரலினிலே - மன்னன்
தயங்கியே கேட்டிடு வான் :

'என்ற னுயிர் பைங்கிளியே - கமலா!
எவ்வள வில் தண்ணீர் வந்த துரையாய்.'
'என்ற னுயிர் ஆன இன்ப நாதா !
என்றன் முழங் கால் அளவில் வந்த திங்கே தண்ணீ ர்.'

'என்ற னுயிர்ப் பைங்கிளியே - கமலா!
எவ்வளவில் தண்ணீர் வந்த துரையாய்."
'என்ற னுயிர் ஆன இன்ப நாதா!
இடுப்பளவில் தண்ணீரிப்போ வந்திருக்கு திங்கே .'

'என்ற னுயிர்ப் பைங்கிளியே - கமலா!
எவ்வளவில் தண்ணீர் வந்த துரையாய்."
'என்ற னுயிர் ஆன இன்ப நாதா!
என் கழுத்தை எட்டிவந் திருக்குதிங்கே தண்ணீ ர்.'

"என்ற னுயிர்ப் பைங்கிளியே - கமலா!
எவ்வள வில் தண்ணீர் வந்த துரையாய்."
ஒன்றும் பதில் வந்த தில்லை; ஆங்கே!
உவகையுடன் அழுகையுமாய் மன்னன் மக்கள் நின்றார்.

[நீதி தவறினனோ அன்றி நேர்மை குலைந்தேனோ -- குடி களின் துன்பத்திற்குத் தனது தவறே காரணம் என்று எண்ணி அரசன் வருந்துகிறான். நாகினிதேவி - பாதலத்தில் உள்ள தேவதை. என்ற னுயிர்ப் பைங்கிளியே - இவ்வாறு ஒரே சொற்றொடர் பல்லவி போலப் பல முறைவருவது காதை வரியின் ஓர் இலக்கணம். ]
--------------

56. வீரன் குமரன்


[காந்தியடிகள் தோற்றுவித்த சாத்விகப்போர் எத்தனையோ பேரை வீரர்களாகவும் தியாகிகளாகவும்
செய்தது. அப்போரில் பங்குகொண்டு உயிர்த்தியாகம் செய்தவர்களில் திருப்பூர்க் குமரனும் ஒருவர்.
அந்தத் தியாக வரலாறு இங்கு கூறப்படு கிறது.

"அன்பின் வடிவமாம் அன்னையே - உன்றன்
        அடிமலர் வாழ்த்தி வணங்கினேன்;
இன்பமு டன் விடை நல்குவாய் - நானும்
        என்பணி தேசத்திற் காற்றுவேன்'

என்று குமரன் பணிந்திடத் - தாயும்
        இளநகை செய்துரை யாடுவாள்:
"நன்றுகு றித்தனை மைந்த நீ - வளம்
        நாடும் திருப்பூரின் செல்வமாம்;

சாத்விகப் போரெனில் தைரியம் - நெஞ்சில்
        சாலவும் வேண்டும் நீ கொண்டுளாய்;
ஆத்மிக சக்தியும் அன்பறம் - வெல்ல
        ஆருயிர் ஈந்தும் கடன் செய்வாய்;

தேடற் கரிய மகாத்மாவை - இந்தத்
        தேசத் தலைவராய்ப் பெற்றுளோம்;
பாடற் கரிய தமிழ்மகன் - புகழ்
        பாரெங்கும் வீசிடச் செல்லுவாய்."

அன்னையின் இன்மொழி கேட்டனன் - அவள்
        அடிமலர் கண்களில் ஒற்றினன்;
"சொன்ன அறிவுரை போற்றுவேன் - உங்கள்
        சூரத் தமிழ்மர போங்கவே."

வாங்கினன் கையிற் கொடியினை - நீல
        வானில் ஜொலித்தது மூவர்ணம்;
பாங்கினில் அன்னையும் நெற்றியில் - வெற்றி
        பாடித் திலகம் அணிந்தனள்.

“ஜய ஜய பாரதம்" என்றுமே - கூவித்
        தலைநிமிர்ந் தேகினன் காளையும் ;
“ஜயஜய" என்றுபல் லாயிரம் - மக்கள்
        சாற்றிப் பின்சென்றனர் வீதியில்.

பேரொலி அண்டம் பிளந்தது - அடிமைப்
        பிடியும் மனத்தில் தளர்ந்தது;
வீரக் குமரனோர் சிங்கம் போல் - தடை
        மீறிப் பவனியாய் வந்தனன்.

வெள்ளையர் விட்டெறி காசுக்காய் - மானம்
        விற்றுப் பிழைத்திட்ட சேவகர்
கள்ளனைத் தேடிப் பிடியென்றால் - அவனைக்
        காட்டிற் பிடிப்பம் என் றோதிடும்

சூரரத் தாசர் தலைவனாம் - ஒரு
        சொத்தைப் பயல்வந்து தோன்றினான்
பாரதம் வாழ்கெனக் கூறினால் - அவன்
        பார்த்துச் சகித்திடல் ஒண்ணுமோ

அந்நியர் ஆட்சிதன் கைத்தடி - அதன்
        ஆணையால் நின்றதென் றெண்ணியே
முன்னணி தன்னிற் கொடியுடன் வரும்
        மொய்ம்புடை வீரன் குமரனை

மண்டையி லோங்கி யடித்தனன் - அந்த
        மண்டையில் மூளையில் லாதவன் ;
கண்டவர் உள்ளம் கொதித்தது - வீரன்
        “காந்திக்கு ஜே" யென்று கூவினான்.

சாந்த முனிபெயர் கேட்டதும் - மக்கள்
        சற்றுத் தணிந்தனர் கோபத்தீ ;
"காந்தியின் ஆணையை மீறிடோம் - பகைக்
        கைத்தடி தன்னையும் சீறிடோம்"

என்று குமரன் இசைத்திட்டான் - அவன்
        இன்மொழி வாய்மேல் அடித்தனன்.
குன்றுபோல் நின்றந்த வீரனும் - ஜய
        கோஷத்தை மேலும் முழக்கினான்.

மார்பிலும் கையிலும் காலிலும் - தாசன்
        மாறி யடித்தனன் வேகமாய்;
பார்வை கலங்கிற்றப் போதிலும் - வீரன்
        “பாரத பூமிக்கு ஜே' யென்றான்.

மிருக பலமொரு பக்கமாம் - ஆன்ம
        மேன்மைப் பலமொரு பக்கமாம்;
தரும பலமொரு மக்கமாம் - கொடுந்
        தடியின் பலமொரு பக்கமாம்.

உடலை நொறுக்கி யடக்கினால் - நெஞ்சில்
        ஓங்குபேர் ஆர்வம் ஒடுங்குமோ?
கடலின் கொதிப்பைக் குறுந்தடி - வீச்சிற்
        கட்டுப் படுத்தவுங் கூடுமோ?

கொடியும் பறந்தது வானிலே - ஆனால்
        குமரன் மயங்கி விழுந்தனன் ;
வடியுங் குருதியும் மண்மிசை - அடிமை
        மாசைத் துடைத்துப் படிந்தது.

"என்னை அடித்த அடியெலாம் - பாரத
        அன்னை விலங்கை உடைத்தன ;
முன்னைப் புகழ் அவள் எய்துவாள் - கடைசி
        மூச்சில் இதை நானுங் கூறினேன்.

ஜயஜய பாரதம்” என்றனன் - அந்தத்
        தாயும் மடியினில் ஏற்றனள்;
"ஜயஜய" என்றனர் யாவரும் - குமரன்
        சத்தியம் போல் புகழ் தாங்கினான்.
-------------------

57. கிழவியும் ராணாவும்


[ராணா பிரதாப சிம்மன் ஓர் ஒப்பற்ற வீரன். அழி யாப் புகழ் படைத்தவன். டெல்லிச் சக்கரவர்த்தி யாகிய அக்பரை எதிர்த்து நின்று பல போர்கள் செய்தவன். ஆனால் பல முறை அவன் தோல்வியுற நேர்ந்தது. தனது சித்தூர்க் கோட்டையையு மிழந்து ஆரவல்லி மலைத்தொடரிலே அலைந்து திரிந்தான். கோட்டையை மீட்பதே தன்னுடைய லட்சிய மாகக் கொண்டிருந்தான். அதை அடைவதற்கு எவ்வளவோ துன்பங்களை அனுபவித்தான். இடையிலே அவன் ஒரு சமயம் சற்று உள்ளம் தளர்ந்து நாட்டை விட்டுச் சிந்து நதிக்கு வடக்கே சென்றுவிடத் தீர் மானம் செய்து புறப்பட்டதாகச் சரித்திரம் கூறுகிறது. ஆனால் உண்மையில் அவன் அவ்வாறு சென்றுவிடவில்லை. செல்லாமல் திரும்பியதற்குக் காரணமாக ஒரு கற்பனைச் சம்பவம் பாடலிலே வரு கின்றது. ]

புயல் வெடித்துப் படீரெனப் பொங்கவும்
பொய்ய ருள்ளம் போல் வானம் கருத்தது;
உயர வானிடை நீங்கிடும் புள்ளெலாம்
உயி ரொடுங்கிச் சிதறி யடங்கின.

சூறைக் காற்றுப் புலியெனச் சீறியே
சுற்றிச் சாடி வளைத்து மரங்களைக்
கூறும் பேயென நாற்றிசை ஆட்டிடக்
கொந்தளித்தது காட்டும் புறமெலாம்.

குன்றுக் கூட்டச் சரிவினில் ஒண்டியாய்க்
குச்சு வீடொன்று தென்படக் கண்டதும்
சென்று வாயிற் கதவினைத் தட்டினன்
செரு விழந்தவத் தேயத்து மன்னனே.

நடை தளர்ந்தமூ தாட்டியும் மெல்லவே
நடை திறந்தனள் உற்றுற்று நோக்கினாள்;
விடை பகர்ந்திலன் மன்னவன் உட்சென்றான்,
விரித்த ஓலைத் தடுக்கினில் சாய்ந்தனன்.

தோற்றம் கூறக் கிழவியும் பால் கனி
துரித மாகமுன் வைத்து வணங்கியே,
"ஆற்றல் மிக்கவிந் நாட்டின் அதிபரோ?
அடியன் காணவே வந்ததென்?" என்றனள்.

“நேற்று நாள்வரை உன்றன் அரசன் நான்
நிலை குலைந்து படையுந் துறந்தின்று
காற்று வாக்கில் துரும்பென வந்துளேன்;
கனியும் பாலும் எனக்கெதற்?" கென்றனன்.

“போர் புரிந்த களைப்பெலாம் ஆறியே
புதிய வெற்றிக்கு ஏகவே" என்றனள்;
“ஆரு மற்ற அனாதையாய் இங்கு நான்
அடைந் தனன் இனிப் போரில் மனமில்லை;

"நாட்டை நீங்கிப் பயணமாய்ச் சிந்துவாம்
நதியைத் தாண்டித் தொலைவினில் போகவே
ஓட்ட மாகவே வந்தனன்; சூறையில்
ஒண்ட நல்லிடம் தந்தனை வாழ்" கென்றான்.

"என்றான் ராணாப்ர தாபனோ பேசுவோன் -
இந்தச் சொல்லையச் சிங்கமும் சொல்லுமோ?
நின்ற வீரமும் ஆண்மையும் இற்றைநாள்
நீணிலத்தை விட் டேகிய தோ?" வென்றாள்.

"மான மின்றி ரஜபுத்ர மன்னர்கள்
மண்டி யிட்டுப் பணிந்தனர் அக்பரை;
மான சிங்கனும் மைத்துனன் என்றனன்;
மாட்சி கெட்டது நம்மனோர் வம்சமே.

"சொந்தத் தம்பியின் சொல்லைப் பொறுக்கிலார்
சோரம் செய்யும் அயவனைச் சூழ்கிறார்;
தந்தை நாட்டினை விற்றுப் பிழைக்கிறார்;
தாச ராகக்கை கட்டி உழைக்கிறார்.

"துணைவரின்றிப் பலபல சண்டைகள்
தோற்ற தாலென் றன் வீரரும் சோர்ந்தனர்;
பிணியில் நொந்தனர்; பசியினில் மாழ்கினர்;
பேசுங் கோட்டைச்சித் தூரும் இழந்திட்டேன்.

'ஆர வல்லியக் குன்றில் அலைந்தனம் -
அரிய போர்பல செய்து முயன்றனம்;
சூர தீரங்கள் காட்டினோம் ஆயினும்
தோல்வி யேயினிச் சமரெனக் கென்ன சொல்."

"பார தத்தினைக் காத்திட நம்மிடைப்
பார்த்தி பன்நீர் உண்டென நம்பினேன்;
போரெ டுத்தநற் போதெலாம் மைந்தரைப்
போக வென்று நான் வாழ்த்தி அனுப்பினேன்.

“நாதன் வீழ்ந்தபின் நால்வரென் காளைகள்
நடுகல் பெற்றிடும் வீரராய்ப் போரினில்
மோதி மாண்டனர்; தன்னந் தனியளாய்
முற்றும் நும்புகழ் கூறி நான் வாழ்ந்துளேன்.

"ஈனப் பேச்சுநீர் பேசிடல் ஏன்?" என்றாள் :
"என்ன செய்வ தென் றேபிர தாபனும்
மோன மாய்த்தலை அங்கையில் சேர்த்துமே
முன்னர் கொண்ட முடிவினையே சொன்னான்.

நரம்பெழுந்துவ லியற்ற கையினள்
நாக மென்னவே சீறி எழுந்தனள்.
அருகில் தொங்கிய வாளை எடுத்தனள்
"அத்த, கேளிந்தச் சோர்வு பொறுக்கிலேன்.

"வீர மங்கையர் கோடியிங் கேயுளார்
வெல்லும் வீரரைப் பெற்றுத் தருவர்காண்;
பார தப்பெயர் மங்கிடா தோங்கவும்,
பார் மதிக்கும் ரஜபுத்ர வீரந்தான்

"கறை யிலாதொளி வீசவும் நீரின்றே
கடுகச் சென்று போர் மீண்டும் இயற்றுவீர் :
மறையு மென்றன்பே ராணை யறிகுவீர்
மார்பு சேர்செங் குருதியால் செப்பினேன்"

என்று வாளைத் தன் மார்பில் புதைத்தனள்,
இரத்தம் சோரிட வாயில் முன் சாய்ந்தனள்;
நின்ற வீரன் திகைத்துப் புதியதோர்
நிச்சயத்துடன் கட்டுரை கூறுவான் :-

"பெண்க ளுக்கணி யானதோர் அன்னையே
பேசும் வார்த்தையைக் கேட்டுயிர் நீங்குவாய் -
மண் ணிதையினி மீட்குமுன் கையினில்
வாங்கும் வாளினை விட்டுப் பிரிந்திடேன்.

“உன்றன் ஆவி நற் சாந்தியை எய்துக;
உயிரின் நல்லவர் நாதனும் மைந்தரும்
சென்ற வீரத் தலத்திடைச் சேருவாய்;
திரும்பி னேன்சித் தூரையே மீட்க நான்."

புயல் மடிந்தது மன்னன் உளந்தனில்
புத்து ணர்ச்சியும் பொங்கிச் சுரந்தது;
"ஜய மடைந்திடு வேன் தனி நின்று நான்
தளர்வு தீர்ந்தனன் " என்று முழங்கினான்.
--------------

58. பிருதிவிராஜ்-சம்யுக்தை


[பிருதிவிராஜ் சம்யுக்தையைக் காதலித்தான். ஆனால் பகைமை கொண்டிருந்த ஜயசந்திரன் தன் மகளை அவனுக்குக் கொடுக்க மறுத்ததோடு அவளை வேறொருவனுக்கு மணம் செய்ய நிச்சயித்துச் சுயம்வரத்திற்கு ஏற்பாடும் செய்துவிட் டான். சுயம்வர நாளன்று பிருதிவிராஜ் சம்யுக்தையைத் தூக்கிச் சென்ற துணிகரவரலாறு அனைவரும் அறிந்தது. அதுவே பாடலாக இங்கு உருவாகிறது. ]

மங்கை சுயம்வர நாளிது;
        வந்தனர் மன்னர் பல்லாயிரம்
அங்கையில் மாலையை ஏந்தியே
        அவையில்சம் யுக்தையும் போந்தனள்.

ஆரங் கரங்கொண்ட ஆரம்போல்
        அசைந்து நடக்கிறாள் கூட்டத்தில்
ஆரங் கவள் முகம் நோக்கிடார் ?
        ஆர்முக மும் அவள் நோக்கிலள்.

பிருதிவி ராஜனுக் கோலைதான்
        போக்க மறுத்ததோ டாங்கவன்
உருவச் சிலையொன்று செய்துமே
        ஒள்ளணி வாயிலைக் காத்திடும்

சேவகன் போலவே வைத்தனன்
        தெளிவில் ஜ்யசந்த்ர ராஜனே;
பூவைதன் காதலற் கத்தனும்
        புன்மை புரிந்ததைக் கண்டனள்.

நையு முளத்தின ளாகியே
        நாடிப் பலபல வெண்ணினாள்;
பைய நடந்தவள் வாசலில்
        பதுமை இருப்பிடம் நண்ணினாள்.

“நற்சிலை யாகவே வந்தநீ
        நாதன்" எனமாலை சூடினாள்;
பொற்சிலை போன்றவள் சோகத்தால்
        பொருமியே சாய்ந்தனள் மூர்ச்சையாய்.

தரையினிற் பூவுடல் சேருமுன்
        தாங்கின காதலன் கைகளே!
மறைவினில் நின்றவன் பிருதிவி
        மங்கையை ஏந்தியே பாய்ந்தனன்.

ஒருத்தர் துணையின்றிச் சிங்கம் போல்
        ஓங்கிய காதலால் வந்தவன்
கருத்தை உணர்ந்திடும் புரவிதான்
        காற்றினைப் போலப் பறக்குமால்.

கொம்பனை யாளையோர் கையினில்
        கூரிய வாளொரு கையினில்
நம்பிக் குதிரையை விட்டனன்
        நாலுகால் பாய்ச்சலில் சென்றதே

கூடிய மன்னர் திகைத்தனர்,
        கூறினர் வஞ்சினம் கோபமாய்;
ஓடிய போர்களோ ராயிரம்,
        உருபரி ஊர்ந்த வ ராயிரம்.

வாள்களோ ராயிரம் மின்னவே
        வல்லமை பேசினர் ஆயினும்
வேளினைப் போன்றவன் தன்னையும்
        மின்னிடை யாளையும் கண்டதார் ?
-------------

59. ராதை பாட்டு


கையிலுள்ள கண்ணாடி நீ
        கார் குழலில் தேன் மலரும் நீ
மைவிழியில் பாவையுமே நீ
        மார்பகத்தில் கஸ்தூரி நீ
என்ற னுயிர் மூச்சின் மணம் நீ
        என் கழுத்தில் இன்பமாலை நீ
இந்த உடல் தந்த சுகம் நீ
        என் னகத்தின் களஞ்சியமும் நீ
பறவைகளின் நீள் சிறகும் நீ
        பாய்ந்து மிளிர் மீனுக்குநீர் நீ
உறவெனக்கு நீயெனவே நான்
        உள்ளமதில் இன்புறுவேன் காண்
உயிரின் உயிர் என்றுனையே நான்
        உவந்துள துன் சம்மதமோ சொல்
மயல் பெருகும் வேய்ங்குழலில் என்
        மாதவனே கீதம் வந்ததே.
[வித்தியாபதி பாடலைத் தழுவி எழுதியது. ]
----------

60. எந்த வகை உணர்ந்தீர்?


அந்திப்பொ ழுதிலெனை வந்தணைந்தவர் - சொன்ன
அன்பு மொழி எண்ணியெண்ணிப் பொங்கு முள்ளமே;
"கந்தம் அவிழ்ந்த மலர்க் கன்னியழகை - என்றன்
கண்ணிணைகள் வீசிடவே கண்டறிந்தீரோ?
சந்தம் முரலும் வண்டின் கீதவொலியைக் - கையில்
தரித்த வளைகள் பேசக் கேட்டறிந்தீரோ?
சொந்தம் உமக்கு நானென் றெந்தவகையில் - இங்கு
தோன்றக் கரங்கள் ரண்டும் தொட்டிழுத்தீரே?
எந்த வகையறிந்தீர் என்ன துணிவோ? - அதை
என்றனுக் கேயுரைக்க வேண்டுமென்றேனே" -
"வந்துனைப் பார்க்கு முன்னர் உள்ளமிரண்டும் - மண
வாழ்வினில் ஒன்றி நின்ற உண்மை பொங்கிற்றே;
எந்த வகையுணர்ந்தேன் என்று கூறவே - எனக்
கேது மொழி?" என்றிதழில் முத்தம் நிறைந்தார்.
-------------------

61. பாரதி


பெருமையெலாம் மறந்துநின்ற தமிழ்நாட்டு மக்களைத்தம்
        பெருமையறிந் தோங்கியெழக் கவிகள் சொன்னான்
ஒருவனுக்கே உணவில்லை என்னிலந்தக் கருணையிலா
        உலகினையே அழித்திடுவோ மென்று சொன்னான்
தரணியிலே அனைவருமே தாழ்வின்றி இன்பங்கூடிச்
        சரிநிகராய் வாழ்வமென்று முழக்கம் செய்தான்
அரிய நவ பாரதத்தை ஆக்கும்கவி பாரதியாம்
        அவன் புகழை யியம்பிடவும் வார்த்தை யுண்டோ ?
------------------

62. ஆசை இளநங்கை


ஆசை யிள நங்காய் - நீதான்
        அழகின் எல்லையானாய்
காசில் எழில் எனுமோர் - மணியால்
        கடைந்த நற்சிலையே!

நீலக் கடல்விழிகள் - அமுதம்
        நிறைத்த பொக்கிஷமோ?
கோலக் கவிதையெல்லாம் - கன்னக்
        குழியில் காண்பதென்னே!

செவ்வி யிவையனைத்தும் - ஒருங்கே
        சிறுமை யெய்திடவே,
கொவ்வை யிதழிடையே - முத்துக்
        கோவை காணுதடி

கண்ட நாள் முதலாய் - உள்ளத்தில்
        கனல் வளருதடி
அண்ட ருலக இன்பம் - அதனை
        அணைக்க லாகாதடி.

அன்புச் சிரிப்பதனால் - நீயே
        அகங் குளிரச் செய்வாய்
துன்பம் துடைக்கவல்ல - மோகனச்
        சோலைப் பசுங்கிளியே!
---------------

63. கண்ணுதல் போல


புத்தனும் இயேசுவும் பிறந்த இப்பாரினில்
இத்தனை கொடுமைகள் எப்படி முளைத்தன?
உலகம் உயிர் பெறவே உயிரீந்தான் கிறிஸ்துமுனி ;
உலகம் உய்கென்றே உயர்புத்தன் தான் துறந்தான்.
அவர்தம் பொன்மொழி அனைவரும் கேட்கவே
புவியினிற் காந்தியும் புகன்றிட வந்தனன்;
அனைவரும் இன்பமே ஆசையுற்றிருந்தும்
நினைக்கவும் நெஞ்சம் நெக்குறும் தீமைகள்
யாவனே செய்குவன்? யாண்டும் தீமையாய்
ஆவன இன்பம் அளிக்குமோ ஐயகோ!
நஞ்சினைப் பாய்ச்சி நல்லமு துண்ணவோ?
நஞ்சினை யேற்றே மற்றவர் அமுதுணக்
கண்ணுதல் போல எண்ணலே மேன்மை;
விண்ணுல கன்றே தழைந்திடும் திண்ணமே.
---------------

64. ஜய பாரதம்


ஜயபாரதம் ஜயபாரதம் ஜயஹே
ஜயபாரதம் ஜயபாரதம் ஜயஹே
உயருன்னத மலைராஜனருள் குமரீ
உமையாளவள் வடிவாகிய தேவீ - ஜயபாரதம்

அருளோங்கிடும் அன்பாம் நெறி கண்டாய்
அறமே உயர் வாழ்வின் குறி என்றாய்
உலகோர்தொழ உயர் நீதிகள் அருள்வாய்
உலகோர் இனி ஒன்றாம் வகை புரிவாய் -ஜயபாரதம்

பகையால் அழி படையால் மிக நொந்தே
பயமோங்கிடு துயர் வாழ்வினில் வெந்தே
வகையேதுமே யறியாப் புவி மாந்தர்
மருளேகிட அருள் வாழ்வினை நல்காய் --ஜயபாரதம்

ஜயபாரதம் ஜயபாரதம் ஜயஹே
ஜயபாரதம் ஜயபாரதம் ஜயஹே
உயருன்னத் மலைராஜனருள் குமரீ
உமையாளவள் வடிவாகிய தேவீ - ஜயபாரதம்
-------------

65. அழகு நடனம்


மழை முழுகிய தழைகள் அசையும்
        பளபளப்பைப் பார்!
மாலை வானில் பரிதி வட்டத்
        தகதகப்பைப் பார்!
குழையும் உளமும் தழைய இழையும்
        குயிலின் கீதம் கேள்!
கோட்டுப் பூவில் சுருதி மீட்டும்
        வண்டுக் கூட்டம் பார்!
குழவித் தென்றல் தழுவி யல்லி
        முத்தங் கொஞ்சல் பார்!
குழலி லெங்கோ இடையன் ஊதும்
        மதுவின் துளிகள் கேள்!
அழகின் தெய்வ நடன மிங்கே
        ஆஹா பாரடா!
அவனி யிதுவே இன்ப லோகம்
        அல்லல் ஏதடா?

[ஓர் அழகிய மாலைப்பொழுது. மழை பெய்து அப்பொழுது தான் ஓய்ந்தது. வானிலே கவிந்திருந்த மேகக் கூட்டங்கள்மறைந்துவிட்டன. கதிரவன் பொன் மஞ்சள் கிரணங்களைப் பரப்பிக்கொண்டிருந்தான். எங்கும் ஒரு புதிய எழில். அந்த நேரத்திலே கழனிகளின் வழியே போய்க்கொண்டிருந்தேன். அப்பொழுது எழுதியது இப்பாடல். கோட்டுப்பூ - கோட்டுப்பூ, கொடிப்பூ, புதற்பூ. நீர்ப்பூ எனப் பூ நான்கு வகைப்படும். நிலப்பூ என்று ஐந்தாவது வகை ஒன்றைக் கூறுவாறுமுண்டு. இவற்றில் கோட்டுப்பூ என்பது மரக்கொம்பில் பூப்பதாகும். ]
----------------------

66. கண்ணில்லாமலே


கண்ணில் லாமலே கோலதே கண்ணாய்
மண்ணினைத் தொட்டு மெல்லக்கால் வைத்து,
“பண்ணிய பாவமோ? படைத்தவன் கோபமோ?
என்னவோ தெரியேன் இக்கதியானேன்;
நெஞ்சினில் இரக்கம் நிறைந்தவர் இல்லையோ?
கெஞ்சினேன் அருள்வீர்; அஞ்சலி" என்றாள் -
மறைந்தும் கந்தையில் மறைந்திடா வாட்டம்;
அறந்தான் வலியினால் அகற்றொணாப் பசிநோய்;
அன்னையென் றேத்தும் ஆதியாம் சக்தி
தன்னையே காட்டும் பெண்மையின் வடிவம்;
கையிலோர் குழந்தை கசடனாம் எவனோ
மையலே காட்டி மயக்கியே பசப்பிப்
பேயாம் காமப் பெருந்தீச் சுட்டதால்
நாய்போல் உடலை நச்சினான் தந்தது -
பாவச் சின்னமாய்ப் பாவையின் இடுப்பில்
கூவி இரைத்துக் குவலயம் பழித்திட
நின்றதாம் எனினும் நெஞ்சினில் எங்கோ
கன்றிய பசியின் கருக்கலுக் குள்ளே
மின்னிடும் தாய்மையின் வேகத்தால் தாங்கினாள்;
தன்னையும் நோவாள்; "சாமியின் கண்ணும்
நொள்ளையோ?" என்பாள்; நொடியினில் ஆயிரம்
சள்ளைக் கிளர்ச்சியால் சாம்பலாய் உதிர்வாள்;

பட்டண வீதியில் பதறியே நிற்கிறாள் -
மட்டிலாச் செல்வம் வலம் வரும் சந்தியில்
தூசெனக் காசினை வீசியே நவநவப்
பாசியும் சுண்ணமும் பகட்டும் வாங்குவோர்
சேர்ந்திடும் சூழலில் சென்னையின் வளமெலாம்
ஊர்ந்திடும் வீதியில் ஒரு கண் இல்லையோ?
மெச்சிடும் பண்பெலாம் வெறும் வெளிப் பூச்சோ?
பச்சையும் பரிவும் பறந்ததோ வறண்டதோ?
வண்மையும் மாய்ந்த தென்னினும் இந்தப்
பெண்மையாம் குலத்தின் பெருமையைக்
காக்கவும் எண்ணமும் இல்லையோ? இந்தநா டென்றும்
அன்னையாம் சக்தியை அடிதொழு தேத்தும் பெருமையே உடைத்தெனும் பேச்சும் ஒழிந்ததோ?
இருதயம் இல்லாப் பட்டணம் இதுவோ? இங்குளோ ரெல்லாம் நினைத்திடில் இமைப்பினில்
அங்கை ஏந்துவோர் ஆருமே இலாமல்
செய்யவும் ஆகுமே; சென்னையின் சீர்மையும்
மெய்மையாய் விளங்கிடும்; கவிஞனும் வாழ்த்துமே.
--------------

67. என்றும் பதினாறு


நீலத்துப் பாழிலே கோளத்துப் பம்பரங்கள்
        தூங்கும் இசையெழுப்பத் தூங்காத ஆட்டத் தான்
நவக்கிரகப் பெருங்கோடி நட்சத்திர மணியுதிரப்
        பரவெளியில் வெடிவாணம் பவனிக்கு யார் வகுத்தார்?

நீளத்து நெடுவழியோ நீள்வட்டப் பொய் வழியோ?
        தாளக் கணக்குண்டோ சாவெல்லை தானுண்டோ ?
எல்லையற்ற பேரெல்லை எங்கும் நிறை பரமாணு
        மனக்குகையில் பேரிமயம் மணிக்கூண்டைக் காலுதைத்துப்

பூநின்று பிறப்பித்துப் பால் உறங்கி
        தாளம் தவறடித்துக் கால்மாற்றிக் கன லெழுப்பிப்
பொறிவாணம் பொங்கியெழப் புன்னகையில் சினங் காட்டிப்
        பொறிவாயில் ஐந்தவித்த பொக்கணத்தில் பெண்மயக்க

மச்சான் மனங்குளிர மத்தளத்தின் சுதிசேர
        தச்சன் மலரேறிச் சாவுக்குயிர் படைத்துத்
தாளத்தைத் தட்டிடவே சதிருமந்த மார்க்கண்டன்
        நீளும் பதினாறாய் நின்றே நடந்திடுமே.

[உலகங்கள் தோன்றுவதும் மறைவதுமாகிய படைப்புத் தத்துவத்தைப் புது முறையில் கூறுவது இக்கவிதை. இதற்குச் சற்று நீண்ட விளக்கம் தேவை. இருப்பினும் குறிப்பாகவும் சுருக்கமாகவுமே இங்கு எழுத இயலும். நீலத்துப் பாழ் - நீல நிறமான பாழ்வெளி.
கோளத்துப் பம்பரங்கள் - கோளங்களாகிய பம்பரங்கள். பம்பரம் நிலையில் நின்று வேகமாகச் சுழல்வதைப் பம்பரம் தூங்குகிறது என்று கூறுவார்கள். அந்தச் சமயத்திலே அதிலிருந்து ஓர் ஒலி எழும். தூங்காத ஆட்டத்தான் - தோற்றம் மறைவு என்கிற நடனம் ஓயாது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நடனத்தின் பவனியிலே வாண வேடிக்கைகளும் உண்டு. கிரகங்களும் நட்சத்திரங்களும் பொறிபொறியாய் உதிர்கின்றன.
நீளத்து நெடுவழியோ நீள்வட்டப் பொய் வழியோ - ஆகாயப் பரவெளியானது நீண்டு போய்க்கொண்டே இருக் கிறதா அல்லது நீள்வட்டமாக அமைந்துள்ளதா? இந்த இரு வகையான கருத்துக்களும் வானவியல் விஞ்ஞானிகளிடையே உலவி வருகின்றன.
மணிக்கூண்டு என்பது காலக் கணக்கைக் குறிக்கிறது. பூ நின்று பிறப்பித்துப் பால் உறங்கி வாழ்வித்து - தாமரை மலரோனாகிய பிரமாவாக நின்று படைத்தும், திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டு வாழ்வித்தும். தாளம் - தவறடித்து - கோளங்களின் போக்கிலே ஓர் ஒழுங் குண்டு. அந்த ஒழுங்கு தவறுமானால் ஒன்றோடொன்று மோதிச் சிதறும். புன்னகையில் சினங்காட்டி - சிரிப்பும் கோபமும் கலந்தே இருக்கின்றன . பொறிவாயில் ஐந்தவித்த பொக்கணம் - எல்லாம் அடங்கிக் கிடக்கின்ற நிலை. பெண் மயக்க - சக்தி தத்துவம் இப்பொழுது மறுபடியும் படைப்புத் தத்துவம் தொடங்குகிறது. மச்சான் - வாழ்வளிக்கும் தத்துவம். அதுதானே மத்தளத் தின் ஓசையைக் கூட்டுகிறது? தச்சன் - படைப்பவன்.
சாவுக்குயிர் படைத்து - எல்லாம் அடங்கிக் கிடந்த தல்லவா? அதிலே உயிர் தோன்றுகிறது. படைப்புத் தத்துவம் தாளம் போடவே சதிர் மறுபடியும் தொடங்கிவிட்டது. என்றும் சிரஞ்சீவியான ஆட்டம் இது. ]
--------------

68. இருளில் மிதந்த நெஞ்சம்


முல்லைச்சுடர் விரிக்கும் முழுநிலவின் தேன் கதிர்கள்
சொல்லிற் குழைவதுபோல் சொல்லற்ற சோகத்தின்
பண்ணை யிசைக்கின்ற பைங்கொடியார் அறியேனே -
கண்ணில் தெரியாமல் காதினிலே சூடேற்றும்
மங்கையிந்த நீளிரவில் மனத்துயரக் கனவெல்லாம்
பொங்கப் பொழிகின்றாள் பொன்னாட்டுத் தீங்குரலில்
பாட்டறியாப் பண்வீச்சில் பச்சையுளத் துடிப் பெல்லாம்
ஓட்டுகின்றாள் வீதிமுனை ஒருமாடத் துள்ளிருந்தே.
மோனத்துயர் இருளை மோதிவந்தென் உளம்புகவே
நானும் செயலற்று நடுத்தெருவில் நின்றிருந்தேன் -
யாரோஇப் பெண்கொடியாள்? ஏனோஇப் பெருந் துயரம்?
சீராகக் கைபிடித்தோன் சிந்தையன்பு பிரிந்தானோ?
மனத்தன்பு வேறிருக்க மணவாழ்க்கை இங்காச்சோ?
தினைப்பொழுது கணவனுடன் சேர்ந்திருந்து வாழுமுன்னர்
கொடுங்காலன் துணைவனையே கொண்டோடிப் போனானோ?
படுந்துயரம் ஏதெனவே பண்ணிசையும் கூறவில்லை;
உட்பொருளைக் கூறாமல் உணர்ச்சிதனைக் காட்டு தற்கும்

வெட்டெனவே பேசாமல் வெம்புமுளம் விரிப்ப தற்கும்
இசையைப்போல் வேறில்லை. என்றனுளம் அந்நிலையில்
கசிந்துருகிப் பண்ணொலியைக் கள்ளனெனத் தூற்றிடுமே.
நள்ளிருளில் உருமறைத்த நரகத்தின் துயர் இசையே,
உள்ளத்தைச் சொல்லிவிட்டால் உற்றார் கடிவாரோ?
ஈரநெஞ்சம் அவர்க்கிலையோ? இருளும் அழு கின்ற திங்கே
பேரறியாப் பேரவலம் பெருந்தூக்கத் தெல்லோரும்
செத்திருக்கும் வேளையிலே செறிந்தவிருட் பாங்கியுடன்
சித்தங் கலந்தாயோ தீராத் துயர்க்கொடியே?
தக்கவிடத் தும்பாதை தாண்டறியாக் குறுங்கொள்கை
மக்களிடை யுன்னுளத்தை மறைக்காமற் காட்டுதற்கு
ஒற்றைத் தனிச்சீவன் ஒருவருமே கிடையாதோ?
மற்றிங்கு நானுனக்காய் மாழ்குவதுங் காணாயோ?
கண்ணில் நான் படினுமென்றன் கண்ணீர் நீ உணர்ந்தாலும்
எண்ணத்தில் தூயவனென் றெப்படித்தான் கண்டறிவாய்?
ஆளத்திப் பண்வீச்சில் அவலமெலாம் காரிருளின்
நீளத்தில் மிதந்ததனால் நெஞ்சம்சிறி தாறுவையோ?
--------------

69. மாமரக் கன்னி


வருகின்றான் வசந்தனிங்கே வாட்டமேன் என்றுன்றன்
இருசெவிகள் தேன்பாய யாருரைத்தார் நற்சேதி?
பழங்கந்தை உடைநீத்துப் பசுமை கொண்ட மாமரமே!
அழகுச் சிறுகன்னி ஆகிவிட்ட மாயம் என்ன?
வசந்தனுன்றன் காதலனை வரவேற்க மெய்த்தோழன்
வசந்தசகன் ஆர்வமுடன் மலையத்தே பெற்றுவந்த
தென்றல் தேர் வெள்ளோட்டம் வரநாணிச் சிவந்தாயோ?
சென்றுவந்த குயிற்பாணன் தீம்பாடல் கேட்டாயோ?
கேட்டவுடன் மெய்சிலிர்க்கக் கிழட்டாடை உதிர்ந்ததுவோ?
தீட்டரிய பசுமஞ்சள் செம்பசுமை தாம்குழைத்த
புதுப்பட்டு மெல்லாடை போர்த்துவன தேவதை போல்
மதுத்துளிக்கும் பூச்சூடி வண்டினங்கள் இசைமுரல
இளமை வனப்பெல்லாம் எய்தி நல்ல காட்சிதந்தாய்
பளபளத்து மின்னிமின்னிப் பகலவனின் பொற் கதிரில்
என்னென்ன கற்பனைகள் என்னகத்தே கூட்டு வித்தாய்!
கன்னற் சுவைதெவிட்டக் கனியின்பம் தருதருவே!
ஆண்டுதொறும் எழிலிளமை அடைகின்ற தந்திரத்தை
ஈண்டெனக்குக் கூறாயோ? இதயம் நிறை காதலதோ?

[இளவேனில் வரவு கண்டு மாமரம் புதிய எழில் கொள்ளத் தொடங்குகிறது. அந்தச் சமயத்திலே மாமரத்தைப் பார்ப்பதே ஓர் இன்பமாக அமைகிறது. வசந்த சகன் - வசந்தனுடைய தோழன், மன்மதன். மலையத்தே பெற்று வந்த தென்றல் தேர் - பொதிய மலையில் பெற்ற தென்றலாகிய தேர். மன்மதனுக்குத் தேர் தென்றல் . வெள்ளோட்டம் - சோதனைக்காகத் தேரை முதன் முதலாக ஓடவிடுதல். சென்று வந்த குயிற் பாணன் - மாரிக்காலத்திலே குயில் மறைந்து விடுகிறது; இளவேனிற் காலத்திலே மறுபடியும் அதன் இனிய குரல் கேட்கிறது. குயிலாகிய பாணன். ஆண்டுதொறும் எழிலிளமை அடைகின்ற தந்திரம் - மாமரமே, நீ ஆண்டுதோறும் புதிய இளமை பெறுகிறாய்; நான் ஆண்டுதோறும் முதுமை எய்திக்கொண்டே இருக்கிறேன். இளமை எய்தும் தந்திரத்தை எனக்குக் கூறமாட்டாயா? இதயத்திலே அன்பு நிறைகின்றபோது இளமையும் தானாகவே தேன்றிவிடுமா? ]
----------------

70. காதல் நெருப்பு


காதலியென் கண்முன்னே நிற்கின்றாள்காண்கிலிரோ?
கண்டவர்போல் நீவிரெலாம் காணவில்லை; கண்டிருந்தால்
வேதனையின் சளசளப்பாம் வெறும் பேச்சுப் பேசுவிரோ?
மேனியெலாம் கண்ணாக வாய் திறந்து நில்லீரோ?
தென்னம் புதுப்பாளை மடலவிழ்ந்து நிற்பது போல்
தேநிலவின் சாற்றினிலே வடித்தெடுத்த பொன்னுருவம்
சின்னஞ் சிறிய நகை உள்ளமதைக் கிள்ளு நகை
தெய்வரம்பை ஊஞ்சலிடும் வானவில்லைப் போல வந்து
வண்ணக் கிளிப்பச்சை வளர்காஞ்சிப் பட்டுடுத்தி
மகரயாழ் சுரந்தூற்றும் இசைவடிவாய் என்றனிரு
கண்ணிமையில் நிற்கின்றாள் ; காணீரோ , காணீரோ?
கவிதை வெறியூட்டுகிறாள்; காமனுக்கோர் புது அரணம்;
பஞ்சுகொண்டு தீயணைக்கும் பயித்தியத்துச் செய்கை யைப்போல்
பதமலரின் திறங்காட்டி, பரதத்தின் உயிர்காட்டி
நெஞ்சமதில் ஆடுகின்றாள்; நிமிர்ந்தோங்கு காதலெனும்
நெருப்புக் கடல் எழுந்த அமுதத்தைப் பெறுவேனோ?
------------------

71. அழிந்த கூடு


ஆரடா கூடிதனை அழித்த கொடும்பாவி?
        ஆரந்தப் பேய்க்கையன்?
        அற்பக் கொடுங்கழுகோ?

வல்லூறோ? விஷப்பாம்போ? மனிதனிதைச் செய்வானோ
        கல்லாத இயல்பூக்கம்
        கட்டிவைத்த கூடு சுற்றிப்

படபடத்துச் சிறையடித்துப் பாவியென்றே மாரடித்து
        மடிகின்றாய் ஐயையோ!
        வந்து வந்து பார்க்கின்றாய்!

பொன்முட்டை களவாச்சோ? பொன்குஞ்சு பறி போச்சோ?
        சின்னஞ் சிறுசிட்டே
        தேம்பியெனைச் சீறாதே :

திட்டம் வகுத்துவிட்டேன் சேர்ந்திடுவீர் செம்மனத் தீர்
        கொட்டம் அடக்கிடுவோம்
        கொடுமை அழித்திடுவோம்;

வலியில்லா நல்நெஞ்சம் வஞ்சனைக்கு மாளாமல்
        கலியோட்டி அறங்காத்துக்
        கருணையெங்கும் கூட்டிடுவோம்;

ஊத்தைக் குடலுக்காய் உண்மைபலி யாகாமல்
        காத்திடுவோம் வந்திடுவீர்
        கவிஞன் என்றன் ஆணையிதே.

[சிறிய பறவை ஒன்றின் கூடு அழிந்து சிதைந்து கிடந்தது. புங்க மரத்திலே அது அழகாகக் கட்டியிருந்த கூட்டை யாரோ களவாடி யிருக்கிறார்கள். கூட்டை இழந்த பறவையின் பரிதவிப்பைக் கண்டு பாடியது. ]
----------------------

72. குறை


கண்ணுக்குள் ளேவான மீனிருக்கக் கண்டேன்
காலத்தை வென்றதோர் அன்பாழம் கண்டேனே
கன்னத்தி லேசுழி வண்ணக்குழி கண்டேன்
கவிதைப் பசுந்தேன் ஊற்றையும் கண்டேனே
செம்பவழத் துண்டம் முத்தொளியில் கண்டேன்
தேவாமுத மங்கு சிரிக்கவுங் கண்டேனே
பங்கய மொட்டவிழ் முழுநிலவுங் கண்டேன்
பார்க்கும் இருவிழி குறைகுறை கண்டேனே.
---------------

73. உதிர்ந்த சருகு


கண்ணெடுத்தும் பாராமல் காலில் மிதித்தார்கள்;
மண்ணிலே வீழ்ந்தவுடன் மதிப்பெல்லாம் போனதுவோ?
பசையிருந்த போதெல்லாம் பத்துப்பேர் சுகங்காணத்
திசைவிரிந்த மரக்கிளையைச் சீருடனே அணிசெய்தாய்;
காற்றுன்றன் செவிவழியே கனிந்தன்று பாடிவரும் ;
வேற்றுப் பறவையெலாம் விதவிதமாய்ப் பேசிவரும்;
வாடிநைந்தே உடல் சுருங்கி வறண்டுவிட்டாய் என்றவுடன்
ஓடிவந்து காற்றதுவும் ஒருகணமும் எண்ணாமல்
குப்புறவே பிடித்துந்திக் கூசாமல் சீறியிங்குக்
குப்பையிலே சாக்கடையில் கொண்டு தள்ளி விட்டதுவே!
காற்றுத்தே வாஇதுவும்? கடுவஞ்சப் பயல் அலவோ ?
சீற்றமதன் மேலெதற்கு? தினமும் இந்தப் பாரினிலே
பண்புச் சிகரத்துப் பாரிக்கும் மாந்தரிடம்
கண்ட திதுதானே? கைவறண்டால் மதிப்பவர் யார்?
-----------------

74. அவள்


மின்னற் கொடியும் அவளே
வீணையின் நாதம் அவளே
கன்னிப் பெருமையும் அவளே
கனவின் நிழலும் அவளே
வானின் நீலம் அவளே
வாரிதி ஆழம் அவளே
தேனின் மதுரம் அவளே
சிறுநகைப் பித்தும் அவளே
நெஞ்சக் கனலும் அவளே
நினைவின் பொருளும் அவளே
தஞ்சத் தெய்வம் அவளே
சங்கம வாயில் அவளே!
---------------

75. ஈசல்


இரவுப் பொழுதெல்லாம் தூறல் விழுந்திட
        ஈசல் பறந்தது காலையிலே
        பூசல் சிறந்தது சோலையிலே
கரவுக் குணமுள்ள பச்சைக் குருவியும்
        காற்றில் மிதந்து பிடித்ததடா
        கூற்றில் முனைந்து மடித்ததடா
தந்திரத் தங்கொரு வல்லூறுப் பட்சியும்
        தக்கதோர் வாய்ப்பினைக் கண்டதடா
        மிக்கதோர் ஏய்ப்பினைக் கொண்டதடா
அந்தரத் தீசல்மேல் நாட்டம் முழுதுமாய்
        ஆடி அலைந்தது சிட்டுப்பச்சை
        ஓடி மலைந்தது துட்டப்பச்சை
ஈசலைக் கவ்வவான் நின்ற கணத்தினில்
        ஈட்டியாய்ப் பாய்ந்தது வல்லூறு
        சூட்டியாய்த் தோய்ந்தது கொல்லூறு
ஈசன் விதித்ததோர் ஆணையிங்கே கண்டேன்
        எல்லா உயிருக்கும் அன்பு செய்வாய்
        பொல்லா உயிருக்கும் இன்பு செய்வாய்.

[ஐப்பசி மாதம் அடைமழைக் காலம். அம்மாதத்திலே ஒரு நாள் காலையில் கழனிகளின் வழியே செல்லும்போது ஏற்பட்ட நிகழ்ச்சி இக் கவிதைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. ]
---------------------

76. தருவாய்


காதல் தேன் சுவைத்திட்ட காளைகன்னி யுள்ளம்
கனிந்திணைந்து பெறுமின்பக் கவினுலகின் மேலே,
சாதல் எனும் இருட் கதவைத் தாண்டிப்பேரின்பம்
சார்ந்திருப்பார் தனி உலகத் தெல்லைக்கும் மேலே,

பரவெளிக்கும் மேலாம் பாழ்வெளிக்கும் மேலே ,
அரவணிந்த சங்கரனார் ஆடும் வெளிக் கப்பால்,
எல்லையெலாம் கடந்து நின்ற எல்லைக்கும் மேலே,
சொல்லினிலே கட்டுண்ணா எல்லைக்கும் மேலே,

கற்பனையின் மோனத்தில்
தற்பரனின் ஞானத்தில்
அற்பமெலாம் தள்ளி யெழும்
நற்கருணைப் போதத்தில்

மேலுக்கும் மேலான மேலிடத்தே தோன்றும்
காலத்தை வென்ற கவிக் கனவெனக்கே தருவாய்.
-----------------

77. பதில்


'பாட்டெழுதி அனுப்பி வைத்தால்
        பாடிக் கொண்டேயிருப்பேன் ;
பாட்டிசையாய் உங்களை நான்
        பார்த்துப்பார்த் தேமகிழ்வேன்'
என்றெழுதிப் பொற்கடிதம்
        இங்கிதமாய் விடுத்துள்ளாய் -
இன்றெனக்குப் பாட்டெல்லாம்
        என்னவென்றே அறியாயோ?
பாட்டெல்லாம் உன் பாட்டு;
        பகலிரவும் உன் பாட்டு;
வீட்டினிலும் வீதியிலும்
        வேறெங்குச் சென்றாலும்
உன்னையிங்கு பிரிந்துயிர்க்கும்
        உள்ளத்தில் ஓங்குகனல்
தன்னில் முங்கிக் குளித்தெழுந்த
        தழல் மணக்கும் துயர்ப்பாட்டு;
அன்றுன்னை அணைத்தகரம்
        அழுதேங்கும் துயர்ப்பாட்டு;
குன்றருவிக் கண்ணிழந்த
        கொள்ளையின்பத் துயர்ப்பாட்டு.
உள்ளமெனும் சுடுகாட்டில்
        உருக்குலைந்த காதல் தனைக்
கள்ளப்பேய் தானாக்கிக்
        கடிதத்தில் தூதுவிட்டால்
நடைப்பிணப் பொய் மணவாழ்க்கை
        நடத்துமங்கே நீ மேலும்
கொடுந்துன்பம் வீழ்வதல்லால்
        கூடிடுமோ துளியின்பம்?
---------------

78. நம்பிக்கை


பொறு மனமே பொறு
இரு ளென்றும் நில்லாது
மறுகணமே ஒளி வரலாம்
        பொறு மனமே பொறு

துன்பம் ஒரு முடிவில்லை
வெந்தழலில் துடிக் கின்றாய்
இந்தநிலை இன் றெனினும்
        பொறு மனமே பொறு

கண் குழிந்து குருடானாய்
பண்ணிழந்த குழலானாய்
எண் ணிழந்த இடரெனினும்
        பொறு மனமே பொறு

தளராதே திடங் கொள்வாய்
வளர் தீக்கும் முடிவுண்டு
புளிமாங்காய் தீங்கனியாம்
        பொறு மனமே பொறு
-----------

79. மலையொன்று


மலையொன்று தூரத்திற் கண்டேன் - யானை
        மண்டி யிட்டுள்ளது போலே
தலையினைத் தூக்கி நிமிர்ந்தே -
        தாளின் முன் நீட்டவுங் கண்டேன்

நீலத்து மாமணி யதுவே - அதன்
        நெற்றியிற் பட்டயம் பாரீர்
பாலில் விளைந்தவெண் மஞ்சு - அங்கு
        பட்டய மானது ஆஹா!

வானத்தைத் தாங்குவ துண்டோ - அன்றி
        மழை கொண்ட முகில்விளை யாட்டோ
மோனப் பெருநிட்டை தானோ - மறை
        மூலஓங் காரத்தின் வடிவோ

நீலத்துக் குள்வளர் நீலம் - என்றன்
        நெஞ்சை யிழுத்திடும் நீலம்
ஆலம் பழுத்தநல் நீலம் - எங்கள்
        அன்னை பயங்கரி கோலம்

கண்டங்கு நான் மெய் மறந்தே - அந்தக்
        காட்சியில் உள்ளம் நிறைந்தேன்
மண்டலச் செண்டுவான் பாய்ந்து - கதிர்
        மன்னன் எழுந்தருள் நேரம்

எங்கிருந் தோஒரு சிட்டு - வானில்
        ஏறிப் பரந்ததென் முன்னே
இங்கிது மாமலைக் கும்மேல் - உயர்ந்
        தேகுதல் போலவே கண்டேன்

மிக்க பொய்த் தோற்றம் இதனால் - அந்த
        வெற்பின் பெருமையும் போமோ?
பக்கச் சிறுகுரல் பெரிதாம் - அதைப்
        பார்த்து மயங்குவோர் பலராம்.

[மலை தூரத்தில் இருக்கிறது. சிட்டு அருகிலே பறக்கிறது. பக்கத்தில் பறக்கும் சிட்டு மலையைவிட வானில் உயர்ந்து காண்கிறது. இது ஒரு பொய்த் தோற்றமல்லவா? ]
செண்டு - குதிரை வையாளி வீதி.
---------------

80. காந்தி அண்ணல்


சாந்தத்தின் மூர்த்தியைக் கண்டோம் - எங்கள்
        காந்தியாம் அண்ணலைக் கண்டோம் கண்டோம்
மாந்தரில் மாணிக்கம் கண்டோம் - இந்த
        மாநிலம் போற்றும் மகாத்மாவைக் கண்டோம் (சாந்தத்தின்)

புத்தனும் இயேசுவும் போன்றான்- எங்கள்
        பொன்முடி இமயத்துப் புனிதனும் போன்றான்
உத்தம அன்பும் அருளும் - அவை
        ஓர்வடி வாகவே வந்தவன் காந்தி (சாந்தத்தின்)

ஆர் செய்த நற்பெருந் தவமோ - இந்த
        அண்ணலை நம்மிடைக்கண்டதோர் பாக்யம்
பார் செய்த புண்ணியம் என்போம் - நேரில்
        பார்த்திரு கண்பெற்ற பேறையும் பெற்றோம் (சாந்தத்தின்)

பாரத நாட்டுக்குத் தந்தை - அதன்
        பண்பின் வடிவமாய் வந்தவன் காந்தி
சாரதி கண்ணன் போல் வந்தான் - கையில்
        சக்கரம் ராட்டையே கொண்டறம் நல்கினான் (சாந்தத்தின்)

இன்புற்று யாவரும் வாழ - உலகில்
        இன்னலும் துன்பமும் இல்லையென்றோட
அன்பின் வலிமையைச் சொன்னான் - நல்ல
        அஹிம்சை வழியினால் தீமையை வென்றான் (சாந்தத்தின்)

அணுவைப் பெரும்படை யாக்கி - அதன்
        அழிவுக்கொடுமைகண் டஞ்சி யலறும்
மனிதக் குலத்தினை நோக்கி- உயர்
        வாழ்வுக்கு மந்திரம் அன்பென்று காட்டிய (சாந்தத்தின்)
-------------

81. நாழியொன்று


நாழியொன்று தானிருக்கும் - அன்று
        நானுமுன்னைப் பார்த்த தெலாம்
ஆழிவிழியாலே என்றன் - உளம்
        அஞ்சிறையில் வீழ்ந்த தன்றே
சிந்தைதனை மீட்டிடவே இனிச்
        செய்யும் வகை யொன்றுமில்லை
நொந்துயிர்த்து வாடுகின்றேன் - ஒரு
        நொடியும் உனை மறந்தறியேன்
தேகமது சோர்ந்ததனால் - வரும்
        சிறுதுயிலும் உன் கனவே
பாகுமொழியால் நீயும் - எனது
        படர்களைய வேணு மின்றே.
-------------

82. அமுதம்


இன்பத் தமிழின் சுவையே அமுதம்
        எழில்சேர் கலையின் வடிவே அமுதம்
அன்புப் பணியால் மலரும் கண்கள்
        அழகாய் வீசும் ஒளியே அமுதம்
துன்பந் தீர்க்கத் துணிவாய் நீளும்
        தூய்மைக் கையின் தீண்டல் அமுதம்
நன்பும் மகிழ்வும் எங்கும் பொங்க
        நன்றே நாடும் இதயம் அமுதம்!
------------

83. அவள் பார்த்தாளோ?


காலையிளம் பொற்கதிர்கள் கனவின்புதுச் சேதிகளைச்
சாலமிகச் சுமந்தேறிச் சன்னல்வழிப் பாய்கையிலே
மெல்லியவள் முகந்திருத்தி மெதுவா யெழுந்திருந் தாள்
மல்லிகைப்பைம் பந்தலின் கீழ் வந்து நின்று பார்த்திருந்தேன்
அவளென்னைப் பார்த்தாளோ? அன்பெல்லா மறிந்தாளோ?
அறியாமல் வாடுகின்றேன்; அறிய வழி காணேனே.

நண்பகலில் வெயில் கனல் நளினமலர்க் குளந்தனிலே
தண்புனலில் மின்கொடிபோல் தாதியுடன் ஆடி நின்றாள்
விண்ணிடத்தே கிளைபரப்பி வீசும் வெயில் தனைமறைத்து
மண்ணிடத்தே விழுதூன்றும் வடத்தின்பின் பார்த்து நின்றேன் -
அவளென்னைப் பார்த்தாளோ? அன்பெல்லாம் அறிந்தாளோ?
அறியாமல் வாடுகின்றேன்; அறிய வழி காணேனே.

மாலையிலே காவிரியின் மணல் திட்டில் பாங்கியுடன்
சோலைமயில் போல் திரிந்தாள் சுரநாட்டு மகளவளும்
கரையழியா வகை காக்கும் காற்றிலசை நாணல்வளர்
ஒரு புதரில் இருந்தே நான் ஓயாமல் பார்த்திருந்தேன் -
அவளென்னைப் பார்த்தாளோ? அன்பெல்லாம் அறிந்தாளோ?
அறியாமல் வாடுகின்றேன்; அறிய வழி காணேனே.

இரவினிலே விளக்கணைத்து இன் துயிலுக் கேகிடுமுன்
விரிநிலவும் நாணிடவே வினைமுடித்த சாளரத்தே
எட்டியவள் பார்த்து நின்றாள்; ஏங்குமுளம் துடிதுடிக்க
நட்டநடு வீதியிலே நானிருந்து பார்த்து நின்றேன் -
அவளென்னைப் பார்த்தாளோ? அன்பெல்லாம் அறிந்தாளோ?
அறியாமல் வாடுகின்றேன்; அறிய வழி காணேனே.
-----------------

84. சுதந்திரத் திருநாள்


ஜயஜய பாரதம் ஜயஜய பாரதம்!
ஜயஹிந்த் ஜயஹிந்த் ஜய ஜய ஜயஹிந்த்!
திருநாள் வந்தது சுதந்திரத் திருநாள் !
பெருநாள் இதனைப் பெருமையாய்ப் பாடுவோம்
அன்னையெம் பாரதி அங்கணீர் துடைத்துச்
சின்னஞ் சிறுநகை செய்ததோர் தனிநாள் ;
நிலமிசை நாமெலாம் தலைநிமிர்ந் தேகிட
அடிமை எனும் பேர் அகன்றதோர் நந்நாள்;
சுதந்திரத் திருநாள் தோன்றிய திதனை
அதிர்ந்தெழுமுரசம் ஆர்க்கிட வாழ்த்துவோம்.

வாழ்த்திடும் போதே மணிநா டின்று
வீழ்ந்துள துன்பக் கீழ்நிலை எண்ணுவோம்.
ஆண்டுகள் பலவாய் அடிமைப் பிணிப்பினால்
மாண்புடைக் கலைகளும் வளர் அறிவாற்றலும்
சிறுமையிற் பட்டுத் தேய்ந்தன; நாட்டில்
வறுமையும் பிணியும் வளர்ந்தன ; இன்பம்
களிநடம் புரிந்தவிக் காவியப் பூமியில்
அளர் இடைப் புழுபோல் அவலவாழ் வுற்றது;
மனத்தினில் தாழ்மையும் மருட்சியம் ஒங்கிட
வினைத்திறன் அற்று வெம்பினர் மக்கள்.

எங்கும் இருள்கவிந் திருந்த அந்நேரம்
பொங்கும் சுடராய்ப் புதுநெறி பேசி
வந்தனன் காந்தி மகாத்மா உரைத்த
இன்மொழி கேட்டு எழுந்தனம் விழித்தே;
பாரெலாம் வியக்கப் படையொன்று மின்றிச்
சீரிய அஹிம்சைத் திறத்தினால் சுதந்திரம்
அடைந்தனம் ; ஆயினும் அடிமையா லுற்ற
நெடும்புரைப் புண்கள் நீங்கில இன்னும்.

விடுதலைப் போரினில் வெற்றிகொண் டதெலாம்
பெரிதல; இனிமேல் அருஞ்செயல் ஆற்றிப்
புதியதோர் பாரதம் புனைவதே பெரிதாம்.
மதிமிகும் இளைஞர்காள், வீரமைந்தர்காள்,
தாய்கை விலங்கு தகர்ந்ததை யுன்னி
மாயக் களிப்பினில் மதியிழக் காதீர்.

எங்கு நோக்கினும் என்ன காண்கின்றோம்?
மங்கிய கண்களும் வாடிய வயிறும்
நொந்த உள்ளமும் நோய்மிகும் உடலும்
அந்தநா ளிருந்த நம் இந்தியா வோ இது?
அகலாப் பிணிகளாம் அழிபசி தனக்கும்
காமவெம் பிணிக்கும் கடற்கரும் பிறவிப்
பிணிக்கும் நன் மருந்தைப் பேசிய நாடு
உடற்பிணிக் கெல்லாம் உறைவிடமாக
இருக்கவும் பொறுப்பதோ? இந்திய மக்காள்.

மருத்துவக் கலையின் மாண்பெலாங் கண்டோர்
ஆயுளைப் பெருக்கும் அருமருந் தறிந்தோர்
நாமுள இடத்தே நமனார்க் கேது
வேலையென் றுரைத்த வீறுடைச் சித்தர்கள்
சீலமெய்ம் முனிவர்கள் திகழ்ந்த இம் மண்ணில்
பன்றி போல் வாழ்ந்து பாழ்நோய் மலிந்து
குன்றிக் குமைவதோ இன்று நாள் வரை நாம்?

கனவிலும் கருத்திலும் கண்ட நற் பாரதம்
இதுவோ? எண்ணுவீர், என்னுடன் பிறந்தீர்.
அடிகளார் இதற்கோ ஆருயிர் ஈந்தார்?
மிடிமையும் பிணியும் மிகுந்து நாம் வாடப்
புண்ணியன் காந்தி விண்ணகத் துறையினும்
எண்ணருஞ் சாந்தி எய்தி இருப்பரோ?
அழியாப் பண்பும் ஆண்மையுங் கொண்ட
பழம்பெரும் மரபுடைப் பாரதத் துதித்த
இளைஞர்காள் எழுமின்! இனியொரு கணமும்
தளர்வுற் றிருப்பது சற்றும் தகாது.

உன்னத மென்றே உலகெலாம் வியக்க
இன்னலும் பிணியும் இன்ன வென் றறியா
மக்கள் நூறாண்டு வாழ்ந்து நல் லின்பமே
மிக்கவோர் குடும்பமாய், வேற்றுமை யின்றி,
இன்பமும் ஒன்றே, ஏற்றமும் ஒன்றே;
துன்பம் வரினும் ஒன்றென அதனை
ஒழித்திட முனையும் ஒருமனப் பாங்குடன்
தழைத்திடு சமூகமும் தண்ணளி வாழ்வும்
நாட்டிட எழுமின்; நானினிப் பொறுக்கேன்.

நாட்டினை நமக்கு மீட்டுத் தந்ததோர்
அண்ணலின் பேரில் ஆணையிட் டுரைத்தேன்,
விண்ணக மாயிது விளங்கிடச் செய்வோம்;
வாழிய பாரதம்! மாய்கவெந் துயரெலாம்!
வாழிய பாரதம்! வந்தே மாதரம்!
-----------

85. ஆகாய விமானம்


வானிடைப் பறத்தல் ஆ! வரம்பிலா இன்பம்!
மானிடர் தேவராய் வாழவே வந்தது.
காற்றிடைப் பறந்தோம், கடல் மலை தாண்டினோம்;
நாற்றிசை மக்களும் நமர் எனக் காணுநாள்
அருகினில் இன்றே அணைந்ததென் றிருக்கப்
பெருமைசேர் விமானப் பெரும்புள் ளதனைக்
கூற்றினும் கொடியதோர் கூற்றுவ னாகவே
மாற்றினர் அந்தோ வையகம் நடுக்குற.
வானி லிருந்து வாழ்வைத் துணிக்கும்
சாவினைப் பொழிந்தனர் ; துயரினைத் தூவினர்;
தேமழை பொழியும் தண்ணளி விசும்பு தீமழை
பொழியச் செய்தனர் தீமையோர்;
உற்றார் உறவினர் ஒரு நொடிப் பிரித்தது;
கற்ற நம் வித்தை காலனாய் முடிந்தது.
என்றும் பிரியோம் என்று நற் காதல்
அன்றுதான் பேசியோர் அக்கணம் பிரித்தது.
விண்ணிடை நீந்தும் வண்ணம் கண்டு
மண்ணிடைக் குதித்து மகிழ்ச்சியே பொங்க
அங்கை கொட்டி ஆர்த்திடும் சிறுமியைப்
பங்க முறவே பாதகம் பொடித்தது.
பரிதியைத் திங்களைப் பளிச்சிடும் மீன்களைத்
திருவெலாம் கொணரும் சீருடை முகிலைக்
கண்டின் புறநற் ககனப் பரப்பினை
எண்ணவும் திடுக்கிடும் எமனதாய்ச் செய்தது.
இறகினைப் பெற்ற எறும்புதீப் புகுதல் போல்
சிறகினைப் பெற்றதே தீமையாய் முடிந்தது.
புட்பகம் தீநெறிப் போக்கிய ராவணன்
பட்டதோர் கதைதான் பாரறி யாததோ?
இன்பம் பயப்பதே இறைநெறி பிழைத்தால்
துன்பம் பயக்கவும் சூழ்ந்ததும் மானுடர்
அறிவினைச் சோதனைக் காக்கவே யன்றோ?
குறிதனை உணர்ந்து கொடுமைகள் தவிர்வமே.

[இரண்டாவது உலகயுத்தம் நடந்துகொண்டிருந்த காலத் தில் எழுதிய கவிதை இது.]
------------

86. வருக அன்னாய்


வருக அன்னாய் வருக!
பயங்கர நாமி நீ வருக!
மூச்சினில் சாவினை மூட்டும் தேவியே,
அடிமலர் அதிர்ச்சியால் அண்டம் பொடிக்கும்
காலகாலி நீ வருக!
வருக அன்னாய் வருக!
மிடிமையை எதிர்த்தே மிடுக்கொடு நிற்போன்
சாவினை விருப்புடன் தழுவவே முந்துவோன்
ஊழிக்கூத்தினில் உளமகிழ்ந் தாடுவோன்
அவனையே தேடி அன்னைவந் திடுவாள்.

[சுவாமி விவேகானந்தர் வாக்கின் பெயர்ப்பு.]
---------------

87. அந்தி வெள்ளி


நாள் முழுதும் பூ முழுதும் தும்பியை நீ வீடு சேர்ப்பாய்
சலித்த கூலிக்காரனை வேலையினின்றும் விடுவிக்கிறாய்
வானத்து மணி ஒன்று சாந்தி பொழிகின்ற தென்றால்
அது நீதான்.

உயர்ந்த வானிலிருந்து சாந்தியை அனுப்புகிறாய்
வானத்தின் உயிர்ப்பும் புருவமும்
மனங்கொண்ட காதலியின் உயிர்ப்பும் புருவமும்போல
இனிமையாக விளங்கும் காலத்தில் நீ தோன்றுகிறாய்

நிலத்திலிருந்து வாசனை யெழுந்து பரவுங் காலத்தில்
செழித்த வானத்திற்கு வருகிறாய்.
அப்பொழுது தொலைவில் வரும் மந்தைகளின் அரவம் கேட்கிறது
வேலை முடிந்து பாடும் குதூகலப் பாட்டின் இன்னிசை உலவுகிறது
கூரையின் மேல் அமைதியாகப் புகை சுருண்டு சுருண்டு எழுகிறது.

காதல் சந்திக்க வரும் வான்மணியே
காதல் தழுவ வரும் மீன்பூவே
பிரிந்த காதலர்கள் உன்னைச் சிந்திக்கிறார்கள்
அவர்களது வாக்குறுதியை நினைப்பூட்டி
விரிந்த விசும்பில் சுடர் விடுகிறாய் உள்ளத்தை விட்டு நீக்கக்கூடாத
அன்பு மணியே
அந்தி வெள்ளியே வாழி நீ .

[ஆங்கிலக் கவிதையொன்றைத் தழுவி எழுதியது]
----------

88. புத்த போதனை


அரசையும் உலகத் தனைத்தையும் துறந்து
அரசடி யமர்ந்தே அகக்கண் திறந்தவன்
திருமுகம் சுடர்தர ஜேதவ னத்தினில்
இருள் புதை யாமத் தருந்தவத் திருந்தான் :
அசைவிலா மௌனத் தமைதி ஆண் டிருக்கப்
பசும்புற் படரும் பனிபோல் மெல்லெனத்
தேவன் ஒருவன் திருமுன் தோன்றி,
"யாவரே புவிமிசை விழித்துந் துஞ்சுவார்?
உறங்கிடும் போதும் விழித்துளோர் உண்டோ ?
அறங்கெடப் புரிகுவர் அவனியில் யாவரே?
மறங்கெடச் செய்பவர் மானிலத் தெவரே?
அறைகுவாய் " என்ன, அக்கணம் பகரும்;
“விழிப்புட னிருந்தும் உறங்குவோர் ஐவர் ;
விழிப்புடன் உறங்கிடும் வேளையும் இருப்பார் ;
ஐவரே கொடியவர் ; ஐவரே உலகினில்
மெய்நிலை பெறவும் மிக உழைத் திடுவார் "
என்றனன் ஐயன் இளநகை புரிந்தே;
நன்றெனத் தேவனும் விண்ணிடைச் சென்றனன்
புத்தனும் மோனப் பெருந்தவம் புகுந்தான் ;
சத்திய வாக்கினைச் சார்ந்தவர் உணர்ந்தார் -
ஐவர் உறங்கிட ஆத்மனும் விழிப்பான்;
ஐவர்கூத் தாடிடில் அறவினை உறங்கும்;
ஐவரே உலகில் அநீதிகள் புரிவார் ;
ஐவரை அடக்கி ஆண்டோர் உயர்வார்.
------------------

89. காதல்


உடல் மெலிந்தேன் கண் குழிந்தேன்
        ஊணுறக்கம் இல்லாமல் ;
கொடி யனையாள் தனைக் கூவிக்
        குமுறி உயிர் தான் விடுத்தேன் -

எனை யெரிக்கக் கொண்டு சென்றார்;
        என் பிரிவைத் தோழி சென்றே,
'உனை நினைந்தே உள முடைந்தார் ;
        உயிர் துறந்தார்' எனப் பகரப்

பெற்றோர்கள் செய்த பெரும்
        பேதமையாம் காவல் விட்டு,
முற்றாத இளமார்பை
        மூடுகின்ற துகில் சோர

ஓடி வந்தாள் ; விம்மி நின்றாள் -
        'உயிரனையாய் எழுக' என்றாள்.
'தேடரியாய், கண்ணிரண்டும்
        தேம்பியதால் குருடானேன் ;

ஆதலினால் நானினி மேல்
        அவனிதனில் வாழேனே'
'காதலனே , என்றனிரு
        கண்ணீரால் ஆட்டியுன்றன்

திருவிழிகள் திறந்திடவே
        செய்திடுவேன் இக்கணமே,
பரிவுடன் நீ எழுந்திடுவாய்
        பாவி யென்றன் உளம் மகிழ'.

'கண்மணியே, என்னுள்ளம்
        கத்தியினால் ஊடுருவி
மண்ணில் உயிர் கொட்டி
        மாண்டு விட்டேன்' என்றேனே.

அன்பெல்லாம் வாழ்விடமே,
        அணிமார்பால் உன்னுள்ளம்
சென்றதொரு புண்ணதனைத்
        தீரத் துடைப்பன்' என்றாள்.

பொங்கு முளம் குளிர்ந்திடவே
        பொன்மொழிகள் பேசிவிட்டாள் :
மங்கைதனைத் தான் மறுக்க
        வாய்வருமோ இனிமேலே ?

சுடு காட்டில் என்னுடலைச்
        சுட்டெரிக்கச் சுற்றத்தார்
அடைவாக நெஞ்சின் மேல்
        அழுதுவைத்த கட்டைதனைத்

தள்ளிமிகக் கைவீசிச்
        சதுராக எழுந்தமர்ந்தேன் ;
நள்ளிரவில் கனவெனவே
        நானறிந்து நெட்டுயிர்த்தேன்.

[ஜெர்மன் கவிதை யொன்றைத் தழுவி எழுதியது. ]
-----------------

90. இன்றும் நேற்றாய்


இன்றும் நேற்றாய் நாளையும் இன்றாய்
என்றும் ஒன்றாம் இதுவோ வாழ்க்கை ?
குறிஇலாப் பொறியெனச் செய்ததே செய்து,
மறையுமென் நாளெலாம்; மாறாச் சிறையினேன்.
உறுபய னின்றி உடற்கென உழைத்துப்
பிறர்கைக் கூத்தனாய்க் குறிக்கோளின்றி
உழைத்துத் தேய்ந்தே உருக்குலை கருவிபோல்
புழையுடை வாழ்க்கையில் புழுதிபோ லலைந்து
அடிப்பணி புரிந்தே அலையிடைத் துரும்பாய்
அலைவதே யல்லால் ஆன பய னுண்டோ ?
குறியுடை வாழ்வினைக் குறித்தே ஏங்கினேன் :
மறைந்தழி திறனெலாம் வானுயர்ந் தோங்கியே
செயற்கரி தானதைச் செய்திடும் உயர்பெரு
வாய்ப்பும் உறுமோ எனக்கே?

[இன்றும் நேற்றாய் நாளையும் இன்றாய் - நேற்றைய நடை முறைப்படியே இன்றும் வாழ்க்கை நடக்கிறது. இன்றைய நடைமுறைதான் நாளைக்கும் ; மாறுதலே இல்லை. பொறி - எந்திரம். பிறர் கைக் கூத்தனாய் - பிறர் தம் விருப்பப்படி ஆட்டு விக்கும் நடிகன் போல. புழையுடை வாழ்க்கை - உள்ளே துளைபட்டுப்போன வாழ்க்கை . ]
----------------

91. நினைவு


நீரினில் மூழ்கி நிறைந்து பூரித்து
வாரியில் ஓடிடும் மாடுகள் ஈர்க்க
வந்துநீர் சிந்தி வதங்கியே திரும்பும்
அந்தரத் தூசல் ஆடிடும் தோற்சால்
காணவும் தோழ ! கலங்கிடும் உள்ளம்
வாணுதல் மடந்தை மகிழ்நகை பூப்ப
வாயிலில் வந்தென் வருகை காணாமல்
ஆய்கலை சோர அழகெலாம் வாடச்
சென்றிடும் திரும்பிடும் திரையலை போல்வாள்
என்று நான் வருமென ஏங்கிடும் அதனால்
கொண்டநீர் வேட்கையும் குறைந்தனன்
மொண்டகை நின்றிட மூண்டது சோகமே.

[கணவன் தன் தோழனோடு நாட்டுப்புறத்திலே எங்கோ போய்க் கொண்டிருக்கிறான். அவன் மேற்கொண்டு வந்த கடமை இன்னும் முடியவில்லை. ஆனால் அவன் திரும்பி இல்லம் வந்து சேருவதற்காகக் குறித்த நாள் அணுகிவிட்டது. அந்த நிலையிலே அவன் தாகவிடாயைத் தணித்துக்கொள்வதற்காக ஒரு கிணற்றருகே செல்லுகிறான். கபிலையில் எருதுகளைப் பூட்டித் தோட்டத்திற்குத் தண்ணீர் இறைத்துக்கொண்டிருக் கிறார்கள். தண்ணீரைத் தாங்கி மேலே வருகின்றபோது தோற்சால் அழகாக விளங்குகிறது. தண்ணீரைக் கொட்டி விட்டுக் கிணற்றுக்குள் திரும்பும் போது அது வதங்கிச் சுருங்கி அழகிழந்து காண்கிறது. இதைக் கண்ட அவனுக்குத் தன் மனைவியின் நினைவு வந்துவிடுகிறது. ]
---------------

92. கை வளம்


வானமெங்கும் பொங்கு சுடர்
வையமெலாம் இன்ப வெள்ளம்
        எங்குமே ஆட்டம்
        இன்னிசையாம் பாட்டம்
களிப்பொலியே கேட்டேன்
கையில் ரண்டு காசிருந்ததே

வானமெங்கும் காரிருளே
வையமெலாம் துக்கமயம்
        எங்குமே வாட்டம்
        இடர்ப்பகையாம் கூட்டம்
அழுங் குரலே கேட்டேன்
அந்தோ கை வெறுங்கையே.
--------------

93. கேட்டதும் கண்டதும்


குயில் கூவும் காலமதில்
        கூடியவர் போகையிலே
மயில் போன்ற பெண்ணணங்கும்
        மதன் போன்ற காளையுமாய்க் (குயில் கூவும் )

பொன்மஞ்சள் கதிர்களெங்கும்
        பூமிதனிற் படர்ந்திருக்க
மின்வண்ண மெல்லிதனை
        மெதுவா யணைத்தவனும்
இன்ப வெள்ளம் நீந்திமிக
        எழிலாகத் தனிவழியே (குயில் கூவும்)

செஞ்சொலிள மைனாவும்
        செங்கண்சிறைச் செம்போத்தும்
கொஞ்சிக் கொஞ்சித் துணைகூவும்
        கோலமொழி கேட்டானில்லை :
வஞ்சியவள் அன்பொழுகும்
        வார்த்தை செவி நிறைந்திருந்தான் (குயில் கூவும் )

அந்தியின் முன் வந்த மழை
        ஆடிமலர் மரங்களெல்லாம்
கந்தமிகுந் திளமைபொங்கக்
        காணரிய பசுமை கொண்ட ;
மைந்தன்கண்ட தெல்லாமவள்
        மான்விழிக ளல்லால் இல்லை (குயில் கூவும் )
--------------

94. வேண்டும்


ஏழை யில்லா உலகம் வேண்டும்
இன்பம் கூட்டும் அன்பு வேண்டும்
பீழை துன்பம் பிணிகள் அறியாப்
பெருமை வாழ்வு தழைய வேண்டும்

இனிமை தோய்ந்த மொழிகள் வேண்டும்
எதிலும் அச்சம் தொலைய வேண்டும்
கனிவு குழையும் பார்வை வேண்டும்
கருத்தில் என்றும் உயர்வு வேண்டும்

பூவைப் போன்ற நகையும் வேண்டும்
பொங்கும் எழிலே எங்கும் வேண்டும்
தேவை ஏக்கம் சிறுமை சேராச்
சீல வாழ்வே பொழிய வேண்டும்

பழமை யென்னும் பாலை பாய்ந்தே
அழித லில்லா அறிவு வேண்டும்
பழமை யீன்ற பெருமை யெல்லாம்
விழைந்து போற்றும் நிறைவும் வேண்டும்

கவிதை இன்பம் கலையின் இன்பம்
அவனி யெங்கும் பெருக வேண்டும்
புவியின் வாழ்வே அமர வாழ்வாய்
போகம் யோகம் இணைதல் வேண்டும்

யார்க்கும் உடமை பொதுவில் வேண்டும்
யாதும் ஊரே யாதல் வேண்டும்
காக்கும் சோதிக் கருணை ஒளியாம்
கடவுள் அருளே நிலவ வேண்டும்.
-------------

95. பெற்ற தனம்


சப்பையிட்ட பெருநாசி
        வெள்ளையிட்ட பாழ்நயனம்
தந்தையெனக் கேயளித்த
        தனமிவையே தாரணியில்
வெப்பமிட்ட காமத்தில்
        வீழ்ந்துவிட்ட வாழ்வதனால்
விளைந்தவினை என் தாயும்
        வெம்பிவெம்பிக் காலமெலாம்
உப்பைவிட்டு உடலுருகி
        ஊர்வாயை மூடிமூடி
உத்தமியும் போனாளென்
        உனவுடல் மெய்தழுவி
அப்பிலிட்டு முத்தமிட்டு
        ஆநந்தச் சொட்டுதிர்த்தாள்
அன்பறிவேன் அமிர்தமதே
        ஆனாலும் குறையுடைத்தாம்
நிறையன்பு தானென்றால்
        நெடுந்துயர வாழ்வறவே
இறுகியெனைத் தழுவியன்றே
        என் மூச்சைப் போக்காளோ?
-----------------

96. இளமான்


உருவெடுக்கா துள்ளத்தில்
        உதித்தவிந்த ஓவியமோ
ஒளியறியாப் பகற்பொழுதோ
        ஊற்றில்லாப் பாழ்கிணறோ
தருவுடுக்கா மணற்பாழோ
        தண்மையிலாக் கருநிலவோ
தமியேனின் வாழ்விதற்குச்
        சாற்றிடவோர் உவமையுண்டோ ?
சிறகிழந்த இளம்புறவைச்
        செந்தீயில் போட்டது போல்
சிறுதாலித் தளையிட்டுச்
        சிறையிந்த வீட்டில் வைத்தார்;
நறவிழந்த சந்தனமாய்
        நானுள்ளேன் இந்நாட்டு
நளாயினியை அருந்ததியை
        நாளெல்லாம் எண்ணியெண்ணி : -
பிணிப்புண்ட மான் குட்டிப்
        பேதையுளம் காலொடித்தேன்;
பெருகியெழும் கிளர்ச்சியனல்
        பெண்மைநிறைக் கடலவித்தும்
மணத்தறியால் எனைக்கட்டி
        வாழ்வொடித்தார் கிழக்குறட்டை
வாய் தெறிக்கத் தூங்கிடுவார்
        மனந்தெறிக்க இரவெல்லாம்
தனிக்கிடந்து நான் உழலத்
        தம்முறக்கக் கொடுமையிலும்
தளராமல் அரைக்கண்ணைத்
        தான் திறந்து பார்த்திருப்பார்
கனக்கொடிய சந்தேகக்
        கடுநஞ்சம் என்றனக்கு
காலமுடி வூழித்தீக்
        காட்டுவதற் கென் செய்வேன்?

[பிணிப்புண்ட மான் குட்டிப் பேதையுளம் - அந்த மங்கையின் உள்ளம் துள்ளிக் குதிக்கும் மான் குட்டி போன்றது; ஆனால், பிணிப்புண்டிருக்கிறது. அப்படிப்பட்ட உள்ளமாகிய மான் குட்டியின் காலை ஒடித்து விட்டாள். பெண்மை நிறைக்கடல் - நிறை என்பது பெண்மையின் தனிப்பெருமை யல்லவா? அந்தக் கடலிலே உள்ளக்கிளர்ச்சி யென்னும் அனலை அவித்திருக்கிறாள். கா முடி வூழித்தீ - கால முடிவில் உண்டாவதாகக் கூறப் படும் பழித்தீயைப் போலக் கணவனுடைய சந்தேகம் அவளைச் சுடுகின்றதாம். ]
------------

97. அந்தி


அந்தியாள் கரும்பட்டு மெல்ல உடுத்துகிறாள்
        அரக்கு நிற முன்றானை
        அடிவானில் மேற்கே பார்
சந்தனமும் செம்பவளம் கலந்திருந்த வானமதில்
        சன்னமாய்க் கருஞ்சிவப்பும்
        சாம்பல் நிறம் கண்டதங்கே
செம்பும் தனித்தங்கத் திட்டை யடுக்குகளும்
        தீயர்மனக் குகைபோலச்
        செம்மையிழந் திருண்டனவே
பம்பி மரங்களெலாம் படை வீடாய்க் காரிருளும்
        பட்டிமையில் எட்டி எட்டிப்
        பார்க்கின்ற வேளையதில்
சிறுமொட்டைக் குன்றத்தின் உச்சியிலே நின்றிருந்தேன்
        திரளுமிருட் படலங்கள்
        செறிந்துலகம் மறைந்ததுவே
உறையிட்ட மையிருட்டில் நெஞ்சுமொரு சூனியமாய்
        உதிர்ந்து பரத் தொன்றிடவே
        ஊமையெழுத் துட்பொருளாம்
அண்டத்து மர்மமெலாம் வெளியாகும் சூழ்ச்சியினை
        அங்கு நான் கண்டறிந்தேன்
        ஆஹாஹா அதுவன்றோ
வண்டுக்குச் சிக்காமல் வளர்கின்ற தூய்மை நிறை
        மனப்பூவால் எம்மிறையை
        வழுத்திடவே ஏற்ற கணம்?

[சிறிய குன்றின் உச்சியில் நின்று மாலையில் இருள் பரவுகின்ற காட்சியைக் கவனிப்பது ஒரு நல்ல அனுபவம். அப்பொழுது உள்ளம் இயற்கையோடு ஒன்றி விடுகின்ற உணர்ச்சியைச் சொந்த அனுபவத்தின் மூலமாகப் பெறுவது ஒரு சிறந்த பேறாகும். பட்டிமை - வஞ்சகம் ஊமை யெழுத்து - ஓம் எனும் பிரணவம். ]
--------------

98. குதிரை வீரன்


மன்றல் முடிந்தென்றன்
        மலர்க்கூந்தல் உம்கரத்தால்
அன்புடனே தீண்டு முன்பு
        அமர்மூளப் பரியேறி
என்னைப் பிரிந்தெங்கோ
        ஏகினீர் : அந்நாளில்
சென்ற படை யின்றே
        திரும்பிடக்கண் டோடி வந்தேன்
அந்தோ நீர்மாண்டீரோ?
        அன்றேறி நீர் சென்ற
கந்துகத்தில் வேறொருவர்
        கண்ணெதிரே வந்தாரே.

[இது சீன நாட்டுக் கவிதை ஒன்றின் தழுவல் சீன மக்கள் வீரம் மிகுந்தவரெனினும் நம் நாட்டினரைப் போலவே அமைதியை விரும்புகின்றவர்கள்; போரை வெறுப்பவர்கள். புகழ் பெற்ற சீனக் கவிஞர்கள் பலர் போரைக் கண்டித்துப் பல கவிதைகள் இயற்றியுள்ளார்கள். ]
--------------

99. அடியடா முரசம்


அடியடா முரசம் அன்னையும் வந்தனள் !
பீடியடா சங்கம் போற்றியே பாட்டா!

படி யெலாம் படைத்த துடி நிகர் இடையினள்
இடியெனச் சிரித்தே எழுந்தனள் ஜய ஜய!

அரக்கர்கள் மடிந்தனர் அல்லலும் தொலைந்தது
முருக்கினை ஒத்ததோர் முறுவலின் முன்னே .

அன்னை பயங்கரி அகிலாண் டேஸ்வரி
முன்னையும் பின்னையும் முடிவிலா திருப்பவள்

பசுபதி தன்னையே பாகத் திருத்துவாள்
அசுரரைச் சாடியே அகமகிழ்த் திடுவாள்

குருதியில் திளைத்தே கொக்கரித் தாடுவாள்
கருமுகில் போன்றவள் கழலடி நினைந்தே

அடிமையாந் தளையினை அறுத்தெறிந் திட்டோம்
படர்புகழ் பாரதப் பண்பினை நாட்டினோம்;

உண்மையே மூச்சதாய் உழைப்பதே உயிராதாய்
எண்ணிலாப்பேரறம் இயற்றி நாம் வாழுவோம்.

விளைந்தபேரிடரெலாம்; விடியற் கருக்காலம்
களைந்து நல் லின்பக் கதிவரள் வீசுவாள்;

புன்மைகள் மாய்ந்திடும்; புதுயுகம் பிறந்திடும்;
அன்னை தன் நெஞ்சினில் அருளுடன் வந்தனள்.
அடியடா முரசம் ஆர்த்தெழுந் தாடடா!
பிடியடா சங்கம் போற்றியே பாடடா!

[நமது தாய்த்திருநாடாகிய பாரதம் விடுதலை பெற்றுத் தலை நிமிர்ந்த நாளன்று பாடியது. ]
---------------

100. குறை குடம்


சிந்தை நிறை வெய்தாமல் செல்வமிக எய்தினவன்
அந்திபகல் தொழுதேத்தி, அடியனுக்கோர் குடம் நிறையப்
பொன் கொடுத்தால் போதுமென்றான்; பூரணமாம் கற்பகமும்
மின்னோடும் பொற்காசை வெள்ளிக் குடமேழில்
அள்ளிக் கொடுத்துவிட்டு அரைகுடமாய் மற்றொன்றும்
கொள்ளக் கொடுத்ததுவே - குறையாத பேராசைச்
செல்வனந்த நாள் முதலாய்க் குறைகுடமே சிந்தனையாய்
எல்லா வகையாலும் இங்கதனை நிரப்பிடவே
ஏழு குடப் பொற்காசை இம்மிகணம் பாராமல்
கோழிக்கு முன்னெழுந்து கும்மிருட்டுச் சாமம் வரை
காலமதைக் கருதாது கடும்பசியும் பாராது
வேலையோ வேலையென வெவ்வேறு சூழ்ச்சிகளால்
பொற்காசு தான் தேடப் புகுந்திட்டான்; ஒவ்வொன்றாய்ப்
பெற்றெடுத்துக் குறைகுடத்தில் பேராவ லாய்ப் போட்டான்.
குடம் நிறைய வேண்டுமெனும் ஆசைவெறிக் கொடும் பேயால்
பிடிபட்டு வாழ்வெல்லாம் பித்தனாய்த் திரிந்துழன்று
உற்றாரைத் தான் மறந்தான்; ஒரு குழந்தை யது மறந்தான்;
மற்றவனும் கைபிடித்த மனையாட்டி தனை மறந்தான்
பொன் கொடுத்த தெய்வத்தைப் பொழுதோடே தான் மறந்தான்;
கண்ணெலாம் குறைகுடத்தில் கவலையே வாழ்வாக
வறுமையினும் தெளிவுடையோர் மனத்துலவும் சாந்தி யின்றிக்
குறைகுடமும் நிறையாமுன் நிறைந்ததவன் காலமிங்கே.
---------------

101. வந்தனள் அன்னை


இரணகளந் தன்னில்
        இடியெனச் சிரித்துக்
கரமலர் தாங்கிய
        கடிவா ளுடனே
அடிமலர் திங்கள் போல்
        அமுதினை வழங்க
வடி அழ குடனே
        வந்தனள் அன்னை!

நயனம் அனல் பொங்க
        நரசிர மாலை பிறங்க
அசுரர் உடல் நசுங்க
        ஆடி வரு கின்றாள்

கொதிகடல் எழுந்த ஆம்பல் போல்
        குருதி படிந்த மேனியள்
பதமலர் அன்பொடு வாழ்த்தியே
        பசுபதி பரவிடும் மொய்ம்பினள்
அன்னை காளி பயங்கரி
        அகில லோகமு மாக்குவாள்
கன்னி வந்தனள் போற்றுவோம்
        கால காலிநீ வாழ்கென்றே!
-------------

102. சிம்மநாதம் செய்யடா


சிம்ம நாதம் செய்யடா
        சேர்ந்தெழுந்தே நில்லடா;
விம்மும் தோளைப் புடையடா!
        வெல்கதாய் எனக் கூவடா! (சிம்ம)

அன்னை சக்தியின் ஆற்றல் பெற்றோம்
        அண்டம் போர்க்கும் மூச்சுக் கொண்டோம்;
முன்னை உலகம் கண்டிராத
        மொய்ம்பு வீரம் பெற்றுவிட்டோம்! (சிம்ம )

பாரதத்தாய் ஏற்றம் பெற்றே
        பாரின் உயிராய்த் திகழ வைப்போம்;
மாருதத்தைப் போல ஓயா
        வாழ்க்கை வேகம் தாங்கிநிற்போம் (சிம்ம )

ஜாதி பேதம் பொருளின் பேதம்
        சமய பேதம் தள்ளி யென்றும்
நீதியொன்றே நினைவு மொன்றே
        நேர்மையொன்றே ஆக்குவோம் ! (சிம்ம )

அறிவின் ஆட்சி எங்கும் நிலவ
        அன்பின் ஆட்சி எங்கும் பொங்க
சிறுமை வீழப் புவனம் ஓங்க
        செயல் புரிந்தே வாழுவோம்! (சிம்ம )

[குடியரசுத் திருநாளன்று பாடியது]
-------------

103. விலங்கு நெறி


நாளின் பெருவிளக்காம் நற்கதிரோன் மேல்வானில்
காளைச் சினம் உகுத்துக் கனிந்து நகை தான்பூத்து
நின்றேயவ் வான் திரையில் நீள்கதிர்ப்பொன் தூரிகையால்
ஒன்றோ ஒருகோடி ஓவியங்கள் தீட்டியவை
மாற்றி யழித்தாடி மகிழ்ந்திருக்கும் வேளையிலே
காற்றின் இளந்தழுவல் கன்னற் சுவை நாடிச்
செவ்வரளிப் பூக்குலுங்கும் சிற்றோடை யருகணைந்தேன்
கொவ்வைக் கொடிபடர்ந்து குறுநொச்சிக் கிளையெல்லாம்
கனிப்பவழத் தணிசெய்த கரும்பச்சைப் பின்னலின் கீழ்
தனித்திருந்து சாய்பொழுதின் ஜாலமெலாம் கண்டிருந்தேன்
மினுமினுத்துச் சிலுசிலுக்கும் மெல்லோடை மருங்குவளர்
மணிமணிப்பூக் கன்னியர்கள் மனங்களிக்க நடமாடி
ஒயிலாய் உடல் வளைத்து ஓடை நீர் முத்தமிடக்
குயிலொன்று தூரத்தே கூவித் துணைதேட
எங்கும் ஒரு மோன ஏகாந்தம் ஆட்சி செயும்
பொங்கும் அழகதனிற் புகுந்ததொரு மீன்கொத்தி;

மரகதத்துச் சின்னவுடல் மணியரக்கு நீள்மூக்கு
சிறுவெள்ளை யடிவயிற்றில் செவ்வானங் காட்டியது
ஓடையிலே நீண்டகிளை ஒற்றைக்கொம் பமர்ந்ததுவே,
ஆடிக் குடிப்பதுவும் அம்புதனைப் போல் பாய்ந்து
நீர்க்குள் சிறுமீனை நெடுமூக்கில் குத்தியதைப்
பார்க்கும் கணத்திற்குள் பசியாற்றிக் கொள்ளுவதும்
வண்ணக் குருவி செயல் மனத்தில் சுழன்றிடவே
எண்ணம் அதிற்சேர்த்தே இருந்தேன் சிலநேரம்.
அப்பொழுதங் கேநடந்த அதிசயமும் என்ன சொல்வேன் :
தப்பாமற் சிறுமீனைத் தான்பிடிக்கும் குருவிதனை
வல்லூறுப் பறவையொன்று மறைந்திருந்து கண்வைத்து
பொல்லா நொடிப்பொழுதில் போனதே பற்றியந்தோ !
என்னடா சட்டமிது, இதுவோ இயற்கைநெறி?
சின்னப் புழுபூச்சி சிறுமீன் இரையாகும்;
சிறுமீனைத் தான் கொத்தச் செம்மூக்கு மணிப்பறவை ;
பறவையதைக் கொல்லவொரு பாழ் வயிற்று வல்லூறு -
கொல்லுவதே இந்தக் குவலயத்தின் பெருவிதியோ?
வல்லார் எளியாரை வாட்டிப் பிழைப்பது தான்
எழுதா விதியாமோ? எரிக்கண் புலியிங்கே
உழுதா உயிர்வாழும் ? ஊணுக்குக் கொல்லாமல்
வாழ்வுண்டோ ? என்றெல்லாம் மனக்குகையின் காரிருளில்
கீழ்நின்ற பேய்க்கூட்டம் கிளுகிளுக்க எண்ணங்கள்
மேலெழுந்து நின்றிடவே வெம்பிமிகச் சோர்ந்தேன் :
சீலம் எதற்கிங்கே? செந்நெறியும் ஏன் வேண்டும்?
என்றே தளர்வெய்தி ஏங்கிக் கிடந்தேன் நான்
குன்றுக்குப் பின்னொளியும் கும்பிக்க இருள் பரவி
அந்திவெள்ளி கண்டேன் ; அருமணிகள் பலமெதுவாய்
வந்தென்றன் உள்ளத்தை வானுலகம் இழுத்தனவே.
இயற்கையின் கீழ்வரம்பில் இந்நெறிதா னென்றாலும்
இயற்கைச் சிகரத்தே எழுந்துயரும் மானிடனும்
புதுமை நெறியொன்றைப் புகுத்திடவும் கூடாதோ?
மதியென்றும் மனமென்றும் வாய்த்த தனிப் பயனென்ன?
திருந்தாப்பேய் நெறிபற்றிச் செல்லுவதிற் சிறப்புண்டோ ?
பொருந்தாத விலங்குநெறி போக்கிடவே மதிபெற்றான்
அற்பக்கீழ் உணர்ச்சியெலாம் அறமாற்றித் தெய்விகமாம்
நற்பண்பு மானிலத்தே நாயகமாய் நின்றென்றும்
அன்பு நெறி ஆட்சி செய் அவனியற்ற வல்லானேல்
இன்பநிலை தோன்றிவிடும்; இதுவே யவன் கடமை -
என்றதொரு பேருண்மை இருள்கிழித்துச் சுடரிடவும்
நன்றுள்ளம் பூரிக்க நானெழுந்து நடந்தேனே.
------------

104. பெற்ற மனம்


ஏழை மகன் ஒருவன் - அவன் - எடுப்பு வாய்ந்த உருவன்
தன்னா னானன னான தன தானனா
காதல் செய்தானே - அவளோ - கயமை செய்தாளே

ஆணை போட்டாள் ஒன்று - நீயும் - அறுத்து வாடா என்று
தன்னா னானன னான தன தானனா
நாய் புசிக்கவே - உனது - தாய் தன் இதயமே

தாயின் வீடு சென்றான் - பெரும் - மோக மீறி நின்றான்
தன்னா னானன னான் தன தானனா
இதயங் கீண்டானே - கையில் - எடுத்துப் பாய்ந்தானே

வேக மீறி யோட - அவனும் - விழுந்தான் புழுதிசாட
தன்னா னானன னான தன தானனா
தரையில் இதயமே - மோதி - சருகாய் உருண்டதே

புரளும் இதயம் நின்று - அன்பு - பொங்கக் கேட்கும் ஒன்று
தன்னா னானன னான தன தானனா
காளை தன்னையே - இதயம் - கனிந்து நோக்குமே

தேம்பி யதுவுங் கூறும் - மிகவும் - சிறிய இதயம் பாரும்
தன்னா னானன னான தன தானனா
அவனி வீழ்ந்தாயே - மகனே - அடியும் பட்டதோ?

[இந்தக் கவிதைக்குக் கருத்துக் கொடுத்தது ஒரு பிரெஞ்சுக் கவிதையாகும். இதன் யாப்பு வடிவமும் அதிலிருந்தே தோன்றிய தென்னலாம். ]
---------------

105. புயல்


சூறை யடிக்கும் பேய்க் காற்று - களி
        துள்ளச் சிரித்திடும் கூற்று
ஆறு புரண்டிடும் வெள்ளம் - வளர்
        அன்பு புரண்டதெம் முள்ளம்

வானகம் பார்த்து நடுங்கும் - கொடும்
        மாமலைப் பாம்பும் ஒடுங்கும்
கானகப் பேரிருள் தன்னில் - உயர்
        காதலால் வந்தயெம் கண்ணில்

பார்வையிற் பட்டதும் இருளே - எட்டிப்
        பற்றிக் கை தொட்டதும் இருளே
ஆர்வக் கனலொளி தன்னால் - சுட்ட
        ஆற்றைக் குறுகினோம் முன்னால்

தந்தை இருள் மனக் கோவம் - அனல்
        தாக்கக் குலைந்தனள் பாவம்
சிந்தைத் துணிவினால் வந்தாள் - புலி
        சீறும் புயலினை நொந்தாள்

ஓடம் வலிப்பவர் இல்லை - பொங்கும்
        உன்மத்த வெள்ளத்தின் தொல்லை
நாடும் புயவலி நன்றே - மலர்
        நங்கைநீ வந்திடு என்றே

தூக்கியே தோளினில் வைத்தேன் - பசுந்
        துளவமால் மச்சத்தை யொத்தேன்
காக்கும் கடவுள் நீ தஞ்சம் - உன்றன்
        கழலடி வைத்துளோம் நெஞ்சம்

என்றந்த வெள்ளத்தில் காலை - நான்
        எட்டியே வைத்திடும் வேளை
குன்றம் அதிர்ந்தது கனவும் - அங்கு
        குலையவே வந்தது நனவும்.
----------------

106. நமது வழி


திடீரென்று அவன் தோன்றினான்.
அவன் வருகை யாருக்கும் தெரியாது
வான வில்லென அவன் வந்தான்.
தோற்றத்தில் அவனிடம் புதுமை ஒன்றுமில்லை.
ஆனால் எங்கும் காணாத ஒரு புதுமை ஒளி
அவன் கண்களில் சுடர்விட்டுக் கொண்டிருந்தது.
ஒரு கனல்.
உணர்ச்சி மின்னலின் கொழுந்து.
ஆத்ம சக்தியின் ஜோதி.

அவன் கம்பீரமான குரலில் பாடினான்.
உள்ளத்தில் எழுந்து மோதும் கனவுகளை யெல்லாம்
காற்றில் பரப்பினான்.
ஒரே சங்க நாதம்.
வேதங்களின் மூச்சு அவன் பாடலில் வீசிற்று.
அமுதத்தின் தெளிவு கலந்திருந்தது.
நிலவின் தீஞ்சாறு மிதந்தது.
வீரக் கனல் வழிந்தது.
புதிய உயிர்பெற்றுக் கவிதை பொங்கிற்று.
ஆனால் யாரும் அதைக் கவனிக்கவில்லை.
மக்கள் அவர்கள் பாட்டைப்
பார்த்துக் கொண்டிருந்தனர்.
மழை காணாத பயிர் போலாயிற்று
அவன் உள்ளம்.
ஏங்கிற்று.
கரையற்ற அவன் அன்பும் ஒரு நொடிப் பொழுது
மறைந்து விட்டது.
என்ன மண்ணுலக மடா இது என்று கூட
வாய் ஒரு தரம் உச்சரித்து விட்டது.
உடல் நைந்தது.
ஆனால் கவிதைக் கனல் ஓயவில்லை.
மேலும் மேலும் கொழுந் தோடியது.
உடலை வெதுப்பியது. உள்ளத்தின் துடிப்பாக ஒலித்தது.
அவன் கந்தர்வ இன்பங்களைச் சொல்லில்
குழைத்துப் பூங்காற்றில் மிதக்க விட்டான்.
தாமரை மலரில் வீற்றிருக்கும் ஐயனின் சாந்தி
அவன் பாட்டில் தவழ்ந்தது.
பட்ட மரம் தளிர்த்தது.
பறவைகள் குதூகலித்தன; அவனுடன் உறவாடின;
அவனுக்கு மேலே பறந்து நிழல் செய்தன;
விலங்குகள் அவனைச் சூழ்ந்து கொண்டன;
காக்கையும் குருவியும், ஆடும் மாடும், சிங்கமும்
புலியும் அவன் ஜாதியாகி விட்டன.
மலையும் காடும், ஆறும் கடலும் அவன் கூட்டமாயின.
மனிதன் மட்டும் அவனை ஏறெடுத்துப்
பார்க்கவில்லை.
அவன் பாட்டைத் தேடவில்லை.

அவன் உடல் காய்ந்து சருகாகிவிட்டது.
புகழ்ச்சித் தண்ணிழல் இல்லை.
அன்பு நோக்கில்லை.
அது தீய்ந்துவிட்டது.
மூச்சு ஒடுங்கிவிட்டது.
அவனுடைய இதயக் கனல் காக்கை குருவிகளோடு
பாய்ந்து வானில் கலந்துவிட்டது.
கடலின் அலையாகிவிட்டது.
மலையின் நீலத்தில் மணியாகிவிட்டது.
மக்கள் ஓடி வந்தார்கள்.
அவன் உடலுக்கு மாலை சூட்டினார்கள்.
கந்தலைக் களைந்து பட்டாடை போர்த்தார்கள்.
அதன் முன்னால் விழுந்து வணங்கினார்கள்.
அதற்குப் பூஜை செய்வதென்று முடிவு செய்தார்கள்.
அவன் மறைந்துவிடவில்லை, எங்களோடு இன்னும்
இருக்கிறான் என்று மேடைகளில் நின்று கர்ஜித்தார்கள்.
அவனுடைய பாடல்களில் அவன் மறைந்து நிற்கிறான்
என்று சொல்லிக் கொண்டார்கள்.

ஆம். அது மெய்தான்.
பாடிய பாட்டுக்களில் அவன் இருக்கிறான்.
ஆனால் அவன் பாடாது சென்ற பாடல்களிலும்
இருக்கிறான் என்பதை யாரும் உணரவில்லை.
அவன் பாடியவை பல.
அவன் பாடாதவை மிகப்பல .
------------

107. உள்ளம் தளராதே


உள்ளம் தளராதே - என்றும் நீ
ஊக்கம் குறையாதே (உள்ளம்)

வெள்ளம் புரள்வதுபோல் - இடர்கள்
மீறியே வந்தாலும்
தள்ள முடியாமல் - மலையெனச்
சங்கடம் நின்றாலும் (உள்ளம்)

எங்கும் எதிர்ப்பெனினும் - துணைவரே
ஏசி இகழ்ந்தாலும்
வெங்கனல் ஈட்டிகளாய்க் - கவலைகள்
மேவிடு மென்றாலும் (உள்ளம் )

கங்கை கொணர்ந்தவன் போல் செயலில்
கண்ணும் கருத்துமதாய்
தங்கும் முயற்சி கொண்டால் - உலகில்
சாதிக்கலாம் எதையும் (உள்ளம் )
-------------

108. சீதக்காதி


செந்தமிழ் போற்றிய சீதக் காதியே
இன்று நீ எம்மிடை இருந்திடல் விழைவேன்:
செத்துங் கொடுத்த சீர்மிகுங் கொடையால்
இத்தரை மீதினில் என்றும் அழியாப்
புகழுடம் பெய்தித் திகழ்ந்தனை யெனினும்
சமயப் பிணக்கும் சாதிப் பிணக்கும்
குறுகிய நோக்கும் பெருகுமிந் நாளில்
அருந்தமிழ் வளமலால் பிறிதொன் றெண்ணா
வள்ளல் நீ யாக்கையில் வாழ்ந்தனை யானால்
உன்வழி கண்டு உய்வகை தெளிவோம்;
பிரிவினை அறியாப் பெருமைசேர் தமிழன்
அன்னாட் கண்டநல் லன்பறம் ஆண்மைசேர்
வாழ்வினை மீண்டும் வளர்த்திட எளிதாம்
என்றே ஏங்குமென் உளமே.
-------------

109. பித்து


அவன் ஒரு பைத்தியம்
அலைந்து திரிகிறான்
அன்னையைக் கூவி
எங்கும் அலைகிறான்
அவன் ஒரு பைத்தியம்

தாயின் கோயிலில்
தாசன் நுழைவதோ?
அழுக்கே மேனி
அரைக் காசில்லை
தாயின் திருமுன்
போவதா அவனும்?

கோயிலின் காவலர்
கோடி நூற் சுவடிகள்
அடுக்கி முன் வைத்தனர்
அடித்துத் துரத்தினர்
அழுதே போனான்

கோயிலைக் கடந்து
குளத்தினைத் தாண்டி
பிணஞ்சுடு காட்டை
அடைந்தனன் கிடந்தான்

கண்ணீ ர் வழிந்தது
கட்டையும் நொந்தது
உருகிய துள்ளம்
உருண்டனன் தரையில்
அம்மா என்றே
அலறிமூச் சழிந்தான்

இமைகளும் சோர்ந்தன
எப்படியோ அவன்
உறங்கினான் இருளும்
ஒடுங்கியே பேரொளி
வந்தது விழித்தான்

அன்னை தன் மடியினில்
தன் சிரம் தாங்கிடக்
கண்டனன் காணாக்
காட்சியுங் கண்டான்.
----------------

110. இசைவாய்


அயிலைப் பழித்த விழியா யுனக்கு நான் - இன்று
        அறிவிப்ப தொன்று பதில் அன்பு பேசுவாய்
குயிலைப் பழித்த மொழி கொஞ்சுங் கொடியே - உன்றன்
        குரலில் கசப்பிடுமோர் சொல்லும் வருமோ?

மதனன் மயங்கிடுமுன் மார்பிரண்டினில் - என்றன்
        மனது கிடப்பதை நீ கண்டதில்லையோ?
வதன மதி நிகர்த்த மங்கை யமுதே - மறு
        மாற்றம் நீ சொல்வதிலென் வாழ்க்கை யுள்ளதே

அமரமெல் லிசைதரும் மோனமதிலே - பொங்கும்
        அமுதமாம் இன்ப எழிற் சிற்ப மங்கையே
தமனிய மேனியளே சந்தச் சுவையே - உளம்
        தடையின்றி அவ்விடமே தங்க இசெவாய்.
-------------

111. மாலை


மின்னலை வான வில்லில் இழைத்தே - சுடர்
மீன் திரள் நவமணிகள் பல நூறு கோத்து
சன்னமாய்க் கதிரவன் கம்பிகள் பின்னி - முழு
சரத்கால வெண்ணிலாச் சரிகைகள் கட்டி
காதல் தேன் ஊறிடும் உள்ளமலர் அவிழும் - மணங்
கமழவே கனவெல்லை அமுதோடம் தாண்டி
மோதுமென் உணர்வாழி கரையிடும் இன்பம் - உயர்
முத்தொளிர் மாலையிது மார்பில் அணிவாய்.
-------------

112. மறந்து வாழ்க


மறந்து நீ வாழ்வாய் - இனிமேல்
மறப்பதே வாழ்வாம்

குழந்தைப் பருவமுதல்
        கூட நாம் வளர்ந்ததும்
கொஞ்சியே இருவரும்
        ஆடி மகிழ்ந்த தும் (மறந்து நீ)

நாளொரு மேனியாய்
        எழில் கொண்டு நின்றதும்
நல்ல கதைகள் சொல்லி
        சிரித்து மெய்மறந்தும் (மறந்து நீ)

உணர்வெலாம் காதலாய்
        ஓங்கிய காலத்தில்
ஊரைவிட்டே ஆற்றின்
        ஓரத்தில் சென்றதும் (மறந்து நீ)

மாயமாய் நானென்றன்
        கண்களை இழந்ததும்
மனத்தினில் ஓங்கி வந்த
        கோட்டைகள் இடிந்ததும் (மறந்து நீ)

எங்குமே இருள்மயம்
        ஆனதும் உளந்தனில்
எல்லையில்லாத பேர்
        இருள்வந்து சூழ்ந்ததும் (மறந்து நீ)

பதியென யாரையோ
        கைதொட்ட பின்னரும்
பாசத்தால் வந்திங்கே
        விம்மியின் றழுததும் (மறந்து நீ)
-------------

113. மணியோசை


கோயிலிலே மணியோசைக்
        கோமாளம் ஆடிவிட்டு
வாயிலெலாம் வன்கருமை
        மனமெல்லாம் பேயிருட்டாய்
வாழ்வினிலே மடமைவழி
        செல்லுகின்ற மாண்புடையீர்
கீழ்மையிலே நிலைநின்றும்
        கேலியறக் கூத்தெதற்கோ?
மணியோசை வேண்டாவாம்
        மனக்கோயில் அன்பெனுமோர்
இணையேது மில்லா நல்
        லெழில்நந்தா விளக்கிட்டால்
பொன்னாட்டு மணியோசை
        பொங்கியெழுந் தெண்டிசையும்
என்னாட்டும் கணகணத்தே
        இன்னமுதம் பொழிந்திடுமே.

[கோமாளம் - கோமாளியின் பரிகாசச் செயல். வாயில் என்பது இங்கு ஐம்பொறிகள். வன் கருமை - வலிய கருஞ் செயல்களாகிய கொடுமைகள். கணகணத்து - கணகண வென்று ஒலி செய்து. ]
-------------

114. வழிமேல் விழி


வழிமேல் விழிவைத்து வரவேங்கி ஏனுயிர்த்தாய்?
அழிகாதற் பேதை நெஞ்சே! அனல் கொதிக்கும் இமைமூடிக்
கண்ணயர்ந்து கிடந்தாலும் கனவுலகிற் கண்டிடலாம் ;
எண்ணமெலாம் அவராக ஏங்கியிந்தப் பிறைக்கூனி
நத்தை நிலா ஊர்ந்திழியும் நாழியெண்ணேல் ஊழியதே.
முத்துநிலாக் கண்வடிக்கும் முறையவர்க்கே எட்டாதோ?

[பிறைக் கூனி - கூனி போல் வளைந்த பிறை நிலா . நத்தை நிலா - நத்தையைப் போல் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலா. முத்து நிலாக் கண் வடிக்கும் - முத்துப் போன்ற கண்ணீர் நிற்காமல் வடிக்கும்
கண். ]
-------------

115. குயில்


தேன்குழைத்து வெண்ணிலவு
        தென்றலிலே வீசியதோ
தெள்ளமுதம் களிமிகுந்து
        திசையெல்லாம் பொங்கியதோ

வான் செழித்துப் பூத்திருந்த
        வண்ணமணித் தாரகைகள்
        மாமதியின் மது மயக்கில்
        வளரிசையாய்ப் பொழிந்தனவோ

ஊன் குழையக் குரலெடுத்து
        உயிர்தழைய மிதந்து வரும்
        உன் காதல் தனிப்பாட்டிற்
        குவமை சொல மொழியுண்டோ

மீன்சுழித்த நதிக்கரையில்
        வெண்கொழித்த மணற்பரப்பில்
மெல்ல நடந் தமர்ந்த வென்றன்
        விழிக்கெட்டாப் பொழிற்குயிலே

உலகத்துச் சிறுமையிலே
        உளம் வாடி ஏங்கிவந்தேன்
உன்னிதயக் கிளர்ச்சியிலே
        ஒன்றியுனை வாழ்த்துகின்றேன்

பலகற்றும் உளம் விரியாப்
        பாமரராய் அருளன்புப்
        பண்பழித்து அணுவரக்கப்
        படைதேடி அஞ்சியஞ்சிக்

கலகத்துப் பேயிருட்டுக்
        கல்மனத்தால் ஐயமெனும்
காலனுக்கே மக்களினம்
கணப்பொழுதில் இரையாகும்

நிலையுற்று விதிர்த்திடினும்
        நீநிலத்தே எங்களைப்போல்
நெடுந்திறல் யார்க் குண்டென்றே
        நெஞ்சத்தே செருக்குடையோம்

பால் சுரக்கும் விஞ்சை நிலாப்
        பண்சுரக்க நீ செய்தாய்
பயம் சுரக்கும் சிறு மதியால்
        படைபடைத்து நாங்களெலாம்

மால்சுரக்க நடுங்கியிங்கு
        வழியறியாக் குருடர்களாய்,
        மானிடத்துப் பெருங்குலமே
        மாயவகை செய்துள்ளோம்

நூல் சுரக்கும் அறிவொளியால்
        நுண்மையழ கின்பமுடன்
நுடங்காத பெருவாழ்வே
        நோன்பாகக் கொள்ளாமல்

கால்சுரக்கும் அணுப்பிளந்தோம்
        கடவுளுக்கே நிகரென்று
        கருவமுடன் தோள்புடைத்தோம்
        கடையூழி சிரித்ததுவே

கரையில்லாக் காதலினால்
        காவிரித்தண் சோலையிலே
        கவிதைபின்னிப் பாடுகின்றாய்
        கந்தருவர் நாடறிந்தேன்

உரையில்லாக் கனிவென்னுள்
        ஊற்றெடுக்கச் செய்ததுபோல்
உலகெல்லாம் பகைமாறி
        உயரன்பு பெருங்கருணை

புரையில்லா அறவாழ்வு
        பொங்கிடவே பாடாயோ
        புன்மையெலாம் பொன்றியிது
        பொன்னாடாய்த் தழையாதோ

நரையில்லா அருள்வாழ்வில்
        நட்புறவே காணேமோ
        நல்லிசையால் மெய்யுணர்வாம்
        நறவூட்டும் பூங்குயிலே

முத்துநிலாப் பந்தரின் கீழ்
        மோகனத்துப் பாட்டுருவாய்
        முகிழ்த்திருக்கும் உன்னிடத்தே
        முறையிட்டுன் மகிழ்வொழிக்கச்

சித்தமிலேன் என்றாலும்
        தீங்குழற்பண் தெய்விகத்தால்
        சிறுமையெலாம் மாயுமென்ற
        செவிக்கனவைத் தவிர்க்ககிலேன்

புத்தியிலாப் பிள்ளமையாய்ப்
        போனதெனில் நானுமுன்றன்
        போகவிசைப் பேருலகில்
        புகவிழைவேன் இணைசுரமாய்

வித்தையினால் வானூர்ந்தும்
        மிகச் சிறுத்த உளமுடையேம்
        மென் தளிர்ப்பூ மரத்தமர்ந்தும்
        விண்ணெட்டும் உளமுடையாய்.
---------------

116. வண்ணப் பதுமை


வானத்து வில்லுக்கு மின்னல் பொடி தூவி
        மந்திரச் சொக்கு மயக்கெலாம் கூட்டியே
தேனொத்த கோலத்தில் ஒப்பனை செய்தெழில்
        சிற்பம் உயிர்பெற்றுத் தெருவில் மிதந்தொரு

காலத்தை வென்றநற் கவிதைக் கனவுருக்
        காட்டிய தொப்பவே கன்னியும் தோன்றினாள்
ஆலத்தித் தட்டென உள்ளம் சுழன்றது ;
        அக்கணத் தேயனல் சூறையடித்தது.

"என்னை மறுத்திங்கு யாரை நினைத்தாலும்
        இன்னுயிர் போக்குவன்" என்று முழங்கினேன் ;
கன்னி சிரித்தனள் ; கண்ணை மசக்கினள் ;
        கள்வெறி கொண்டுநான் ஆடிக் களித்தனன் :

வெள்ளி நிலாவிலும் ஆற்றங் கரையிலும்
        வெம்மை குளித்திடக் கண்கள் திறந்தன
உள்ள மிலா இவள் கட்டைச் சிரிப்பெனும்
        ஊளையிடும் வண்ணப் பொம்மை நடைப்பிணம்

என் மனைத் தேவியின் உள்ளத் தழகினை
        இன்றுணர்ந் தேனவள் ஏங்கித் தவித்திட
அன்பினைக் காணாமல் வெற்றுடல் மாயத்தில்
        அலைந்த எனக்கினி உய்வு முண்டோ ?

என்றுளம் சாம்பிடும் வேளையில் தெய்வமாய்
        என்னை நினைத்தவள் மங்கல நாணினள்
பொன்னுளம் பூரிக்கக் காலைப் பிடித்தனள்
        பொம்மை மறைந்தது மங்களம் பொங்கியதே.
---------------

117. பாராசாரி


பாராசாரி எதிரில் நிற்பதைப்
        பார்க்க வில்லையா?
வீராவேசம் காட்டி மகனே
        வெற்றி கொள்ளுவாய்
பிடரி பற்றித் தாவியேறிப்
        பெருமை நாட்டுவாய்
திடரும் மேடும் தேசமெங்கும்
        திசைகள் அதிரவே
பாய்ந்து சென்று பரியை வென்று
        பாரிலென்றும் நீ
ஆய்ந்து கூறும் அறிஞர் புகழ
        அமர மெய்துவாய்
என்று தாயும்: வானிலிருந்து
        நன்று கூறினாள்
கன்று பிரிந்த ஆவைப்போலக்
        கனியும் நெஞ்சினாள்
சேணமில்லை லகானில்லை
        சிறிய சாட்டையும்
கோணலின்றித் தடியுமில்லை
        கூவியழைத் தெனை
வருகவென்று பரிவுபேசி
        வருந்தி யழைத்துமே
அருகில் நின்று குழவிநிலையில்
        அன்னை போலவோர்
ஊசலாடும் கட்டைக் குதிரை
        ஊர்ந்து மகிழ்ந்திடப்
பாச முடனே பரியிலேற்றும்
        பண்போரில்லையே
என்று வெருண்டு நின்ற மகனை
        எண்ணி வானிலே
கன்றி மருகிக் கண்கள் சோரக்
        கலங்கும் அன்னையே
வாழ்வு தருநல் வாய்ப்பைப்பற்ற
        மருளும் மனத்தினர்
தாழ்வை யன்றி வெற்றிமாண்பு
        தாங்க வல்லரோ?

[பாராசாரி கண்ணைக் கவர்ந்து கம்பீரமாக அருகே நிற்கிறது. தேசிங்கு துணிவோடு அதன் மீது பாய்ந்தேறினான். உலகோர் புகழ வெற்றியடைந்தான். ராஜா தேசிங்கு கதை இது. வாழ்க்கையிலே வெற்றி பெறுவதற்கு வேண்டிய நல்ல வாய்ப்பு நம் முன்னே பாராசாரிபோல நிற்கிறது. அதன் பிடர் பிடித்து உந்தித் துணிவோடு செயலாற்றுகிறவன் புகழ் பெறுகிறான். அன்னை முகம் நோக்கும் பிள்ளையைப் போலப் பிறரை எதிர்பார்த்து நிற்பவன் வாழ்க்கையிலே தோல்வி யடைகிறான். ]
-------------

118. தாரகை


கதிரவன் மறைந்தான்
        கதிரொளி மாய்ந்தது
கண்டு மயங்கிடும்
        உலகினை நினைந்தே
ஆயிரம் ஆயிரம்
        அகல் என மீனினம்
நீல விசும்பினில்
        நித்திலக் கோவைபோல்
சிறுமணி ஒளியால்
        உலகினுக் கின்பமே
தருவா பாரீர்
        தாரகை அவைபோல்
சிறுசிறு நல்ல
        சேவையால் அவனியில்
இன்பமே பெருகிட
        என்றும் முயல்வோம்
அருஞ்செயல் பெரிதாய்
        ஆற்றிடும் வல்லமை
இருந்திட வில்லையென்
        றேங்குதல் ஏனோ
வானிலே மலர்ந்திடும்
        மீனினம் பாரீர்
தேனினம் சேர்த்திடும்
        சிறுதுளி பேரின்பம்
-------------

119. எங்கோ ஒரு குழந்தை


எங்கோ ஒரு குழந்தை
என் செவியில் தீப்பாயப்
பொங்கும் துயரோடு
பொருமி அழுவதுவமேன்?

தாயன்பை அறியாமல்
தனிவாடும் மெல்லரும்போ ?
பேயுள்ளம் படைத்தவர்கள்
பிணிக்கண்ணால் சுட்டாரோ?

சிறுவயிற்றுப் பெரும்பசியால்
செங்கீரை துவண்டதுவோ?
பிறைப்பிஞ்சைக் கொடுமையெனும்
பெருநாகம் தீண்டியதோ?

வஞ்சனை முள் மனத்தவர்கள்
வாய்சிரித்தே அணைத்தாரோ?
அஞ்சுதரும் சிறுமைநிறை
அவனிவந்த துயர்க்குரலோ?

தெய்வத்துச் சுடர்க்குழந்தை
சிரிப்பிழந்து முகம் வாடி
நையக் கண்டால் அந்தோ
நடுங்குகின்ற தென் உள்ளம்.

[செங்கீரை - செங்கீரைப் பருவத்திலுள்ள குழந்தை; இங்கு பொதுவாகக் குழந்தையைக் குறிக்கிறது. பிறைப் பிஞ்சு - பிறை நிலாப் போன்ற குழந்தை. மாம நிலவைத்தான் நாகம் தீண்டும் ; கொடுமை என்கின்ற நாகம் எப்படிப் பிறைப் பிஞ்சைத் தீண்டியதோ? வஞ்சனை முள் மனம் - வஞ்சனையாகிய முள் நிறைந்த மனம். அவர்கள் வாய் சிரிக்கின்றது; ஆனால் அவர்கள் அணைப்பு மர் ளாகக் குத்துகின்றது. அவனி வந்த துயர்க் குரலோ - இந்த உலகத்திற்கு வந்ததை எண்ணி வருந்திக் குழந்தை அழுவதாகக் கூறுவதுண்டு. ]
-------------

120. அமரநற் கவிதை


அமரநற் கவிதையின் கற்பனைகளில் வரும்
        ஆநந்தம் போல் வடிவச் சிற்ப மங்கையே
தமரக் குழைவினொடு வெண்முகைப்பொதி- மிகத்
        தாங்கிச் சுருண்டு வரும் வாரிய லைபோல்
மோதி யணியணியாய் உள் நிவந்தெழும் - காதல்
        மோகனத் தேன் நெருப்பு வீசுமலையால்
பாதி உயிர் குறைந்து வாடியயர்ந்தேன் - உன்றன்
        பார்வை மழைக் குருகி ஏங்கிநின்றுளேன்

தூரிகை நாணடைந்து ஓடி ஒளியும் - கவிச்
        சொல்லுந் தன் நாவிழந்து மாழ்கிநைந்திடும்
காரியம் எங்கள் கையை விஞ்சிய தென்றே - உயர்
        காவியப் பெருங்கோயில் நற்கலைஞரும்
யாவரும் ஓர்முகமாய்க் கூறவல்லதோர் - தனி
        எழிலின் இளம்பருவத் தெய்வ மணியே
பாவினுக் கெட்டாத பண்ணின் சுவையே - என்றன்
        பச்சை யுளந்தழைய நோக்கி யருள்வாய்.
----------------

121. ஏந்திய கை


ஏந்திய கையுடன் வந்தேன் - என்னை
ஏனென்றுங் கேளாவுன் கருணைப் பெருக்கைப்
பேர்ந்தடி வைத்தக் கணத்தில் - உன்றன்
பெருவிழிக் கோணப்புன் னகையினிற் கண்டேன்
காணாத பேருண்மை கண்டேன் - வாழ்வில்
கற்றிட வேண்டிய பாடமுங் கற்றேன்
நாணாது கை தொட்ட ஓட்டை - ஓரிரு
நாலெட்டுச் சுக்கலாய் வீசி உடைத்தேன்
ஈதல் உவகையுங் கண்டேன் - உடமை
எல்லாம் வழங்கிட வழிபார்த் திருந்தேன்
ஆதவன் தோன்றுமுன் கூடி - மக்கள்
அணியணியாயுன்றன் வாயிலில் நின்றார்
தேவை யெலாம் பெற வந்தோர் - இருள்
சேர்ந்திடும் எல்லையில் அரவம் ஒடுங்கி
மேவிப் பலதிசை செல்ல - வானில்
மின்சுடர் வந்து தம் பிறவிக்கு முன்னால்
புத்தொளிக் கன்னி எழுந்து - தொல்லைப் புதையிருள் ஓடிடச் செய்த பெரும்போர்
வித்தக மாக்கதை யெல்லாம் - கேட்டு
மெய்மறந் துள்ளன போலவே காணும்
அந்தநல் வேளை நான் உன்றன் - அருள்
அடியிணை மலர்களில் வந்து பணிந்தே இந்த நல் வீணையை ஏற்று - உயர்
இன்னிசை மீட்டென வேண்டுவன் ஐயா
        -- (தாகூர் கவிதைத் தழுவல்)
---------------

122. வானவில் ஊஞ்சல்


வானத்தில் எழுமேழு வண்ணத்து வில்லினில்
        வைரக்கால் அறிவொளி ஊஞ்சலிட்டு
கானத்தில் கந்தர்வம் மோனத்தில் கயிலாயம்
        காட்டியே வீற்றிருந் தாடிடுவோம்
பானத்திற் கின் சுவை அமுதத்தை விஞ்சிய
        பால்நிலாக் குண்டலிச் சாற்றினையே
தானத்தில் நின்றூற்றாய் வாங்கியே மாந்திநற்
        சாந்தியாம் பெருநிலை மேவிடுவோம்
தேனொத்த விழிவண்டும் திரளாண்மைத் தோட்
        சிறுகுட்டைப் பாசத்தில் குன்றும் வீழ்வதனால்
தானொத்த நிலைமேவி நீயின்றி நானின்றித்
        தன்மய மாகும் பேர் இன்பமெல்லாம்
சீனத்து வெடியாக அரவத்தில் மாயாமல்
        செம்மைசேர் தூயநல் லன்பறத்தால்
ஊனத்துக் குறைநீங்கி உள்ளொளி மேலோங்கி
        உண்மைக் குழந்தைகள் ஆகிநிற்போம்.
--------------

123. நிலாப் பிஞ்சு


மின்னற் கொடியதனில் மிகநயமாய்த் தறித் தெடுத்த
வன்னச் சிறுவளைவாய் மயங்கந்தி மேல்வானில்
விஞ்சைக் கனவைப்போல் வேளுக்குப் புதுவில் போல்
பிஞ்சுப் பருவத்தின் பேசரிய அதிசயத்தால்
அன்னை முகநோக்கும் அருங்குழவி யெனவுலகந்
தன்னை யெட்டியெட்டிப் பார்க்கும் தளிர்க்கீற்றே
காதலனைச் சந்திக்கக் கதிர்மறைவில் வந்தகன்னி
பாதைமுனை அவன்வரவை பார்த்தங்கு புதர்ச் செறிவில்
விளையாட்டாய்ப் போயொளிக்கும் வேளையிலே உளம் பொங்கி
முளைகாட்டும் புன் சிரிப்பை மோனவெளி நீலத்தில்
வீசிவிட்டுச் சென்றது போல் விளங்குகின்ற நிலாப்பிஞ்சே
ஆசையற்றுத் தோலுடுத்து அரவுபுனை சிவனார்க்கும்
இத்தனைபே ரெழிலுடன் நீ இருப்பதனால் சிரமணிய
மெத்தவுமோர் பேராசைப் பித்தமெழல் வியப்பாமோ?
கலைமலரும் மெல்லரும்பே கவிஞனுளக் கற்பனையின்
உலையொளிர வருகின்றாய் உனைக்காணும் போதெல்லாம்
வளர்ச்சியிலும் பூரணமாம் மலர்ச்சியிலும் புதியதொரு
தளர்ச்சியிலா நம்பிக்கை தழைத்தோங்கும் என்னுளத்தே

[விஞ்சைக் கனவைப்போல் - ஒரு மந்திரத்தால் உண்டாக்கப பட்ட கனவைப்போல் பிறை நிலா வானில் தோன்றுகிறது. வேளுக்குப் புதுவில் போல் - மன்மதனுக்கு வில் கரும்பு ; பிறை நிலா வேறொரு புதிய வில்லைப் போலக் கட்சியளிக்கிறது. பூங்குழந்தை தாயின் முகத்தை ஆச்சரியத்தோடு பார்க்கிறது; உலகத்தின் குழந்தையாகத் தோன்றிய நிலா தனது குழவிப் பருவத்திலே அதே ஆச்சரிய உணர்ச்சியோடு எட்டிப் பார்க் கிறது. சிரிப்பு ஒரு தனி வடிவம் பெற்றது போலல்லவா பிஞ்சுமதி தோன்றுகிறது? புலித்தோல் ஆடையும் பாம்பணி களும் பூண்ட சிவனுக்கே குழவித் திங்களைத் தலையில் சூடிக் கொள்ள ஆசை உண்டாகிவிட்டது! குழவித் திங்கள் வளர் கின்றது; வளர்ந்து பூரணமாகி முழுநிலாவாக மலர்கின்றது. ஆதலால் பிஞ்சுப் பிறையைப் பார்க்கும் போதெல்லாம் நானும் வளர்ச்சியடைவேன் , பூரணத்தை எய்துவேன் என்ற திடமான நம்பிக்கை பிறக்கின்றது. ]
--------------

124. கடிதம்


நீலவெளி செறியிருளில்
        நித்திலத்துக் கற்பனைகள்
கோலமணி உதிர்த்துள்ளேன்
        கொள்ளை கொள்ளை வானமெலாம் -
ஏட்டுவரி அடங்காமல்
        என்னுள்ளம் பொங்கியவை
பாட்டிசையின் கரைதாண்டிப்
        பால்நிலவாய்த் தாரகையாய்
எங்குமொளி பரந்தனபார்;
        என்னுள்ளச் சுதியதனில்
மங்களமும் குங்குமம் போல்,
        மல்லிகையும் மணமும் போல்
ஒன்றிவிடில் நீயறிவாய்
        உன்னிதயத் தில்லையெனும்
மன்றத்துள் நடனமிடும்
        வளர்பித்தன் நானலவோ?
அங்குபார் பாழ்வெளியில்
        அரிந்துவிழும் மீனொன்று;
தங்கவொளித் தீயதுவும்
        தனிவாடும் என்னுயிரில்
ஒருமூச்சு நைந்தவியும்
        உண்மைதனைக் கூறிடுமே
பெருமூச்சுத் தழலிடையே
        பேதுற்றுக் கண்ணுறங்கா
அவலத்தில் தோய்ந்துள்ளேன் -
        அன்புடனே வருவாயோ?
பவளத்தில் முத்தொளிரப்
        பாகுமொழி சொரிவாயோ?
காதலெனும் தேன்வெள்ளக்
        காவிரியில் இருவருமாய்
மேதினியை விண்ணாக்கி
        விளையாடிக் களிப்போமோ?

[செறி - நெருக்கமான . நித்திலம் - முத்து. பேதுற்று - பித்துப் பிடித்து, அவலம் - பெருந்துன்பம் . பவளத்தில் முத்தொளிர - பவளம் போன்ற இதழ்களிடையே முத்துப்போன்ற பற்கள் விளங்க. ]
--------------

125. காலவெளி


காலனெனும் உடன்பிறப்பைக்
        காமஞ்சேர் மாயவனைக்
காதலித்துக் கூத்தாடும்
        களிமயக்கத் தெல்லையிலே
நீலப்பாழ் வெளிச்சிறுக்கி
        நெஞ்சத்தீ மாலையிட்டாள்
நிமிர்ந்ததடா துடிமுழக்கம்!
        நெட்டுயிர்ப்போ ? புன்னகையோ?
மின்னலிது தோன்றிடவே
        மேகமாய் நின்றவனார்?
வெறுவெளிக்கும் காலனுக்கும்
        விசையாக உள்ளவனார் ?
கன்னலிலே கட்டியவன்
        கன்னலின்றிக் காண்பரியான்
கணக்கறியிற் சதிராடும்
        காலவெளி சூனியமே.

[வெளி அல்லது இடம் என்பது ஒன்று. இதன் உடன் பிறப்பாகவே காலம் தோன்றுகிறது. இவை இரண்டையும் கொண்டு பிரபஞ்சங்கள் தோன்றுகின்றன. இடத்திற்கும் அதன் உடன் விளைவான காலத்திற்கும் காரணமாக உள்ள பரம்பொருளை அறியும் போது இவை பிரண்டும் சூனியமாக மறைந்து விடுகின்றன. காலன் - காலம் ; காலன் மாயவள். காலம் என்பது மாயை. நீலப் பாழ். வெளி - இடம். இடம் காலத்தைக் காதலிக்கிறது. இவற்றின் கலவியிலே தோற்றம் ஏற்படுகிறது.
துடிமுழக்கம் தோற்றத்திற்குச் சின்னம். 'தோற்றம் துடியதனில்'. துடி- டமருகம். பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பரம்பொருளின் நீண்ட மூச்சாகவோ (நெட்டுயிர்ப்பு) புன்னகையாகவோ கொள்ளலாம். ஆனால் பரம்பொருளுக்கு இது மின்னல் போன்றது. தோற்றமாகிய மின்னல் உண்டா வதற்கு மேகமாக உள்ளது பரம்பொருள். அதுவே வெறு வெளிக்கும் காலனுக்கும் விசை . கன்னல் - கரும்பு; கட்டி - வெல்லம், காலமும் இடமும் சதிராடுகின்றன. கரும்பிலே வெல் லம்போல் மறைந்து நிற்கும் பரம்பொருளின் - கணக்கறிந்தால் இடமும் காலமும் சூனியமாகும். கணக்கறிந்தார்க்கன்றிக் காணவொண்ணாது' என்று தொடங்கும் திருமந்திரப் பாடலை (316) இங்கு சேர்த்துப் பார்க்க.
இறைவன் சதிராடு கின்றானா? காலவெளி சதிராடுகின்றனவா? இறைவன் ஆடும் போது இவை ஆடித்தானே ஆகவேண்டும்? நெஞ்சத் தீ என்பதைக் காதலுக்கு அடையாளமாகக் கொள்ளலாம். அண்டங்களின் தோற்றம் உருவெடுக்காத நிலையிலே பாழ் வெளியிலே ஏதோ ஒரு சமயத்தில் திடீரென்று உண்டாகும் அணுக்களின் சேர்க்கையாகவும் அதைக் கொள்ளவேண்டும். ]
----------

126. பூவிழந்தபோது


வானத்து மின்கொடியே,
        வாழ்விழந்த பெண்ணமுதே!
தேனொத்த நகையிழந்து
        சிந்தையிலே பாட்டழிந்து

இளவேனில் புன்சிரிப்பின்
        எழில்வடிவம் பூவிழந்து
நெளிகாந்தள் அணிவிரலும்
        நெற்றியெனும் பொன்பிறையில்

கொள்ளைகொளும் திலகமிடும்
        குங்குமத்தைத் தான் மறந்து
வெள்ளையெனும் துயருடையில்
        வீடென்னும் சிறையடைந்தாய்.

முத்து திரும் பேச்செங்கே?
        மோகனக்கை வீச்செங்கே?
சித்தமதில் பித்தெழுப்பும்
        தீங்கவிதைப் பார்வையெங்கே?

நிற்கின்ற நிலையினிலே
        நெஞ்சள்ளும் அசைவினிலே
கற்காமல் பரதநடக்
        கலைப்பெருமை காட்டியநீ,

பெருவுடையார் பெருங்கோயில்
        ஓவியத்துப் பெண்ணணங்கு
உருமறைந்தே சுவர்க்குள்ளே
        ஒளியிழந்த பாங்கினிலே,

இளமைமணம் மாறாமுன்
        இளங்குருத்துத் தோன்றாமுன்
உளம்வாழ்வில் ஒன்றாமுன்
        ஒருமாயக் கனவெனவே

அடுப்பறையில் மறைந்தாயே!
        அகமடுப்பாய் எரிவாயோ?
வடுக்கண்ணை உலையாக்கி
        வாழ்நாளே உலைநீராய்ப்

பொங்குவையோ? பொருமியுளம்
        புடத்தீயாய் வெம்புவையோ?
மங்கியதே என்கவிக்கு
        வளமளித்த எழில் தெய்வம்;

மலர்ப்பிரமன் விதிப்பிழையோ?
        மக்கள் மதிக் குறைப்பிழையோ?
குலப்பெருமை குலவழக்கக்
        குருட்டு நிலைக் கொடும்பிழையோ?

எதுவென்றே கூறிடுவேன்?
        இன்னுயிர்க்குத் துணையாய்நீ
மதித்தன்று தேர்ந்திருந்தால் .
        வாழ்வொடியக் காரணமாம்

பெற்றோர்கள் உறவினர்கள்
        பிழைமுடிப்புக் காக இன்று
முற்றாத பேரெழிலின்
        மொட்டுதிர நியாயமென்ன?

[பெருவுடையார் பெருங் கோவில் ஓவியத்துப் பெண்ண ணங்கு - இராசராசன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலிலே மிக அழகிய ஓவியங்கள் தீட்டப் பெற்றன; அவற்றிலே எழிலே உருவான மங்கையரின் வடிவங்களும் உண்டு. அவையெல் லாம் அண்மைக்காலம் வரையில் மேலே பூசப்பட்ட சாந்திலே மறைந்து யாருக்கும் தெரியாமற் கிடந்தன வெள்ளை என்பது தூய்மையின் சின்னம்; ஆனால் இங்கு துயரத்தின் சின்னம் வீடென்னும் சிறை - வீடு என்பது விடுதலை பெற்ற நிலை யல்லவா? இங்கு வீடு என்பது சிறையாகக் காட்சியளிக்கிறது! பேரெழிலின் மொட்டு - மலராத முகையாக இருந்த பேரழகு. ]
-------------

127. நான் மறவேன்


எட்டியுங் கசந்திடுமோ இளந்தேன் இனித்திடுமோ
நட்டமிடும் பித்தனுடன்- என்கல் நெஞ்சே
நான் மறைந்து கூடிவிட்டால்.

நட்டமிடும் பித்தனுடன் நான்மறைந்து கூடிவிட்டால்
எட்டியும் இளந்தேனும் - என்கல் நெஞ்சே
ஏகமாய்க் காணாதோ?

போக்குவர வில்லாத பூரணமாம் போதத்தில்
நீக்கமற நின்ற பின்னர் - என்கல் நெஞ்சே
நீயேது நானேது?

நீக்கமற நின்றபின்னர் நீயுமில்லை நானுமில்லை
பார்க்கவொரு பாவையில்லை - என்கல் நெஞ்சே
பார்ப்பவனும் இல்லையன்றோ?

பூரணத்துள் ஒன்றாகப் புகுந்து நிறைந்திடவே
காரணமாய்த் தோன்றிடுவான் - என்கல் நெஞ்சே
கருணையுள்ள சற்குருவே.

காரணமாய்த் தோன்றும் கருணையுள்ள சற்குருவே
ஆரணங்கள் போற்றுகின்ற - என்கல் நெஞ்சே
ஆதிமுதல் நாதனன்றோ ?

இன்பமெனத் தோன்றித் துன்பமாம் இச்சை யெலாம்
புன்மையெனத் தள்ளியின்றே - என்கல் நெஞ்சே
புனிதகுரு நாடாயோ?

புன்மையெனத் தள்ளியின்றே புனிதகுரு நாடிவிட்டால்
சென்மமிது கடைத்தேறும் - என்கல் நெஞ்சே
செயம்பெற்ற வாழ்க்கையுமாம்.

அறிவொளியும் ஆகமங்கள் அத்தனையும் காட்டுகின்ற
நெறியிதனைப் பற்றாமல் - என்கல் நெஞ்சே
நீசவழி ஆடுகின்றாய்.

நெறியிதனைப் பற்றாமல் நீசவழி ஆடுகின்ற
வெறிபிடித்த குரங்கானால் - என்கல் நெஞ்சே
வேலெனக்குத் துணைவருமே.

தந்தைக்கு மந்திரத்தைத் தான்புகலும் ஞானசுடர்
எந்தையாம் சற்குருவாம் - என்கல் நெஞ்சே
எனக்கொளியைக் காட்டிடுவான்.

எந்தையாம் சற்குருவாம் எனக்கொளியும் காட்டுகின்ற
கந்தனருள் மலரடியை - என்கல் நெஞ்சே
கணப்பொழுதும் நான் மறவேன்.

[எட்டியுங் கசந்திடுமோ இளந்தேன் இனித்திடுமோ - வாழ்க்கையின் துன்பங்களை எட்டியும், இன்பங்களை இளந் தேனும் குறிக்கின்றன. நட்டமிடும் - நடனமாடும். நான் மறைந்து - நான் மறைவாக என்பது வெளிப்படையான பொருள் ; நான் என்கிற உணர்வே இல்லாமல் மறைந்து போகும்படி என்பது மற்றொரு பொருள். எட்டியும் இளந்தேனும் ஏகமாய்க் காணுதல் - வாழ்க்கையின் இன்பதுன்பங்கள் வேறு வேறாகத் தோன்றாமல் இருக்கும் சமநிலை. ]
-----------------

128. மலர்


எட்டிப் பறித்தாய் எழில்நாசி மனம் நுகர்ந்தாய்
அட்டக் கருங்கூந்தல் அணிசெய்ய வைத்துப்பின்
வீசி எறிந்தாய் மிகவாடிச் சருகாகித்
தேசு குறைந்தேன் தெருப்புழுதி மிதிபட்டேன்
என்றாலும் மெல்விரலில் நீ தொட்ட
விஞ்சையினை எண்ணியெண்ணி
உள்வளரும் உவகையிலே
உயிர் தழைக்கும் திருவுடையேன்.
-------------

129. நிலா


நிலவெனும் பெண்ணே - நானுனை
        நெஞ்சினில் பதித்தேன்
கலையெலாம் திரண்டு - அமுதெனும்
        கவிதையாய் நின்றாய்
முகையவிழ் மல்லிகை - சொரிந்திடும்
        முறுவலின் வெண்மையாய்
பகையிருள் மயங்கிட - உலகெலாம்
        பாற்கதிர் பொழிவாய்
எண்ணிலாக் கனவுகள் - உளந்தனில்
        எழுப்பியே நடந்தாய்
கண்ணிலே மதுவாம் - உன்னிடம்
        காதலாய் நின்றேன்
பண்ணெனும் மென்மையை - உன்முகப்
        பட்டினில் உணர்ந்தேன்
தண்ணெனும் விஞ்சையைச் - சிரிப்பினில்
        தந்திட மாந்தினேன்
நித்திலக் கரங்களில் - தழுவினாய்
        நெஞ்சம் தழைந்தேன்
பித்தனைப் போல நான் - பிதற்றுவேன்
        பே சொணா எழிலாய்.
---------------

130. புத்தாண்டு


சங்கே முழங்கு
        எங்குமே இன்பம்
        பொங்குக என்றே - சங்கே
எங்குமே இளநகை
        எங்குமே மங்களம்
        பொங்குக என்றே
        புதுநா ளிதனில் - சங்கே
புன்மைகள் மறைக
        பொய்மைகள் மடிக
        இன்மையும் ஒழிக
        இன்றே என்று நீ - சங்கே
குறுகிய நோக்கமும்
        குறுநரிச் சூழ்ச்சியும்
        வறுமையும் பிணியும்
        மாய்ந்துபோ என்றே - சங்கே
அவனியோர் வீடாம்
        அனைவரும் எம்மவர்
        புவியெலாம் இன்புறப்
        புரிவதே வாழ்வென - சங்கே

சாந்தமே உலகெலாம்
        தழைத்தே ஓங்குக
        காந்தியம் வள்ளுவம்
        கனவிலும் நிலவுக - சங்கே

[இப்பாடல் அடாணா இராகத்தில் பாடுவதற்கு ஏற்றது. காந்தியம் வள்ளுவம் கனவிலும் நிலவுக - காந்தியடிகளின் கொள்கைகளும் திருவள்ளுவரின் சீரிய கருத்துக்களும் நிலவுக. அடிமனத்திலுள்ள இழிந்த உணர்ச்சிகள் கனவில் தோன்றும். அவ்வாறு இழிந்த உணர்ச்சிகளுக் கிடமான கனவிலும் உயர்ந்த எண்ணங்களே நிலவ வேண்டும். ]
--------------

131. காதலிக்கு மாலை


மின்னலை வான வில்லில் இழைத்தே - சுடர்
        மீன் திரள் நவமணிகள் பல நூறு கோத்து
சன்னமாய்க் கதிரவன் கம்பிகள் பின்னி - முழு
        சரத்கால வெண்ணிலாச் சரிகைகள் கட்டி
காலவெளி மாயையில் அழியாமல் என்றும் - வளர்
        கருணையாம் இறைவனின் திருநோக்க மென்னும்
மூலமுடி யிட்டுமே நிறையின்பம் கூட்டி - அலை
        மோதியே நாளெலாம் சலியாமல் பொங்கும்
காதல் தேன் ஊறிடும் உள்ளமலர் அவிழும் - மனங்
        கமழவே கனவெல்லை அமுதோடம் தாண்டி
மோதுமென் உணர்வாழி கரையிடும் இன்பம் - உயர்
        முத்தொளிர் மாலையிது மார்பில் அணிவாய்

[மின்னல் பூ என்ற எனது கவிதைத் தொகுதியில் வெளி யான இப்பாடல் சில மாறுதல்களோடு இங்கு இடம் பெறு கிறது. இரண்டு கண்ணிகள் புதிதாகச் சேர்ந்துள்ளன. காதலி யின் மாலையிலே எத்தனை கண்ணிகளும் சேரலாமல்லவா? கால வெளி மாயை - காலம் இடம் ஆகியவற்றால் தோன்றும் பிரபஞ்சமாயை. இறைவனின் திருவருள் இந்த மாயைக்கு அப் பாற்பட்டது. காலவெளி என்ற கவிதையையும் நோக்குக. ]
-------------

132. நீ


இதழுக்குப் புன்முறுவல்
        இன்னிசைக்குச் சுருதிலயம்
கதிருக்குச் செங்கமலம் - என்
        கண்ணுக்கு ஒளிநீயே!

கடலுக்கு முழுநிலவு
        களிவண்டுக் குப்புதுப்பூ
முடிவுக்கு மனச்சாந்தி- என்
        முயற்சிக்குப் பொருள் நீயே!

வீணைக்கு மென்மைவிரல்
        வேய்ங்குழற்குப் பூங்காற்று
கானுக்குத் தண்பசுமை - என்
        கவிதைக்கு உயிர் நீயே!

ஆண்மைக்கு நிறைகருணை
        அறிவுக்குப் பேரடக்கம்
மாண்புக்குப் பண்பாடு - என்
        வாழ்வுக்கு மணம் நீயே

ஆற்றுக்கு நிறை தண்ணீர்
        அன்புக்குப் பெருந்தியாகம்
காற்றுக்கு இளந்தட்பம் - என்
        காதலுக்கு அணைநீயே!

[இதழுக்குப் புன்முறுவல் - இதழுக்கு அழகு தருவது புன்முறுவல். இதுபோலவே பிறவற்றிற்கும் ஏற்றவாறு பொருள் கொள்க. முடிவுக்கு மனச்சாந்தி - வாழ்க்கையின் முடிவுக்கு இனிமை தருவது மனச்சாந்தி. கானுக்குத் தண் பசுமை - பச்சென்ற மரஞ்செடி கொடிகள் இல்லாத கானகத்திற்கு அழகுண்டா? ]
-----------

133. ஓங்குக சுடர்


உள்ளத்தில் என்னவோ
        ஒளிந்து நிற்குது
        ஓசைப்படாமலே - அது

கள்ளத்தில் மேலெழும்
        காட்டுக் குரங்கினைக்
        கட்டுக்குள் வைப்பதாம்

ஐம்புல வேடர்கள்
        ஆட்டக் களிப்பிலும்
        அயர்வுப் போதினிலும் - சிறு

சம்புக வழிதேடித்
        தாவிக் குதித்தெழும்
        தாழிருட் பேய்களையே

மண்டையிற் குட்டியே
        மாயக் குகைதள்ளி
        வல்லிரும் பாணியிட்டு - ஒரு

கண்டமும் வாராமல்
        காக்கும் சுடரது
        காலத்தும் ஓங்குகவே!

[ஓங்குக சுடர் அடி மனத்திலே இழிந்த இச்சைகளாகிய குரங்குகளும் பேய்களும் அழுந்திக்
கிடக்கின்றன. அ ைமேலெழுந்து தலை விரித்தாடச் சமயம் பார்த்துள்ளன. ஏதோ ஒன்று
நமக்குள்ளே மறைவாக இருந்து அவற்றைத் தடுத்து நிறுத்துகிறது. அந்த ஒன்றின் வலிமை குறையக்
கூடாது ; குறைந்தால் வாழ்க் கையிலே வீழ்ச்சி காண்கிறோம். அதன் வலிமை ஓங்க வேண்டும்
என்பது பிரார்த்தனை. ஐம்புல வேடர் - பஞ்சேந்திரி யங்கள். சம்புக வழி - குள்ள நரி தந்திரம்
வல்லது. ஆகவே சம்புக வழி யென்பது தந்திரமாகக் குள்ளநரி போன்று பதுங்கிச் செல்லும்
வழியாகும். மாயக்குகை -அடிமனம் ]
-------------

134. கணக்கறுமே


வீட்டுக்குள் தாய்க்குகைப்
        பாட்டை மடுத்து நான்
        விண்ணவரோ டுறவாடி நின்றேன் - அந்தக்

காட்டுக்குப் போவாளும்
        ஓட்டினாள் தீட்டுடன்
        காணாப்பொய்ச் சீமையில் வாடி நின்றேன் - இங்கே

வீட்டையே தேடாமல்
        ஓட்டைக் குடங்கொண்டு
        வெட்டி நீர் எலிவளை பாயவைத்தேன் - இந்த

மாட்டுக்குப் பாசப்பொய்
        வாட்டங் களைந்திட
        வாகனன் இந்தமு தீந்திடுமோ - சுடலை

ஆட்டத்தில் பித்தனார்
        காட்டும் மயக்கத்தின்
        அந்தரங்கம் உணர் ஜோதி கண்டால் - மாயப்

பாட்டுக்கு மத்தளம்
        போட்டுக் குடங்கெடும்
        பாவப் பிறப்புக் கணக்கறுமே கணக்கறுமே

[தாய்க் குகை வீடு - கருப்பை மடுத்து- உட்கொண்டு. கருப் பையிலுள்ள சிசு தேவரோடு
உறவாடுவதாக நம்பிக்கை. காணாப்பொய்ச் சீமை -உலகம். ஓட்டைக் குடம் . உடம்பு மாடு. மனிதப்
பிறவி. வாகனன் - சிவன். இந்தமுது - யோகிகள் கண்டின் புறும் மதியமுதம். மாயப்பாட்டு -
தோற்றமாகிய மாயையாம் பாட்டு. ]
-------------

135. அறிவிப்பு


காதலுன் மேற் காதல்
        கனல் சுரக்கும் தேனூற்று
சீதமதித் தண்ணிலவைச்
        செந்தீயாய்க் காய்ச்சியென்றன்

உடலொன்றோ உள்ளத்தும்
        உயிரூடும் பாய்ச்சிடுமே
கொடிமின்னற் கொழுந் தனைய
        கொள்ளையெழில் வளர் திருவே

உன்னைமனக் கோயில் வைத்து
        ஊழித்தீ மதிலெடுத்தேன்
அன்பொழுக நீ நோக்கின்
        - அக்கணமே அம்மதிலும்

அமுதமிட்ட பொற்கலசம்
        ஆகாதோ விஞ்சைபுரி
குமுதமுன்வாய்ச் சிரிப்பினுக்குக்
        கூடாத சித்தியுண்டோ

அன்னமே ஒருமாற்றம்
        அறிவிக்க நான் விழைந்தேன்
கன்னலென என்னிடத்தே
        கருணையன்பு காட்டாமல்

என்னை நீ இகழ்ந்தாலும்
        ஏளனமாய்ப் பார்த்தாலும்
புன்மையென மதித்தாலும்
        பொறித்தவுன்றன் வடிவுளத்தில்

என்றுமினி நிலைத்திருக்கும்
        எரியேறும் கடைநாளும்
பொன்றாமல் வரும்பிறவி
        புகுந்துனக்காய் ஏங்குவனே.

[கனல் சுரக்கும் தேனூற்று - காதல் தேனூற்றுப் போன்றது; ஆனால் அதுவே கனலைச் சுரக்கின்றது. ஊழித்தீ மதில் - நீ என் உள்ளத்தில் கோயில் கொண்டிருக்கிறாய். காதல் என்னும் ஊழித்தீ அக் கோயிலுக்கு மதிலாக இருக்கின்றது. பொன் றாமல் - இறவாமல் . ]
----------

136. மண்ணாடும் பொன்னாடாம்


கரும்பச்சைத் தழைமிடைந்த
        கவின் புங்கன் புதர்க்குள்ளே
கரைந்துருகிக் கூவுகின்ற
        கருங்குயிலே நீயுமுன்றன்

உள்ளத்தில் தேன் சொரிந்து
        உயிருக்குத் தண்ணமுதாய்க்
கொள்ளையின்பம் கூட்டுகின்ற
        காதலியைக் காணாமல்

வாடியென்னைப் போலவேதான்
        வருந்தி மன மொடிந்தாயோ?
பாடுகின்ற பண்ணிலவில்
        பகரவொணா வான்கிளர்ச்சி

குழைகின்ற காரணமென்?
        குமுறியெழுந் தலைந்தாடும்
அழிமனத்தின் அவலமெனும்
        அனலிட்டுப் புடம் போட்டு

மெருகிட்ட பாட்டுமிதோ?
        விந்தையெலாம் விரிந்ததுவே -
உருகியுளம் நைந்திடுங்கால்
        உயருணர்ச்சிப் பரிவெல்லாம்

சுரந்திடுதல் கண்டுள்ளேன்
        சோர்ந்தவுயிர் தனக்காகப்
பெருங்கனிவும் அந்நிலையில்
        பிறந்திடுமென் இயல்பறிவேன் ;

ஏந்தியகை கண்டுளை வேன் ;
        இறைவனடி மிகநினைவேன் ;
ஆய்ந்துனைப்போல் உளம் விரிவேன் -
        அப்பரிசே எந்நாளும்

இன்பத்தும் துன்பத்தும்
        எங்களுக்கே வாய்த்திருந்தால்
மன்பதையும் வாழ்ந்திடுமே
        மண்ணாடும் பொன்னாடாம்.

[புங்க மரம் கரும்பச்சைத் தழை போர்த்து நிற்கிறது. அதற்குள்ளே புகுந்திருந்து ஒரு குயில் கூவுகிறது. அதன் குரலிலே என்றுமில்லாத புதிய உணர்ச்சியும் கற்பனைக் கனிவும் நெளிகின்றன அதைச் செவிமடுத்தபோது உண்டான சிந்தனை களின் விளைவாக எழுந்தது இப் பாடல். இன்பத்தில் திளைக்கும் போது மற்றவர்களின் துன்பத்திற்காகப் பரிவு ஏற்படுவதில்லை. ஆனால் எனக்கு ஏதாவது துன்பம் நேர்ந்துவிட்டபோது பரிவும், இரக்கமும், பக்தியும் மேலெழுகின்றன. இந்த உயர் உணர்ச் சிகள் எப்பொழுதும் மேலோங்கி இருக்கலாகாதா? அவ்வாறு என்றும் ஓங்கியிருந்தால் மண்ணாடு பொன்னாடு ஆகிவிடும். பண்ணிலவில் - பண்ணாகிய நிலவு. ஏந்திய கை - பிச்சைக் காக ஏந்திய கை. ]
----------------

137. எத்தனை இன்பமடா!


எத்தனை இன்பமடா இளமையின் எக்களிப்பு!
முத்துச் சிரிப்பவிழும் மோகனஞ்சேர் சாயலுடன் அசைவிலே ஓரழகு அடியெடுக்கத் தனியழகு
வசியங்கள் பலகாட்டி வஞ்சி நடக்கின்றாள் - அன்பினிலே சொக்கி அழகைப் பருகியவன்
என்ன பிறப்பிதடா இருநயனச் சாளரங்கள்
தந்த எழிற்பிழம்பின் தனியின்பம் கண்டு சொலத்
தந்தமிலா ஒருநாக்கு தத்தி நலி புன்சொற்கள்
என்றவள் தன் மருங்கினிலே எடுப்பான தோற்றமுடன்
சென்றவனைச் செவ்வேளாய்ச் சிந்தையினில் அமர்த்தியவள்
மேதினியிற் காண்பதெலாம் விந்தையெனக் களிப்புடனே
காதலர்கள் போகின்றார் கண்ணுக்கு நல்விருந்து -
தெய்வீகக் காதலிது சிறுமையெலாம் துடைத்தெறியும்
மெய்யாக இவ்வுலகை வீடாக்கும் ஆதலினால்
மாசிலாக் காதலுக்கு வரம்பொன்றும் கட்டாதீர்
வீசுகின்ற தென்றலைப்போல் விரிந்ததுவே அனைத்துயிர்க்கும்
பாய்கின்ற தேன்மதுவாய்ப் பரந்துலகைத் தன்
குடைக்கீழ் ஆள்கின்ற பெருமையிலே அமைவதற்கு வழி செய்வீர்
[தந்தமிலா - எலும்பில்லாத . தத்தி நலி புன்சொற்கள் - அவள் அழகைக்கூற ஏற்ற சொற்கள் இல்லை. ]
-----------

138. பொட்டு நிலா


பொட்டு நிலாக் கீழைவானில்
        வெள்ளி பொங்கவே - செக்கர்
வட்டப்பரிதி மேற்கில் நின்று
        கொட்டும் தங்கமே.

பகல் செய் அரசும் மலர் வெண்ணிலவும்
        சேர்ந்து பார்க்கையில் - பட்ட
அகமுந்துளிரச் சோலைக்குயிலின்
        அமுதம் எழுந்ததே.

அந்தி வெள்ளி வைரமல்லி
        அழகு வெடிக்கவும் - தெற்கின்
மந்தகாச மென்னப்பிஞ்சுக்
        காற்றும் வந்ததே.

திசைகள் எங்கும் மயங்கும் இசையில்
        தேன்து ளித்திடும் - இந்தப்
பொசியும்மாய விஞ்சைபோலோர்
        பொழுதும் வாய்க்குமோ?

உலகம் சொக்கி நறவம்மாந்தி
        உணர்வி ழந்துமே - குட்டிப்
புலவி நீங்கிக் கலவிவிழையும்
        போதை கொண்டதே.

ஒருங்குசேர அரியவான
        இன்பம் ஒன்றவே - இன்றென்
வரங்களாகத் தந்தகருணை
        என்றும் வாழ்கவே.
[ கோடையிலே கிராமப் பக்கத்தில் சில நாட்களைக் கழித் தேன். அந்தச் சமயத்தில் இந்த அற்புதக் காட்சியைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது! தங்கக் கதிரவனும், வெள்ளி நிலவும் எதிர் எதிர் பார்த்து நிற்க இப்படி ஒரு காட்சி ஏற்பட்டது ஒரு வரப்பிரசாதந்தான். அந்தி வெள்ளி வைரத்தால் செய்த மல்லிகை போலிருக் கிறது. மந்தகாசம் - புன்னகை. ]
----------------

139. வேண்டும்


தென்னை இளம் பாளை - சிரித்திடும்
        செவ்வி தவழ் நங்காய்
என்னை யுளங் கவர்ந்தாய் - இனிமேல்
        இன்ப மெலாம் நீயே

முல்லை மலர்க் குவை போல் - விரிந்திடும்
        முழு நிலவு வேண்டேன்
அல்லி மல ரெனவே - திகழுமுன்
        ஆசை முகம் வேண்டும்

வான மகளிரைப் போல் - வளர்சிறு
        வண்ண மலர் வேண்டேன்
கானக் கவிதை துள்ளும் - உனதிரு
        கண் மல ரேவேண்டும்

தென்றற் சிறுமி வந்தே - மெதுவாய்த்
        தீண்டும் சுகம் வேண்டேன்
ஒன்றி யுயிர் கலந்தே - தழுவிடும்
        உன் னருள் வேண்டுமடி

தேவர் விரும் பியுணும் - அமுதின்
        தீஞ்சுவை நான் வேண்டேன்
ஆவல் பெருக் கிடுமுன் - இதழ் தரும்
        அமுதம் வேண்டுமின்றே.
------------

140. தழை மறைவினில்


தழை மறைவினில் சிட்டுக்கள் வண்ணச்
        சந்தங்கள் மீட்டின
சந்தங்கள் மீட்டும் படுக்கை விரல்கள்
        கற்பனை மூட்டின;
இழை நரம்பினில் கந்தர்வப் பண்கள்
        இன்பங்கள் காட்டின
இன்பங்கள் காட்டும் மன்மதக் கண்கள்
        யாழிற்கை கூட்டின.

மெல்ல மிதந்திங்கு வந்திடும் காற்று
        கந்தங்கள் தூவின
கந்தங்கள் தூவும் கொவ்வைச்செவ் விதழ்கள்
        தேன்சுவை கூவின;
அல்லி மலர்ச்சிறு புன்னகைக் கொள்ளைகள்
        உள்ளத்தில் மேவின
உள்ளத்தில் மேவும் கள்ள உணர்ச்சிகள்
        வெள்ளத்தில் தாவின.

கவிதைக் கன்னத்துக் கிண்ணிச் சுழிகளும்
        காதலைப் பேசின
காதலைப் பேசும் சிற்றெல்லை தாண்டி
        எண்ணங்கள் வீசின ;
அமுதத் தாரைகள் எங்கும் விழுந்துமே
        ஆநந்தம் பொங்கின
ஆநந்தம் பொங்கும் அன்பின் பெருமைகள்
        சிந்தையில் தங்கின.

மங்கை இளமலர் நெஞ்சில் எழுப்பிடும்
        மாண்புகள் கொஞ்சமோ?
மாண்புகள் கொஞ்சும் இல்லறம் நாட்டிட
        வேண்டினேன் வஞ்சமோ?
அங்கை சுருள்வதில் இன்பங்கள் பொங்கிட
        அருகில் வாவெனுமோ ?
அருகில் வாவெனும் வரமும் பெற்றிடில்
        அண்டமும் வானமுமாம்.
-------------

141. தேவி பராசக்தி அன்னை


தேவி பராசக்தி அன்னை தன்
        சிந்தை மகிழ் செல்வச் சேய்கள் யாம்
மேவுமிடர் நமக் கொன்றுண்டோ
        வீரி மடியினில் வீற்றுளோம் (தேவி)

முன்னைப் பழமறைச் சோதியாம்
        முக்கண்ண னாரிட பாகத்தில்
மின்னும் பசுங்கொடி யன்னவள்
        விண்ணொடு பாரெலாந் தந்தவள் (தேவி)

அஞ்சும் பொருள் நமக்கில்லையே
        அந்தகன் தன்னையும் சாடுவோம்
நஞ்சுங் குடித்திடப் பின்னிடோம்
        நன்மை பிறருக்கங் காகிடில் (தேவி)

தீமை அவுணரை வீழ்த்தியே
        தேங்கும் குருதியில் ஆடுவாள்
ஏம மெனச்சரண் பற்றினார்
        இன்பத மெய்திட நோக்குவாள் (தேவி)

அண்ட முகட்டிலும் ஏறுவோம்
        அரிய செயல்பல சூழுவோம்
கொண்ட கருமம் முடிவுறக்
        கோடித் தடைகளும் மீறுவோம் (தேவி)

சிங்கஞ் சுமந்திட வந்தவள்
        திக்குச் திசையெலாம் ஆளுவாள் -
எங்குந் துயர்மிடி நீக்குவாள்
        இன்பம் மலரக்கண் நோக்குவாள் (தேவி)
------------

142. இளந்தாய்


'வரும் நிலாவே, வந்தென் கண்மணிக்கு
        உச்சியில் ஒரு முத்தம் கொடு'
பூங் குழந்தையை மடியில்
        வைத்துக் கொண்டு தாய் கூவுகிறாள்;
அந்தி வானத்தின் மங்கிய நீலப்பரப்பில்
        மாரிக்கால நிலவுப்பெண் மிதந்து வருகிறாள்;
சோலையிலிருந்து பூக்களின் மெல்லிய நறுமணம்
        இருளில் பதுங்கி வருகிறது;
வீதியில் கவலையின்றிக் கோமாள மடிக்கும்
        சிறுவர்கள் சிரித்து ஒலி யெழுப்புகிறார்கள்;
தூக்கங் கொள்ளாத குயில் ஒன்று
        மாஞ்சோலையின் நிழல் அடுக்கத்தில்
        தனிமையாகத் தனது உள்ளத்தைப்பாடிக்
        களிக்கிறது;
தொலைவிலிருக்கும் உழவனது உள்ளத்தினின்று
        வெளிப்படும் குழலின் பூவோசை மீன்குயிற்றிய
        வானத்தில் தாவி, அசையாத காற்றில் பரவி,
        பிறகு பூமியில் பொறிவான மத்தாப்புப் போல
        உதிர்கிறது;
தாழ்வாரத்தில் குழந்தையை மடிமேல் வைத்துக்
        கொண்டு தாய் இனிமையாகக் கூவுகிறாள்;
'வருக நிலாவே, வந்தென் கண்மணிக்கு உச்சியில்
        ஒரு முத்தங்கொடு'
நிலாவை ஒருமுறை பார்க்கிறாள்: பிறகு தன் கையி
        லிருக்கும் இனிய அழகுத்திரளைப் பார்க்கிறாள்;
நிலா அவள் அழைப்புக்குச் செவிகொடாது அமைதி
        யாக முறுவலித்துக் கொண்டிருக்க முடியுமா
        என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
குழந்தை தாய் சொல்வதைத் தானும் சொல்லிச் சிரிக்
        கிறது: ‘நிலா நிலா வாவா!'
தாய் நகைக்கிறாள்; நிலவு ஒளிரும் இரவும் நகைக்
        கிறது.
கவிஞனாகிய நான் அக் குழந்தையின் தந்தை; அத்
        தாயின் கணவன்; மறைவிலிருந்து இந்த ஓவியக்
        காட்சியைச் சுவைத்துக் கொண்டிருக்கிறேன்.

(துவிஜேந்திரலால் ராய் எழுதிய பாடலின் பெயர்ப்பு )
---------------

143. நீங்கா இருள்


நீங்கா இருள் நெடுங்கரும்பொழுதெலாம்
தூங்காத்துளிநிறை துயர்க்கண்களே
ஆர்சொல் நம்பியே ஆர்வத்துடனே
நீரிமைமூடா நிறைதவம் செய்தீர்?
உறங்குவீராயின் ஒரு காவலரையே
செறியலைமனம் திறந்திடக்கனவில்
கண்டின்புறும் களிப்பினைப் பெறலாம்
பண்டைவினையோ பலித்திலையதுவுமே என மருவி
நெட்டுயிர்த் துழன்று நின்றிடும்
கட்டிள மங்கையின் கடுந்துயர் பெரிதே.
-------------

144. வடிநீர்க் கண்கள்


வடிநீருடன் வாடிடும்கண்களே
நொடிப்பொழுதிலும் நோய்மறந்துறக்கம்
கொண்டிடவேண்டாம் கொதித்தங்கெழும்
சண்டிக்கனவிடைத் தான் அவர்வரக்
கண்டுமே நாளைக் கடுந்துயர்மேலும்
மண்டியே வளரவும் மாழ்குமுளமே எனவாங்கு
உறக்கமும் வெறுத்தே உருகிடும்
நிறைத்திரு மடந்தை நீள் துயர் பெரிதே.
------------

145. பொன் வண்டு


இன்பமெனும் பொன்வண்டு
கண்டவுடன் ஆங்கதனைக்
கூண்டினிலே போட்டடைத்து
மாண்டொழியச் சூழாதே :
வான்வெளியின் வண்டதுவும்
கூன் சிறையில் வாழாதே
எல்லோர்க்கும் இசைபொழியச்
சொல்லாமல் செய்திடுவாய்.
மக்களெலாம் களிகூர்ந்தால்
மிக்குயரும் மகிழ்வுனக்கே.
பொன்வண்டும் நலமோங்கும்
பொன்னாடாம் இவ்வுலகும்.
--------------

146. வாழிய


வெடித்தது பெரும்புயல் வெருண்டது நெஞ்சம்
இடித்தது வானம் இருண்டது வாழ்வு
அகல்விளக் கதுவும் அணைந்தே மாய்ந்தது:
அகதியாய் நின்றே அலறினேன்: 'அந்தோ '
என்றிரு கரங்களும் ஏந்தியே, விழிநீர்
கன்றிட வெதும்பிக் காரிருளிடையே
வானினை நோக்கினேன் : 'வேகமாய் வந்து
கா' வெனக் கூவினேன்: கருணையாய்' என்றேன்;
எங்கிருந் தோநீ வந்தனை; என்முன்
கங்குலைப் போக்கி நின்றனை; ஆகா!
இடியும் புயலும் எனக்கருள் புரியநீ
எடுத்தபே ரறத்தின் கொடியெனக் கண்டேன்.
வாழிய தருமம் வாழிய கருணை!
வாழிய உன்றன் மருள்விளை யாட்டே!
----------------

147. மழை கண்ட மயில்


மழைகண்ட மயில் போலென் உள்ளம்
        வளர் எண்ண மெனும் வண்ணம் பலவும்
தழைநீலம் ஒளிர்தோகை வானில்
        தடையின்றித் திசைதோறும் விரிய
நாதனவன் தரிசனமே நாடி
        நடனங்கள் பரவசமாய் ஆடும்;
காதலனை இதுகாறும் காணேன்,
        காணுவேன் என்றாடும் உள்ளம்,
கருமேகம் ககனமிசை உருமிக்
        காரிடியும் பேரிடியும் செய்யும்;
விரைமின்னல் கொடிமின்னல் மழையும்
        வெளியெங்கும் நுரைகூடப் பெய்யும்;
அன்பெனுநல் வெண்புறவு கூட்டில்
        அஞ்சியே நாவிழந் தடையும்;
துன்பவொலி செவிகுடையும் தவளை;
        சோர்வுறா தாடுமென் உள்ளம்.
(தாகூரின் கவிதை ஒன்றைத் தழுவியது. )
------------

148. மகிழ்வேன்


இம்மியள வென்றாலும்
        வளர்ந்துள்ளேன் இன்றென்றால்
வெம்பிழைகள் இழைத்தவெலாம்
        பொறுத்திடலாம் ; மேன்மேலும்
வாழ்வெல்லாம் சோதனையாம்
        மதிகலக்கும் நெருப்பாற்றைக்
காழ்வயிரப் பெருந்தேக்கின்
        கறையானுக் கிளைக்காத
திண்மையுடன் உலகிடையே
        சென்றேறும் பேராண்மை
கொண்டிருந்து புடத்தீயில்
        குலையாமல் மனக்குரங்கின்
சேட்டையெல்லாம் மடைமாற்றிச்
        செம்மைமெரு கேறிடவே
வீட்டுவழி நெடும்பயணம்
        விரற்கடையில் நூற்றிலொன்று
எட்டிவைத்தா லும்போதும் ;
        என்னுளத்தின் பண்பாடு
நெட்டுழவு பலவடித்துக்
        கட்டியெல்லாம் தட்டிவிட்டுப்
பண்பட்ட செய்போலப்
        பலன் தரவே மெல்லமெல்லக்
கண்ணெட்டாச் சிற்றளவில்
        களையாமல் கோணாமல்
வந்தவழிச் சுழலாமல்
        வழுக்கியொரே படுகுழியில்
அந்திசந்தி வீழாமல்
        அடியிட்டால் மகிழ்வேனே.
----
காழ் - உரம், புடத்தீ- வாழ்வில் ஏற்படும் சோதனைகள். செய் நிலம். முன்னேற்றம் சிறிதளவு
நாள்தோறும் நடந்தாலும் திருப்தி கொள்ளலாம்.
------------

149. கெண்டை மீன்


கெண்டைமீன் மின்னிடக்
        கண்டேன் கண்டேன்
கேணிக்குள் வாழ்க்கையும்
        கண்டேன் கண்டேன்
தொண்டையா மிடிப்புலி
        வாழ்வதுங் கண்டேன்
தூங்கிருள் கானகத்
        துன்பமுங் கண்டேன்
நாரைநீர் நின்றிடக்
        கண்டேன் கண்டேன்
நம்பிக்கை வாழ்வினில்
        கொண்டேன் கொண்டேன்
நாறுமீன் போல்மடு
        நனவிலிச் சிறுவாழ்வும்
கானத்தீக் கொல்புலிக்
        காட்டுக் கொடுவாழ்வும்
கூனிப்பேய் என்மனக்
        குறையிவை என்றாலும்
நீர்மடு தனைவிட்டும்
        நிலக்கறை தனைவிட்டும்
நாரைபோல் வான்வெளி
        நீலத்துச் சிலவேளை
ஏறிப்ப றந்தங்கே
        எட்டாத கோட்டைகள்
கூறப்ப டாவின்பம் -
        கூட்டிடு மல்லவோ?
----
மனத்தின் குறைகள் பல. நனவிலி மனமாகிய அடி மனத்தின் சிறுமைகளும் பல. மடுவிலே
மீன்களைப் போல அடி மனத்தில் எத்தனை எத்தனை இழிவுணர்ச்சிகள் மறைந்துள்ளன! மனத்தின்
விலங்குணர்ச்சி இன்னும் மாறவில்லை. இருப்பினும் நாரைபோல வானில் சில சில சமயங்களில்
பறந்து உயரின்பம் கூட்டுவது மனமல்லவா?
-------------

150. பாட்டு


பாட்டெழுதித் தூதெனவே
        பாங்குடனே நானனுப்ப
        - நீயுருகிப்
பாட்டதனைப் பாடுகின்றாய்
        பாட்டாக நானிருந்தால்
        - தடைகடந்துன்
பவளவாய் மணந்திடுவேன்
        பஞ்சணையும் நிறைந்திடுவேன்.
----------------

151. சோதியே சுடரே


எங்கும் நிறைந்தெல்லை இல்லாமற் பாழ்வெளியில்
கங்குல் பகலெல்லாம் கடந்து நின்ற பேரொளியே
மருளுற்ற கண்ணுடையேன் வலிகுறைந்த பார்வையினேன்
விரிபுவனம் தாண்டி நிற்கும் பரஞ்சோதி யான் வேண்டேன்
மின்மினியாய் எக்காலும் என்னகத்தே நின்றிடுவாய்
இன்பத்தும் துன்பத்தும் இப்பொறியின் சுடரொளியில்
ஆடாமல் அவியாமல் அடியிருட்டு முழுகாமல்
கோடாமல் நெறிசென்று குறிக்கோளை எய்துவனே.
----------------

152. சந்திப்பு


காதலனைச் சந்திக்கக்
காட்டுவழி நான் சென்றேன் -
நெற்றியிலே சுட்டி
நீள் விழிக்கு அஞ்சனம்
காதிலே வைரம்
கன்னத்தில் நறுஞ் சுண்ணம்
கழுத்திலே பொன்மாலை
கைகளிலே மின் வளையல்
கால்களிலே பாதசரம்
கருங்கூந்தல் மலர்க்காடு
நீல வண்ணப் பட்டாடை
நித்திலத்தில் தனி மாலை
மேனிப் பொன் நிறக் கச்சு
விம்முகின்ற மார்பலம்பும்
மலர் மாலை மெல்விரலில்
மாணிக்கக் கணையாழி
காதலனைக் காணக்
காட்டு வழி நான் சென்றேன்.

அணியெல்லாம் குறைவின்றி
ஆர்வமுடன் சென்றேன்
அழகினிலே அவருள்ளம்
ஆழ்ந்துவிடும் என மகிழ்ந்தேன்
காதலனோ வரவில்லை
கலங்கி நான் ஏமாந்தேன்
அழுதேன் நான் மனமுடைந்து
அவரையே காணாமல்

அணிகள் எல்லாம் களைந்தெறிந்தேன்
அஞ்சனத்தைத் துடைத்தொழித்தேன்
மலர்க்காட்டைக் குலைத்தேன்
மணிப்பட்டைக் கிழித்தேன்
நாதா நாதா என்று கதறினேன்
என் தலை அலங்கோலமாகக் கிடந்தது
ஓலக்க மெல்லாம் மறைந்தது
உள்ளத்திலே காதற்கனல் பொங்கிற்று
கண்ணீர் பெருகிச் சுண்ணம் கரைந்தது
அழகெல்லாம் போயிற்று
நாதா நாதா என்று தேம்பினேன்
அவரையே எண்ணி உள்ளம் குமுறினேன்
அவர் வந்தார்.
--------------

153. சத்தியம் ஒன்றே


சத்தியம் ஒன்றேயென் கையினில் ஆயுதம்
        தரணியை வென்றிடத்தோள் கொட்டி வந்துளேன்
நித்தியன் நினைவதே நெஞ்சினில் கவசம்
        நேர்மையும் தர்மமும் அஹிம்சையும் அம்புகள்
அன்புதான் என்றான் பிரம்ம நல் அஸ்திரம்
        அதற்கெதிர் நிற்பதும் வேறெதும் உண்டோ
வன்பகை நாகமாம் மறத்தினை, அநீதியை
        மாநிலத் தெங்ஙனும் நின்றிடா தோட்டுவேன்
உத்தமத் தின்பவாழ் வனைவரும் எய்தவே
        ஓங்கிடும் சாந்தியின் ஆட்சியை நாட்டுவேன்
சத்தியம் ஒன்றேயென் கையினில் ஆயுதம்
        தரணியை வென்றிட மார்தட்டி நின்றுளேன்.
-----------------

154. ஒளியைப் பார்


கடவுள் இருக்கிறார் -
மலரின் உள்ளத்தில்
குழந்தையின் புன்சிரிப்பில்
அமுதமயமான உஷையின் மலர்ச்சியில்
இவை கடவுளைக் காண்பிக்கின்றன;
அழகே அவர் உயிர்மூச்சு,
அன்பே அவர் கோயில்,
அவர் படைப்பில் உள்ள எல்லாப் பொருள்களும்
அவர் கோயில்,
என இவை நமக்குக் காண்பிக்கின்றன.
இருளுக்கு முகங்கொடாதே
எல்லையற்ற காலை ஒளியைப் பார்.
(ஆங்கிலக் கவிதை ஒன்றின் தழுவல்.)
--------------

155. வீர சுதந்திரம்


வீரசுதந்திரம் பெற்றுவிட்டோம் - இந்த
        மேதினிமேல் நாம் தலை நிமிர்ந்தோம்
பாரத தேவியும் முகம் மலர்ந்தாள் - அவள்
        பாதத்தைப் போற்றியே பாடிடுவோம்

வேதமும் கீதையும் தோன்றினவாம் - இங்கு
        மெய்ந்நெறி வள்ளுவன் அருளினனாம்
ஓதுமெய்ஞ் ஞான நுண் கலைகளெல்லாம் - எங்கும்
        ஒப்பிலா தோங்கிய நாடிதிலே

ஆயிரம் ஆண்டுகள் மாசடைந்தோம் - நல்ல
        ஆர்வமும் முயற்சியும் தேய்வடைந்தோம்
போயின நாளெலாம் போயொழிக - இனிப்
        புதியதோர் பாரதம் செய்திடுவோம்

காவிரி கங்கைபோல் பெருகிவரும் - எங்கள்
        கண்மணி நாடிதன் பண்பினிலே
யாவரும் நின்றுமே உலகமெலாம் - இன்பம்
        மேவிட நல்லறம் ஓதிடுவோம்

காந்திமகான் சொன்ன சாந்தவழி - இந்தக்
        காசினி மேலெங்கும் நிலைபெறவே
மாந்தர்கள் யாவரும் தோழர்களாய் - அன்பு
        வாழ்வினில் நின்றிடப் பணிபுரிவோம்.
------------

156. ஓ மீகாமா


ஓ மீகாமா
சாந்தி என்னும் பரந்தகடல் என் கண்முன்பு தோன்றுகிறது
இத்தோணியை அதில் மிதக்க விடு.
என்னை என்றும் பிரியாத தோழா
உன் மடியில் என்னை வைத்துக் கொள்
காலமென்னும் முடிவற்ற எல்லையற்ற பாதையில்
துருவதாரகை தனது ஒளியைப் பொழிக.
வீட்டின்பம் நல்கும் அருளாளா
உனது கருணையும் பேரன்பும்
எனது இறுதி யாத்திரைக்கு வேண்டிய
வற்றாத செல்வமாக இருக்கட்டும்.
உலகத் தளைகள் அறுபடுக
அகிலாண்டம் தனது கரங்களில்
என்னை அணைத்துக் கொள்ளட்டும்
அறிவுக் கெட்டாத பரஞ்சுடர் முன்பு
அச்சமின்றி நிற்க எனக்கு வன்மை அருள்வாயாக!
(தாகூரின் கவிதையை அடியொட்டி எழுதியது.)
--------------

157. எழு கடலும்


எழுகடலும் வற்றிடினும் என்காதல் வற்றாது
அழிவறியா உயிரூற்றென் றன்றுரைத்து மருங் கணைந்தார்
போனதிசை நானறியேன் புதுப்புனலில் புகுந்தாரோ
வானவில்லுப் பேச்சழகர் மறைவதிலும் அது வானார் -
குடியல்ல குலமல்ல குணங்கெட்டேன்; இனிக் கெடவோர்
படியுண்டோ ? பாலையெனப் பச்சையுளம் தீய்ந்தழிவேன்;
நயப்புரையில் வீழாத நன்மதியும் நெஞ்சுரமும்
அயர்வறியா நிறைத்தெளிவும் அழகெனவும் அணியெனவும்
கொண்டிருந்தால் என்வாழ்வு குலைந்திடுமோ? பட்டிமனச்
சண்டியினால் பீடழிந்தேன் சாவொன்றே இனிவாழ்வாம்.
-----------

158. அழகும் அன்பும்


அழகுடையாள் என்றுரைத்தீர் அன்புள்ளம் உடையாளோ?
அழகை நான் கண்டதில்லை அன்பில்லாத் தோற்றத்தில் -
காமனுமே கண்மயங்கும் கட்டழகும் உள்ளமதில்
தாவியெழும் கருணையன்புத் தண்சுடரில் தோயாத
இருள் செறிகா னென்றிடிலோ ஏதுபயன்? ஏதின்பம்?
மருள் விழியும் கனியிதழும் மனம் சுரக்கும் அன்பினிலே
மலர்ந்தறியாப் புன்முகத்தில் வாழ்வு தரும் அழகுண்டோ ?
புலர்ந்தவுடன் கரந்துறையும் புலிவடிவம் நன்றெனினும்
கொடுமையினால் அதன் செவ்வி குறைபட்ட தறியோமோ?
நெடும்பிறவிப் பிணிமாற்றும் நிலையன்பே அழகாமால்.
--
அன்பே உண்மையான அழகு தருகின்றது. புலர்ந்தவுடன் - பொழுது விடிந்ததும். கரந்துறையும் - மறைந்து வசிக்கும். செவ்வி - அழகு .
-------------

159. காதல் அனல்


காதல் அனல் தேனைக்
        கண்டு பருகிடவே
மாதரசே செய்தாய்
        மதுரம் உன் வடிவம்

அன்பு வறுமையில் நான்
        அல்லலுறும் போதும்
துன்பக் கடலினிலே
        சுழலும் போதினிலும்

இன்பத்துளி ஒரு கால்
        என்னுடல் தீண்டிடினும்
எந்தக் கணமும் அது
        இதயம் நீங்காதடி

வெந்து மடிந்த பின்பு
        மேவும் பிறவியிலும்
சிந்தை தனிற் பொறிப்பேன்
        திண்ணம் அழியாதே
-------------

160. வேல்


வேல் வேல் வேலென்று சொல்லு - பழ
வெவ்வினையை இக்கணமே கொல்லு
வேல்வேல் வேலென்று சொல்லு-மிகு
வெற்றியுடன் வாழ்வினிலே நில்லு

வேல் வேல் வேலதுவே சக்தி - அதை
வேண்டிப் பெறும்வழியே பக்தி
வேல்வேல் வேலதுவே ஞானம் - அதன்
மேன்மை உணர்ந்தநிலை மோனம்

வேல் வேல் வேலென்று சொல்லு - வளர்
வீரசக்தி யாலெதையும் வெல்லு
வேல் வேல் வேலென்று சொல்லு - ஞான
வேலினருள் ஜோதிவாழ்வில் நில்லு

நீலமயில் ஏறிவரும் வேலன் - அன்னை
நீலியுமை தந்த சுடர் பாலன்
சீலநெறி நின்றவன் தன் பாதம் - துதி
செய்தவுடன் தந்தருள்வான் போதம்

குன்றுதொறும் ஆடும்முரு கேசன் - நம்
குறைகளைப் போக்கும் வள்ளி நேசன்
என்றுமவன் நீண்ட புகழ் பாடு - உனக்
கிங்கொருவர் இல்லை இல்லை ஈடு

வேல் வேல் வேலென்று சொல்லு - இனி
மேலுனக்குத் துன்பமேது சொல்லு
வேல்வேல் வேலென்று சொல்லு- இன்ப
வீட்டுநிலை பெற்று வாழ்வில் நில்லு.
-------------

161. ஓடக்காரன்


“அரியதோர் ஓடம் செலுத்திடும் அன்பனே
பரிவுடன் என் மூகம் பார்த்து நீ அதனில்
ஏற்றியே அக்கரை சேர்க்கவும் இசைவாய்."
“வேற்றுவா கனங்கள் மிகப்பல உளவே?"
“அவையெலா மேறிநான் அலுத்தனன் ஆற்றினைத்
தவறிலா திம்முறை தாண்டவே விழைந்தேன்."
"உறுதியாய் நின்றால் உதவிடும் ஓடும்;
வருகநீ யானும் மகிழ்ந்த னன் உள்ளம்."
“எத்தனை எத்தனை இன்பமீன் இங்கே!
மெத்தக் களிதரும் வேடிக்கை எத்தனை!
சற்றுநான் ஆற்றில் தாவியே திளைப்பேன்."
"பற்றிடச் சூழ்ந்து பதுங்கிடும் வஞ்சக
மாயைகள் அறியாய் மனம்பறி கொடுத்துத்
தாயகம் சேரும் எண்ணமும் தவிர்வையோ?"
"தோணியிற்பலவாய்த் தொளைகளும் தோன்றின.
காணவும் கூசினேன் கலக்கியே வெள்ளம்
பாறையில் மோதிடப் பகரொணாத் தொல்லைகள்
மீறிய தந்தோ வேதனை பொறுக்கிலேன்."
"இவையெலா முன்றன் இச்சையின் விளைவே
சுவையிலா இன்பம் சுவையெனக் கொள்ளேல்."
"தத்தளித் தோடம் தளர்ந்ததே, ஐயகோ!
மெத்தவும் பயந்தேன் வேறினிச் செய்வதென்?"
"ஊன்றுகோல் என்றனை உறுதியாய்ப்பற்றுவாய்."
"ஈன்றதாய் போலவே என்னையும் காத்து
அன்புடன் ஓடம் செலுத்திடும் ஐயனே,
உன்னுடை வாழ்க்கை உரைப்பாய் எனக்கே;
உற்றார் உறவினர் ஊருடன் பேரும்
நற்றாய் தந்தையர் நலம்பிற வெல்லாம்
அறிந்திடப் பெரிதும் ஆர்வமாய் உள்ளேன்."
“மறந்தனை என்னை நீ ; மற்றுமோர் ஊரும்
பேரும் எனக்கிலை; பித்தராய்ப் பலரும்
ஊருடன் பேரும் ஒன்றல இரண்டல
ஆயிரம் கூறுவர்; அவையெலாம் பொய்யே."
“தாயும் தந்தையும் சாற்றிட வில்லையே?"
"என்னைப் பெற்றோர் யாருமே இல்லை;
என்றுமே யானும் பிறந்ததும் இல்லை."
“பித்தமோ விகடப் பேச்சிதோ அறியேன்
கைத்தலம் பிடித்த காதலி யாரோ?"
'பித்தனே யானும்; பெண்மணி நீயென்
உத்தமக் காதலி உணர்ந்திலை இன்னுமோ?"
“கரத்தினை மெல்லவே தீண்டிய கணத்தில்
வருத்திய இருள் திரை மாயமாய் விலகிட
ஓடமும் யாறும் ஒன்றையும் காணேன்;

வேடமாய்க் கனவாய் விளைந்தன வாழ்வினில்
உணர்ந்தேன் உண்மையை ஒப்பிலாத் தலைவ
குணஞ்சிறி தில்லேன் குறைகளே நிறைந்தேன்
என்னினும் ஏழையை அருளுடன் ஏற்றீர்
மன்னிய இன்பமாம் வானகங் கண்டேன்."
-----------------

162. துரிய நிலை


சூரியனில்லை சோதியுமில்லை
        சுந்தரமானதோர் திங்களுமில்லை
சாரும் நிழலெனச் சூனியத்துள்ளே
        சராசரமெல்லாம் மிதந்தனவே
அஸ்புடமான மனமெனும் வானில்
        அகிலமு மொன்றாய் மிதக்கையிலே
அகமெனும் வெளியில் நிரந்தரமாக
        அமிழ்ந்திடும் பின்னர் எழுந்திடுமே
முடிவினில் மெதுவாய்ச் சாயைகளெல்லாம்
        மகாலயமொன்றில் கலந்தனவே
துடித்திடுவதுநான் நானெனும்உணர்வே
        சிறிதும் வேறிலை துடிப்பிதையல்லால்
உணர்வுதானிதுவும் சூனியத்துள்ளே
        சூனியமாகவே ஒன்றியதே
உரைமனங்கடந்த துரியமாம்நிலை இதைச்
        சேர்ந்தவரேதா னுய்த்தறிவார்.
-------
சுவாமி விவேகாநந்தர் தமது அனுபவத்தால் கண்ட பேருண்மையை விளக்கி எழுதிய பாட்டின் பெயர்ப்பு.
---------------

163. ஜய ஹிந்த்


பல்லவி
ஜய ஹிந்த் ஜய ஜய ஹிந்த்
ஜய ஹிந்த் ஜய ஜய ஹிந்த் ஜய ஹிந்த்

அனுபல்லவி
ஜய ஹிந்த் ஜய என நாம் - தினம்
ஜய கோ ஷமு மதிர்வோம் ஜய ஹிந்த்

சரணம்
உலகோர் நனி புகழும் - தவ
        ஒளிசேர் எழி லுடைய
கலையால் மிகு மதியால் - உளக்
        கனிவால் உயர் நாடு ஜய ஹிந்த்

அறிவால் வரு திறலும் - அருள்
        அன்பால் வளர் பலமும்
நெறிசேர் மன நிறைவும் - பெரு
        நிலைகொள் தனி நாடு ஜய ஹிந்த்

அருளோர் நிறை மொழிகள் - உல
        கனைவோர் நல மடையத்
தருபா ரத மிதுவே - நம்
        தாயாம் திருநாடு ஐய ஹிந்த்
--------------

164. உன் குரல்


எத்தனையோ சொல்மாரி
        எத்தனையோ புலமையுரை
எத்தனையோ நூல்விளக்கம்
        எனைக்குழப்ப மிகவலுத்தேன் ;
எத்தனையோ திருத்தலங்கள்
        எத்தனையோ தீர்த்தங்கள்
எத்தனையோ மூர்த்தங்கள்
        அத்தனையும் பார்த்தயர்ந்தேன்;
வானவெளித் தாரகையில்
        வளர்நீல வாரிதியில்
மோன மலைக் காட்சியினில்
        முகையவிழும் மலர்வனப்பில்
உன் குரலைச் செவிமடுக்கும்
        உணர்வின்றி அலமந்தேன்
என்னிருளைப் போக்கவினி
        ஏதுசெய்வாய் அன்பொளியே?
------------

165. உறங்கிடலாமோ


உறங்கிடலாமோ - நீதான்
ஓடி அகக் கதவை நாடித் திறந்திடாமல் (உறங்கிட)

கறங்குபோல் வாழ்வினில்
        காலமெலாம் சுற்றி
அறங்கெட வாழ்ந்து பின்
        அனலிடை மறைவதோ (உறங்கிட)

பிறவியெடுத்த பயன்
        பெறுவதே அறிவாம்
பேதமை இருள்ஓடப்
        புரிவதே நெறியாம் (உறங்கிட)

மறலியை வென்றவர்
        மாண்புடை யோராம்
மானிட தேகத்தின்
        குறியிதுவே யாம் (உறங்கிட)

விழிப்புடன் வாழ்ந்தவர்
        வென்றியே பெறுவார்
சுழிப்பிலா அமைதியாம்
        சுகநிலை யெய்துவார். (உறங்கிட)
--------------

166. புது வாழ்வு


வானமெல்லாம் திரைச்சீலை மனக்கனலே வண்ணங்கள்
கூனியில்லா ஒருகுடும்பக் குறிக்கோளாம் தூரிகையில்
நவநவமாய்க் கற்பனையை நனவாக்கும் ஓவியங்கள்
புவியெல்லாம் போர்த்திடவே புதுவீடு படைத்திடுவோம்
அணுப்பொறிகள் அடித்தொண்டர் அன்பொன்றே ஆயுதமாய்ப்
பிணிக்குறையும் பஞ்சமெனும் பேய்ச்சிறுமை யில்லாமல்
இன்பமொன்றே எங்குமென எல்லோரும் கேளிரென
நன்மையொன்றே செய்திடவே நயம் சிறந்த போட்டியெழ
பொங்கிவரும் புன்னகையும் புரையில்லா மெய்மொழியும்
பங்கமில்லாப் பெருவாழ்வும் பாரென்னும் வீடிதனில்
நாட்டிடவே எழுந்திடுவீர் நாற்றிசையும் விரைந்திடுவீர்
நாட்டமெலாம் குறிக்கோளில் நலமெல்லாம் பெருக்கிடுவீர்
பிரிவுகளும் பூசல்களும் பேதமையாம் சுயநலமும்
குறுநெறியும் வஞ்சனையும் குள்ள நரிச் சூழ்ச்சிகளும்
பொடிபடவே முனைந்திடுவீர் புதுவாழ்வு தோன்றிடவே
திடமாக முன்செல்வீர் ஜெயபேரி ஒலித்ததுபார்.
-----------

167. உறக்கமே துறக்கம்


கொஞ்சினார் குழைந்தேன்; கொதித்திடும் அன்பினால்
கெஞ்சினார் மிழற்றினார். உள்ளம் கிளுகிளுத்
தரணெனும் நாணம் அஃகவும் துறந்தேன்;
சரணெனத் தம்மையே அர்ப்பணம் புரிந்திடும்
அடியரின் பான்மையில் அலம்பணி மார்பகக்
கடிமிகு கோட்டையின் கபாடம் விடுத்தேன்;
கவ்விடுங் காதல் கண்வழிக் கனன்றிடச்
செவ்விதழ் சுவைத்துச் செவியணி தொட்டுக்
கன்னப் பட்டினைக் கழுத்து வெண் சங்கினை
மன்னிய திருவுடை மலர்க்கரம் துழாவினார்;
நெஞ்சகம் விம்மிட நிமிர்ந்தேன்; ஐயகோ
வஞ்சகக் கனவின் மாயைதான் இதுவெனக்
கொஞ்சம் முன்பு நான் குறிப்பறிந் திருப்பின்
துஞ்சரித் தெழுவனோ தூக்கம் துறக்கமாம்.
------
அஃகவும் - தேயவும். கபாடம் - கதவு. துஞ்சரித்து - கண் விழித்து. துறக்கம் - சுவர்க்கம்.
--------------

168. கருணை


மனநிறைவு எனக்கேது?
என்னை நீ அவ்வாறு படைத்துள்ளாய்
அதுவே நின் திருவுள்ளம்
இயற்கையின் எழில் நடனத்திலே
குபேரப் பெருஞ் செல்வக் களிமயக்கிலே
பட்டம் பதவி மாயச் செருக்கிலே
கலையாம் இன்பத் தேன் வாரியிலே
கன்னி மதுப் பேரழகினிலே
குழந்தைத் தண்ணமுதச் சிரிப்பினிலே
புகழ் என்னும் போதையிலே
ஏதெனக்கு மன நிறைவு?
என்னை நீ அவ்வாறு படைத்துள்ளாய்
உள்ள மங்கே ஒன்றி ஊன்றவில்லை
ஏக்கம் ஏக்கம் ஒரே ஏக்கம்
எதற்கோ ஏங்கித் தவிக்கிறது என் ஆன்மா
என்னை நீ அவ்வாறு படைத்துள்ளாய்
அதுவே நின் திருவுள்ளம் ; அதுவே நின்
குறிக்கோள் இறைவா, நின் கருணைதான் என்னே!
----------

169. தோற்றம்


அல்லியும் தாமரை அரசியும் மலர்ந்து
எல்லையில் லாதவோர் எழில்நிறை கன்னிபோல்
பொங்கும் வனப்புப் பொய்கையைக் கண்டு நான்
அங்கதன் முறுவலில் அமைதியில் குழந்தைத்
தன்மையில் உள்ளம் தளைப்படப் பொழுது
சென்றிடக் கண்டும் சிலையாய் நின்றேன்
குரலினிற் கவலையே கொழுந்திடக் கூவியே
ஒருதாய் ஆங்கே ஓடியே வந்தனள்
மைந்தனைக் காணாத் துயரது மண்டிட வந்தவர்
தமையெலாம் வருந்தியே கேட்டுத்
தேடியே வந்தனள் தென்திசைப் பொய்கையின்
கோடின கரையினில் குறும்புதர் மறைவினில்
கண்டனள் ஆடைகள் கதறியே சாய்ந்தாள்
உண்டதோ சிறுவனை வண்டு சூழ் பொய்கையும்
வாய்பிளந் தந்தோ மகவினை விழுங்கும்
பேய்தனக் கித்தனை பெண்மையேன் பொலிவேன்?
கூற்றம் மயக்குருக் கொண்டதோ அன்றித்
தோற்றம் உண்மையைச் சொல்வதே இல்லையோ?
-----------

170. இணையிலாக் காதலன்


எண்ணம் உள்ளம் எல்லாம் நிறைந்து
தண்ணளி நோக்குடன் சலியா தென்னை
அல்லும் பகலும் அனைத்திடக் காத்துள
எல்லையே இல்லாக் காதலன் அறிதி கொல்?
பிழையிற் பிரியான் பேதமை முனியான்
அழகிலும் இளமை யழைப்பிலும் முதுமை
அனைத்திலும் காதல் அணுவும் குறையான்
தினைத்துணை வெறுப்போ திரிந்தவோர் நோக்கோ
சுடுசுற் குறிப்போ சோர்வோ இல்லான்
மிடிமையாம் இருளிலும் மிகுவளப் பொலிவிலும்
பிணியின் துயரிலும் பெருநலக் களிப்பிலும்
குணத்திலும் கீழ்மைக் குழியிலும் தவறான்
புடஅனல் வாழ்வினில் மருகிடும் பொழுதெலாம்
திடநனி பெற்றுக் கருத்தினில் தெளிவாய்
உருவம் நிறைந்தே வருவான் அவனே
ஒருதனி யண்ணல் உவமையொன் றில்லான்
-------

171. வாழிய உலகம்


வாழிய உலகம் வாழிய அன்பறம்
வாழிய உயர்நல மாண்புகள் எல்லாம்
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக
புன்மையும் சிறுமையும் பொன்றியே மறைக
இன்பமும் எழிலும் கலையுடன் ஓங்குக
எம்மனோர் ஆகவே அனைவரும் வாழ்க
பஞ்சமும் பசியும் துஞ்சியே தொலைக
பார்மிசை என்றும் அமைதியே நிலவுக
உண்மையும் கருணையும் உளந்தனில் நிறைக
உன்னதக் கொள்கை சேர் வாழ்வதே மலர்க
மாநிலம் பேரின்ப வீடதாய்ப் பொலிக
மக்கள் எல்லோரும் இறையருள் பெறுக.
----------------


This file was last updated on 6 Nov. 2019
Feel free to send the corrections to the Webmaster.